ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்கு கேடு வருகிறது என்றால் அதற்கு முதல் காரணம் எதிர்மறை எண்ணங்கள்தான். எதிர்மறை எண்ணங்கள் ஒரு மனிதனுக்கு ஏற்பட்டுவிட்டாலே போதும் அவன் முதலில் பாதிக்கப்படுவது உடல் அளவில்தான்.
எதிர்மறை எண்ணங்களோடு உடற்பயிற்சி செய்தாலும் சரி மருத்துவம் செய்து கொண்டாலும் சரி எதுவுமே பலன் தராது. மனதளவில் புத்துணர்ச்சியுடன் பாசிட்டிவ் எண்ணங்களை நாம் வளர்த்துக் கொண்டால் மட்டுமே நம் உடல் நலலின் அக்கறையோடு இருக்கிறோம் என்று அர்த்தம்.
இன்றைய காலகட்டத்தில் யார் ஒருவர் மருத்துவமனை வாசல் படி மிதிக்காமல் இருக்கிறாரோ அவர்தான் உண்மையான கோடீஸ்வரர் என்று கூட சொல்லலாம். செல்வத்தில் பெரும் செல்வம் ஆரோக்கியம்தான். சரி என்னதான் செய்வது எதிர்மறை எண்ணங்கள் உருவாகிறது என்று நீங்கள் மனதில் நிலைக்கலாம் அவைகளை மிக மிக சுலபமாக உங்கள் மனதில் இருந்து நீக்கி விடலாம். இதோ கீழ்கண்டவைகளை படியுங்கள் உங்கள் மனம் புத்துணர்ச்சி அடையும்.
எதிர்மறை எண்ணங்கள் தோன்றினால் முதலில் என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த கசப்பான அனுபவத்தினால் அல்லது இழப்பினால்தான் நமக்கு இப்படி தோன்றுகிறதா என்பதை முதலில் கண்டறிந்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.
அடுத்து உங்களை மிகவும் பிசியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வேலைகளில் முடிந்தவரை கவனம் செலுத்துங்கள். அடுத்தடுத்த வேலைகளை தொடர்ந்து திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
மனதில் ஒரு விஷயத்தைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தால் தேவையற்ற எண்ணங்கள்தான் தோன்றும். எனவே, நெருக்கமான ஒரு நண்பருடன் உங்கள் மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வைக்கூடத் தரலாம். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க மனம் திறந்த உரையாடல்கள் அவசியம்.
நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்த, நேர்மறையாக சிந்திக்கும், உங்களுக்கு ஆறுதலாக, ஊக்கப்படுத்தும் நபர்களுடன் நேரம் செலவிட வேண்டும். மன நலப் பிரச்னைகளுக்கு பயணங்கள் ஒரு மிகச்சிறந்த மருந்து. உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ செல்லலாம்.
உங்களுடைய மனநலம் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தால் கண்டிப்பாக மனநலம் தொடர்பான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மன நல ஆலோசகரை அணுகத் தயக்கம் கூடாது.
நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும், உங்களை ஊக்கப்படுத்தும் புத்தகங்களை வாசிக்கலாம், தியானம், யோகா ஆகியவையும் உதவும். தவறு செய்யாத மனிதர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. உங்கள் பிரச்னைக்கு நீங்களே காரணம் என்றால் உங்களை நீங்களே மன்னித்துவிடுங்கள்.
உங்கள் மன அழுத்தத்திற்குக் காரணமான நபர்களிடம் இருந்து விலகி இருத்தல் நலம். உங்களுக்கென்று குறிக்கோள்களை நிர்ணயித்துக்கொண்டு அதனை நோக்கி பயணியுங்கள்.
இறுதியாக, உங்கள் பிரச்னைக்கு நீங்கள்தான் தீர்வு. நீங்கள் நினைத்தால் எப்படிப்பட்ட மன அழுத்தத்தில் இருந்தும் எதிர்மறை எண்ணங்களில் இருந்தும் விடுபடலாம்.