நாம் எந்த காரியம் செய்தாலும் அதில் விடாமுயற்சியும் அதனுடன் சேர்ந்து தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி தானே சேர்ந்து வரும். அதற்கு உதாரணம் முயல் ஆமை கதையை சொல்லுவார்கள். அதைவிட நம் மனித மக்களிடமே முயற்சியால் வெற்றி பெற்றவர்கள் பல உள்ளார்கள். மிக சாதாரண நிலையில் இருந்து பெரிய தொழிலதிபர்கள் ஆன அனைவரும் பலர் தன் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும்தான் வெற்றி புரிந்து சாதனை படைத்துள்ளார்கள்.
சுய முயற்சியால் முன்னேறிச் செல்வதற்கு முட்டுக்கட்டை போடுவது எப்பொழுதும் உலகத்தில் இயல்பாகும். எனினும் சுய முயற்சிக்கு கண்டிப்பாக பலன் உண்டு. வரலாறு காட்டும் உண்மையும் இதுதான்.
நீந்த கற்றுக்கொள்ள விரும்புபவன் சில நாட்கள் நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒரு நாள் மட்டும் பயிற்சி செய்தவன் உடனே கடலில் நீந்துவதற்கு துணிய மாட்டான். மாறாக அநேக தடவைகள் முயற்சிகள் செய்யவேண்டும். அப்போதுதான் நீந்தக்கூடிய சக்தி கிடைக்கும்.
இதற்கு ஒரு உதாரணமாக திகழ்பவர் இந்தப் பெண்மணி. விவசாயக் கூலித் தொழிலாளியான சின்னப்பிள்ளை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே தன்னுடன் பணியாற்றிய பெண் விவசாய தொழிலாளர்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவி குழுக்களாக செயல்பட செய்து அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு வழி வகுத்தார். இவரது இந்த செயல்பாடு வெளியே தெரிய வந்த பிறகு பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டில் மகளிர் சுய உதவி குழுக்களின் முக்கியத்துவம் உணரப்பட்டது. இதுபோல் பலரின் முயற்சி வாழ்க்கையில் தன்னம்பிக்கையை தந்து முன்னேற்றத்தையும் தந்துள்ளது.
ஐநூறு ரூபாய் கொடுத்து துணி வாங்கியதற்கு கட்டப்பை கொடுத்தால் சிலர் மகிழ்வார்கள். சிலர் ரயிலில் எதிர்பார்த்த நாளில் டிக்கெட் கிடைத்தால் குஷியாவார்கள். இப்படி சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் சந்தோஷப்படும் நாம் பெரிய விஷயங்களை முயற்சிப்பதே இல்லை. நம்மால் முடியும் எதையாவது புதுசா செய்யலாம் என்று எண்ணம் தோன்றாது. அப்படி ஒருவேளை வந்தாலும் நமக்கு எதுக்குப்பா வேண்டாத வம்பு என ஒதுங்கிக் கொள்வோம். இது மாதிரியான மனம் கொண்டவர்கள் எதிலும் வெற்றி பெற முடியாது.
தரையில் நடக்கும்போது விழுந்தால் மண் தான் ஓட்டும். நட்சத்திரங்களைத் தொட முயற்சி செய்யுங்கள். முடியவில்லை என்றால் நட்சத்திரங்களின் தூசாவது மிஞ்சுமே. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நமக்கு தேவை தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்தான் என ஒவ்வொருவரும் உணர வேண்டும்.