வாழ்க்கையில் நாம் எதிர் பார்ப்பது எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை இருப்பது நல்லது தான். ஆனால் அப்படி இருப்பது சில நேரங்களில் நடக்கும், சில நேரங்களில் நடக்காமல் போகலாம். அதனால் நமது எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகாதபோது ஒரு விதமான சோர்வை நமக்கு ஏற்படுத்தும். அதனால் எப்போதும் வாழ்க்கையில் நடப்பது நடக்கட்டும் எதையும் சமாளிப்போம் என்று தயாராக இருக்கும் எதார்த்தமான வாழ்க்கை முறைதான் சிறந்தது.
உண்மையில் நம்பிக்கையுடைய நேர்மறையாளர்கள். எதிலும் அவ நம்பிக்கையுடைய எதிர்மறையான சிந்தனைகளை உள்ளவர்கள், நடப்பது நடக்கட்டும் சமாளிப்போம் எனும் எதார்த்தமான மனநிலையில் வாழும் எதார்த்தவாதிகள். இவர்களில் வாழ்வில் மகிழ்ச்சியாக யார் இருக்கிறார்கள் தெரியுமா? எதார்த்தவாதிகள்தான் என்கிறார்கள் லண்டன் ஸ்கூல் எக்னாமிக்ஸ் மற்றும் பொலிடிக்கல் சயின்ஸ் மைய ஆராய்ச்சியாளர்கள்.
ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவர். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு பூ அருகிலிருந்தாலே, அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும். ரொம்பவும் கஷ்டப்படுவார். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வார்.
இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவருடைய ஆபீசில் ஒரு மீட்டிங். கலந்து கொள்ளப்போனார். அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்து இருந்தார்கள்.
ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நாம் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறோம்' என்று பயந்தார். ஆனால் வேறு வழியில்லாமல், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தார். பூக்களைப் பார்த்ததுமே அவருக்கு கண்களில் இருந்து நீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்து விட்டது.
மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது "இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன.." என்று வியந்தபடி கூறிக்கொண்டே சென்றார்.
அப்பொழுதுதான் இவருக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று. இவர் யோசித்தார்.. "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?"
இப்படி நினைத்த மறுவினாடியே அவருடைய அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.
இதுதான் நமது மனம்.இந்த மனதால் நோய்களை உருவாக்கவும் முடியும்.. குணப்படுத்தவும் முடியும்..இந்த மனதால்பிரச்னையை உருவாக்கவும் முடியும்.. அதற்கு தீர்வையும் தர முடியும்.
நம் முன்னோர்கள் கூறிய ஒரு அருமையான பொன்மொழி "வாழ்வை அது வரும் வழியில் ஏற்று, நீ விரும்பும் வகையில் மாற்று" என்பது தான். இதன்படி வாழ்ந்து சரித்திரம் படைத்துக் கொண்டு இருக்கிறார் ஒருவர். அவர் 2023 ம் ஆண்டு நவம்பர் 20 ம் தேதி தனது 82 வது வயதை கொண்டாடிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.இவர் தனது சொந்த வாழ்க்கையில் எண்ணற்ற சோதனைகளை சந்தித்தவர்.
ஒருமுறை இவரின் மனைவியும், மூத்த மகளும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்மஸ் மரம் வாங்க சென்றபோது ஒரு கார் விபத்தில் மரண மடைந்தனர். மகன்களில் ஒருவர் மூளையில் ஏற்பட்ட நோய் காரணமாக மரணமடைந்தார். அவருடைய இன்னொரு மகன் போதைப் பொருள் வழக்கில் சிக்கி தனது நேவிப்படையிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு இடையில் பைடனுக்கு மூளையில் கோளாறு ஏற்பட்டு அதற்கு அறுவை சிகிச்சை செய்து பின் மீண்டு வந்தார்.
இத்தனை சோகங்களையும் சந்தித்துவர் தன்னுடைய 78 வயதில் தன் லட்சியக்கனவான அமெரிக்க ஜனாதிபதியானார். 60-65 வயதில் எல்லாம் முடிந்து விட்டது என்று வீட்டில் மூலையில் முடங்கிக் கிடக்கும் வயதானவர்கள் இதை வாழ்க்கை பாடமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் சாதிக்க வயது ஒரு தடையல்ல என்று சாதிக்க முன் வர வேண்டும்.
சரியான முடிவுகளை எண்ணாமல் அனுமானத்தில் எடுக்கும் முடிவுகள் பின்னாளில் பிரச்சினையாக முடிகிறது. அதனால் நடப்பது நடக்கட்டும், எதையும் சமாளிப்போம் வெற்றி காண்போம் என்று வாழும் எதர்த்தவாதிகளாக இருந்து நேர்மறை எண்ணங்களை மட்டும் எண்ணி, மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம். வெற்றி காண்போம்.