

அந்தச் சிறுவன் நான்கு ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்லவில்லை. ஒரு குற்றத்திற்காக அவனது தந்தை சிறையில் அடைக்கப்பட்டதால் குடும்ப வறுமை காரணமாக தொடர்ந்து பள்ளி செல்ல அந்த சிறுவனால் முடியவில்லை. தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் சென்றபோது அவனது வயது பத்து.
எலிகளும். பூச்சிகளும் நிறைந்த ஒரு அறையில் பாட்டில்களுக்கு லேபிள் ஒட்டும் வேலை செய்து சம்பாதித்து வந்தான். அந்த அறையின் அருகிலிருந்த ஒரு இருட்டான அறையில் வேலை முடிந்ததும் தூங்க வேண்டும். சிறுவனுக்குப் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் என்பதால் தன்னுடைய ஓய்வு நேரத்தில் கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்துப் படித்து வந்தான்.
அந்த சிறுவனுக்கு மனதில் எழுத்தாளராக வேண்டும் என்பது ஆசை. அதனால் பல முயற்சிகளை செய்து கதை எழுதுகின்றான். பலமுறை மாற்றி மாற்றி எழுதி கடைசியில் ஒரு கதையை எழுதி அனுப்புகின்றான்.
அதிலும் கதை அனுப்புவதை மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாது என யாருக்கும் தெரியாமல் தான் எழுதிய கதையை நள்ளிரவில் தபால்பெட்டியில் போடுகின்றான்.
அந்த இளைஞனுக்கு இப்போது இருபத்தி இரண்டு வயது. முதன் முதலாக அவர் எழுதிய கதை ஒன்று பத்திரிகையில் வெளிவந்த போது தெருவில் சிரித்துக் கொண்டும், அழுது கொண்டும் நடக்கின்றார். இதைப்பார்த்த அவருக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆனந்தமும், அழுகையும் நிரம்பி வழிந்தது. அதனைத் தொடர்ந்து அவர் எழுதிய எட்டுக் கதைகளும் பிரசுரமாயின. ஆனால், எவ்வித சன்மானமும் யாரும் தரவில்லை.
இறுதியில் அவருடைய பத்தாவது கதைக்கு ஒரு பவுண்டு பணம் முதன் முதலாக கிடைத்தது. அந்த இளைஞருக்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி. அதன்பிறகு தொடர்ந்து எழுதினார். ஒரு காலகட்டத்தில் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஒரு பவுண்டு பணம் என்று அவரது எழுத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட காலம் வந்தது.
எந்த ஒரு எழுத்தாளருக்கும் எழுத்து உலக சரித்திரத்தில் இவ்வளவு பணம் தரப்பட்டதில்லை. அவர்தான் புகழ்பெற்ற எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens). இருட்டு அறையில் வறுமையோடும், புறக்கணிப்போடும் தொடங்கிய தனது வாழ்க்கையை சரித்திரத்தில் இடம் பெறும்படி வளமையாகவும், வெற்றியாகவும் மாற்றிக் கொண்டார். காரணம், அவரது இடைவிடாத முயற்சிகள்.
அவரது நூல் ஒன்று அவர் இறந்து 72 ஆண்டுகளுக்கு பின்பு பிரசுரிக்கப்பட்டது. அவர் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய குழந்தைகளுக்காக எழுதிய "கிறிஸ்மஸ் கேரல்" என்ற அந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு வந்த இரண்டாவது வாரமே பத்தாயிரம் பிரதியாக இரண்டாவது முறை பதிப்பிக்கப்பட்டது.
அதன்பிறகு எத்தனை மறுபதிப்புகள் வெளியிடப்பட்டன என்ற எண்ணிக்கையே இல்லாமல் உலகின் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து அச்சடிக்கப்பட்டு விற்பனையானது. நாற்பதாயிரம் பவுண்டுகள் கொடுத்து இந்த புத்தகத்தை முதலில் வாங்கினார்களாம். ஒரு எழுத்தாளர் இறந்த பின்பும் அவரது புத்தகம் இவ்வளவு பெருமையைப் பெற்றுள்ளது அவரது எழுத்தாற்றலை உணர முடிவதாக இருக்கிறது.
"மூச்சுள்ளவரை முயற்சி செய்" என்பதே ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதரின் வெற்றி ரகசியமாக இருக்கிறது. மேலும் சிகரங்களைத் தொட்ட ஒவ்வொரு சாதனையாளரும் முதலில் தன்னுடைய மனதில் எண்ணியது, நான் முயற்சிப்பேன் என்ற சிந்தனையாக தான் இருந்துள்ளது. முயற்சி செய்து கற்றுக்கொண்டு வெற்றி பெறுவதே வெற்றியின் இலக்கணமாக உள்ளது.