தோல்வியின் அடையாளம் தயக்கம். வெற்றியின் அடையாளம் துணிச்சல். துணிந்தவர் என்றும் தோற்றதில்லை தயங்கியவர் என்றும் வென்றதில்லை. விழுவதெல்லாம் எழுவதற்காகத்தானே தவிர உடைந்து போவதற்கில்லை. பயமே இல்லாதவர் துணிச்சலான மனிதர் அல்ல. பயத்தை வென்றவரே துணிச்சலான மனிதர். துணிச்சல்தான் வெற்றியின் அடையாளம்.
ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும்போது அந்த கிளை எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்தில் அமர்வதில்லை. ஏனென்றால் அப்பறவை நம்புவது மரத்தின் கிளையை அல்ல அதன் சிறகை. தோல்வியின் அடையாளம் தயக்கம். துணிச்சல் வெற்றியின் அடையாளம்.
'புதைக்கப்படவில்லை விதைக்கப்படுகிறது' என்று உணர்ந்த விதை இருளுக்கு அஞ்சாது. துணிச்சல் வெற்றியின் அடையாளம். தெளிவான குறிக்கோளே வெற்றியின் ஆரம்பம். கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது. வாழ்வில் வெற்றி அடைந்து முன்னேறுபவர்களை கண்டு அதிசயிக்கும் நாம் அந்த வெற்றிகளுக்கு பின்னால் அவர்களின் சொல்லப்படாத போராட்டம் மற்றும் தோல்வியின் கதைகளை பற்றி எண்ணுவதில்லை.
துணிச்சல் உள்ளவர்கள் தங்கள் இலக்கை அடையும்வரை விடாமுயற்சியுடன் போராடுவார்கள். தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு துணிச்சலுடன் முன்னேற பாடுபடுவார்கள்.
வெற்றி பெற எண்ணுபவர்களுக்கு தோல்வி ஒரு படிக்கலாகும். வெற்றி என்பது இறுதியானதல்ல தோல்வி மரணமானது அல்ல அதை தொடரும் தைரியம்தான் முக்கியம் - வின்ஸ்டன் சர்ச்சில்.
வாழ்க்கையில் வலிகளும் உண்டு. வழிகளும் உண்டு. தைரியமாக துணிச்சலுடன் முன்னேறி செல்வது நன்று. நம்மை வழிநடத்திச் செல்ல தன்னம்பிக்கையும், தெளிவும், துணிச்சலும் எப்போதும் அவசியம்.
இருப்பதை பற்றிக்கொண்டு இழப்பினை எதிர்க்கொள்ளும் துணிச்சல் மிக்கவராய் செயல்பட வெற்றி கிட்டும்.
வாழ்வில் "துணிவே துணை" என்ற மந்திரத்தை மனதில் ஏற்றி எதையும் எதிர்க்கொண்டு வாழ துணிச்சலுடன் போராடுவது அவசியம். துணிச்சல் துன்பங்களை துரத்தி அடிக்கும். இழக்க இனி ஒன்றும் இல்லை என்றவுடன் ஒரு துணிச்சல் வரும் பாருங்கள் அதுதான் முக்கியம். எதை இழந்தாலும் துணிவோடு எதையும் எதிர்கொள்ளும் மனநிலையை மட்டும் இழக்கக்கூடாது.
வாழ்வை முடித்துக் கொள்ள ஒரு நொடி துணிச்சல் போதும். ஆனால் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் தேவை. துணிந்தார்க்கு துக்கம் இல்லை என்பார்கள்.
நாம் எடுக்கும் எந்த ஒரு முயற்சியிலும் இடையூறு ஏற்பட்டால் அதனை அடையாளம் கண்டு கொண்டு அகற்றி விட்டாலே வெற்றிப் பாதையில் பயணம் செய்வது எளிதாகிவிடும். எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பதற்கு மன உறுதியும் துணிச்சலும் தேவை. துணிச்சல் வெற்றியின் அடையாளம்
துணிந்து செயல்படுவோமா?