பொறுமைக்கு உதாரணம் மூங்கில்... இது கதை அல்ல, நிஜம்!

Bamboo
Bamboo
Published on

பொறுமைக்கு நிறைய உதாரணங்கள் இருக்க, மூங்கிலை உதாரணமாய்க் கூறுவதால் வியப்பில் ஆழ்ந்திருப்பீர்கள் அல்லவா! வியப்பாக இருந்தாலும் உண்மை இதுதான். பொறுமையின் அவசியத்தை எடுத்துரைக்கும் மூங்கிலின் வளர்ச்சியை ஆராய்கிறது இந்தப் பதிவு.

“பொறுமை கடலினும் பெரிது” என்ற திருவள்ளுவரின் வாக்கு இங்கு எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது என்றே தெரியவில்லை. ஏனெனில் இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் எதைச் செய்தாலும் பொறுமையின்றி மிகவும் அவசர அவசரமாகச் செய்கின்றனர். ஆனால், பொறுமை வெற்றியைப் பெற்றுத் தரும் என்கிற உண்மையை உணர மறுப்பது, தோல்வியை ஒப்புக் கொள்வதற்கு சமம். இவ்வுலகில் பொறுமையை ஆயுதமாக்கி வெற்றி கண்டவர்கள் பலபேர் இருக்கிறார்கள்.

வெற்றி கண்ட மனிதர்கள் மட்டுமல்ல தாவரங்களும் பொறுமையை நமக்கு சொல்லிக் கொடுக்கின்றன. அவ்வகையில் பொறுமைக்கு மிகச் சிறந்த உதாரணமாக கருதப்படுவது மூங்கில்தான். புல் வகைகளில் மூங்கில் மிகவும் உயரமாக வளரக் கூடியது. எந்தத் திசையில் இருந்து காற்று வீசினாலும், மூங்கில் ஒரே மாதிரி எதிர்கொள்ள முடியும். மூங்கில் விதைகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்த பிறகு முதல் ஆண்டில் வெளியில் நமக்கு எந்தவித மாற்றமும் தெரியாது. ஆனால், மற்ற தாவரங்கள் நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும். பருவங்கள் மாறிக் கொண்டே இருந்தாலும் முதல் நான்கு ஆண்டுகள் வரை மூங்கில் வளரவே வளராது. மூங்கிலை வளர்ப்பவர் நான்கு ஆண்டுகளுக்கு பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஐந்தாவது ஆண்டின் தொடக்கத்தில் மூங்கில் மெல்ல முளைக்கத் தொடங்கும். பிறகு ஒரே ஆண்டில் 80 அடி உயரம் வரை வளர்ந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஆம், இத்தனை காலம் வளராத மூங்கில் எப்படி ஐந்தாம் ஆண்டில் இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறது என்று ஆச்சரியமாக உள்ளதல்லவா! இதற்கெல்லாம் காரணம் மூங்கிலின் பொறுமையும், அது தன் வேர்கள் மீது கொண்ட நம்பிக்கையும் தான். முதல் நான்கு ஆண்டுகளில் பூமிக்கு வெளியில் மூங்கில் வளரவில்லையே தவிர, பூமிக்கு உள்ளே தனது அடித்தளத்தை மிகவும் வலிமையாக அமைத்துக் கொண்டது.

இதையும் படியுங்கள்:
பொறுமை வேண்டும்... பொறாமை வேண்டாம்!
Bamboo

விதை விதைத்து தண்ணீர் ஊற்றியதும் சடசடவென வளர்ந்து விட்டால், இதன் உயரத்தை வேர்களால் தாங்க முடியாதல்லவா! அதனால் தான் வேர்களை முதலில் பலப்படுத்திக் கொண்டது மூங்கில். வேர்கள் பலமானதும், இனி எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் தாங்கிக் கொள்ள நான் தயார் என்று வேர்கள் தன் பிடிமானத்தை பூமிக்குள் இறக்கியிருக்க, அசுரத்தனமாக வளர்ச்சியை நோக்கி மூங்கில் பயணிக்கும்.

நான்கு ஆண்டுகள் பொறுமை காத்ததால் தான் ஐந்தாவது ஆண்டில் மூங்கிலின் வெற்றி நிச்சயமானது. இந்தப் பொறுமை தான் மூங்கிலை தடம் புரளாமல் பாதுகாக்கிறது.

பொறுமையாக இருப்பது ஒரு தவம். இத்தவத்தைப் பின்பற்றிய மூங்கிலை பொறுமைக்கு மிகச் சிறந்த உதாரணமாக கூறுவதில் தவறே இல்லை. நாமும் மூங்கிலைப் போல் பொறுமையாக இருந்து, நமக்கான வெற்றியை நிலையானதாகப் பெற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com