
நாம் அனைவரும் சாதிக்கப் பிறந்தவர்கள். இன்று உடனே செயல்பட முடியவில்லையே. சாதிக்கவில்லையே என்று கவலைப்படுபவர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் ஏன் வீணாகக் கவலைப்படவேண்டும். எப்பொழுதும், எதற்கும் கலங்காத மனம் வேண்டும் கவலைப்படுவதால் எதையும் சாதித்துவிட முடியாது.
இன்று இல்லாவிட்டால் என்னங்க! நாளை நிச்சயம் நீங்கள் சாதிக்க முடியும்! இந்த வைராக்கியம் மட்டும் இருக்கட்டும். இடையில் எந்தப் பிரச்சனை வந்தாலும் ஊதித் தள்ளிவிடுவீர்கள். நடந்ததை எண்ணியும். எதிர்காலத்தை நினைத்தும் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கமாட்டீர்கள்.
கவலைப்படுவதால் உங்கள் மனதும் பலம் இழந்து போய்விடுகிறது. உங்களின் திறமையை மறைத்து விடுகிறது. அதனால் என்ன பயன்.
வாழ்க்கையில் எப்பொழுதாவது நடந்த நிகழ்வால் மனம் பாதிப்படைந்திருக்கும். அதனால் மனம் அதிர்ச்சிஅடைந்திருக்கும் அதற்குள்ளேயே நம் எண்ணங்களும் சுழன்று கொண்டிருந்தால், மற்ற செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும் அல்லவா!
உலகில் கவலை இல்லாத மனிதனே இல்லை எனலாம். இருப்பினும் கவலைக்கு முக்கியத்துவம் கொடுத்து விடக்கூடாது அதை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மேலும் அவரைச் சுற்றி உள்ள சுற்றமும், நட்பும் கூட மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எதுவாக இருப்பினும் தன்னைத்தானே தேற்றிக்கொண்டும். அந்தக் கவலையிலிருந்தும் வெளியே வந்துவிடவேண்டும்.
ஒருவர் நேர்முகத் தேர்வுக்குச் சென்றார். நல்ல நிறுவனம். நல்ல ஊதியம். வேலை கிடைத்தால் அவர் வாழ்க்கை நன்கு அமைந்துவிடும் என்ற எதிர்பார்ப்புடனும். நம்பிக்கையுடனும் தம்மைத் தயார் செய்துகொண்டு சென்றார். அவரும் நன்கு படித்தவர். நல்ல திறமைசாலி நிறுவனம் எதிர்பார்க்கும் அனைத்துத் தகுதிகளும் அவரிடம் உள்ளது. நேர்முகத் தேர்வில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, நல்லமுறையில் பதிலையும் கூறிவிட்டார்.
இவ்வளவு இருந்தும் அவர் தேர்வு செய்யப்பட்டு வேலை தந்து ஏற்றுக் கொள்ளத் தவறிவிட்டது. என்திறமைக்கும், முயற்சிக்கும் இதைவிட நல்ல நிறுவனத்தில் வேலை பார்ப்பேன். நிச்சயம் வேலை எனக்குத் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அடுத்த கட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறார். ஒரு நாள் அவர் எண்ணப்படி வெற்றியும் பெறுகிறார்.
தோல்வியைக் கண்டு அவர் தளர்ந்து இருப்பின் வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. தேவை இல்லா கவலைகள், உங்கள் தகுதியை மறைத்துவிடும். எனவே இனிமேலாவது கவலையைத் தூக்கி எறிந்துவிட்டு, கலகலவென இருங்கள்.
உங்களின் சிரித்த முகமே வெற்றியின் வரங்கள் இதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை முழுவதும் சாதனையாளராகவும், வெற்றி பெற்ற மனிதராகவும் உலகை வலம் வரலாம்.
சூ.. மந்திரகாளி! கவலையே ஓடிப்போ! என நினைத்துச் செயலில் இறங்குங்கள். வெற்றிக் கனியைப் பறித்துக்கொள்ளுங்கள்.