-ம. வசந்தி
நேரம் தவறாமல் என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதுமே கதாநாயகன்தான் -இது கர்மவீரர் காமராஜர் வாக்கு
நேரம் தவறாமை என்பது இன்றைய அதிவேக யுகத்தில் மிக அவசியமான ஒன்று. ஆனால் இதனை யாரும் சட்டை செய்வதே கிடையாது என்பது அதிர்ச்சி தரும் உண்மை.
"பஸ் 9 மணிக்கு புறப்படும் என்று போட்டு இருக்கு. அப்படியான அதுக்கு இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு.அதுக்குள்ள போயிட முடியுமா?"
9 மணின்னா சரியா புறப்பட்டு போயிடுமா? எப்படியும் 5 அல்லது 10 நிமிஷம் லேட்டாதான் வண்டியை எடுப்பான். அதுக்குள்ள போயிடலாம் என்று பேசுபவர்கள் ஐந்து நிமிடம் கழித்து பேருந்து நிலையத்திற்கு சென்றால் அதற்குள் அந்த பேருந்து புறப்பட்டு சென்று இருக்கும்.
இப்படி நேரம் தவறாமையை பற்றி யாருமே அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.
குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு வேலையை செய்ய முடியாமல் போய் அதனால் பல இழப்புகளை சந்திக்கும்போதுதான் நேரத்திற்கான பயம் நம்மை தொற்றிக் கொள்ளும். அந்தப் பயமே குறித்த நேரத்தில் எதனையும் முடித்து விட வேண்டும் என்ற உள்ளத்தில் உறுதி எழும்.
நேரம் என்பது பொன் போன்றது ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஒவ்வொரு யுகமாக கருத வேண்டும். அந்த ஒரு நொடிப் பொழுதில் அநேக செயல்களை செய்து முடிக்க வேண்டும். எனவே நேரம் என்பதை மிக முக்கியமாக கருத வேண்டும்.
டயானா டிலோன்சர் என்னும் பிரபல எழுத்தாளர் எழுதியுள்ள 'நெவர் பி லேட் அகைன்' என்னும் நூலில் நேரம் தவறாமை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை விதைத்துள்ளார். நேரம் தவறாமையை பின்பற்றாமல் தான் தோன்றித்தனமாக இருப்பவர்கள் தங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் தாமதத்தையே தொடர்கிறார்கள். குறிப்பாக நல்லதோ அல்லது கெட்டதோ எந்த விஷயத்திலுமே அவர்களால் சரியான நேரத்தை பின்பற்றவே முடிவதில்லை.
மாவீரன் நெப்போலியன் நேரம் தவறாமையை கண்டிப்பாக பின்பற்றியவர். போருக்குச் செல்லும் முன் தனது முக்கிய தளபதிகள் அனைவரையும் விருந்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் தளபதிகள் யாருமே அங்கு ஆஜராகவில்லை. ஆனால் அதற்காக நேரத்தை கடத்துவதை விரும்பாத நெப்போலியன் உணவருந்தத் தொடங்கினார். அவர் உண்டுமுடித்த பின்னர் ஒவ்வொரு தளபதியாக அங்கு வரத்தொடங்கினர். அவர்களிடம் விருந்துக்கான நேரம் முடிவடைந்து விட்டது. இனிமேல் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் போருக்கு செல்லலாம் என்று கூறிவிட்டு தனது குதிரையில் ஏறி அமர்ந்து விட்டார். அதற்கு மேல் தளபதிகளால் என்ன செய்ய முடியும் பட்டினியோடேயே அவர்களும் போர்க்களம் நோக்கி புறப்பட்டனர்
பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அதனை சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நேரத்தை மட்டும் நாம் அவ்வாறு நினைப்பதே இல்லை ஆனால் அதனையும் சேமிக்க பழகிவிட்டால் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு செயலும் வெற்றியை நோக்கிய பயணமாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.