உங்களுக்கு எந்த வேலையும் செய்யாமல் எப்போதும் பெட்டிலயே படுத்துக் கொண்டிருக்க வேண்டும் போல இருக்கிறதா? எந்த வேலை செய்தாலும் விரைவாக ஆர்வத்தை இழந்து விடுகிறீர்களா? இதை நீங்கள் சோம்பேறித்தனம் என நினைத்தீர்கள் என்றால் அதுதான் தவறு. இது அதற்கும் மேலான விரக்தி மனநிலையின் அறிகுறியாகும். இதை ஆங்கிலத்தில் Burnt Out என்பார்கள்.
Burnt Out என்பது மனநிலை, உடல்நிலை சார்ந்த விஷயங்களில் எதிர்மறையான உணர்வைக் கொடுக்கும் ஒன்றாகும். 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி அமெரிக்காவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 75 சதவீத அடல்ட் மக்கள் இந்த விரக்தி மனநிலையில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் கிட்டத்தட்ட 40 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு அதன் தாக்கம் அதி தீவிரமாக இருப்பதாக தெரியவந்தது. இந்த ஒரு எடுத்துக்காட்டே போதும் நாம் ஏன் Burnt Out பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று. இந்தப் பதிவில் நீங்கள் Burnt Out-ல் இருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்.
எதிலும் ஆர்வம் இருக்காது: உங்கள் வாழ்க்கையில் எதை செய்வதற்கும் உங்களுக்கு ஆர்வம் இல்லையா? வாழ்க்கையை அது இஷ்டத்திற்கு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? எந்த செயல்களிலும் அதிக ஆர்வம் காட்டாமல் விலகிச் செல்வதையே நீங்கள் விரும்பி செய்யும் நபராக இருந்தால். நீங்கள் விரக்தி மனநலையில் இருக்கிறீர்கள் என அர்த்தம். இத்தகைய மனநிலையில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை வெறுமையான ஒன்றாகத் தெரியும். எதையும் விருப்பப்பட்டு செய்யத் தோன்றாது. மகிழ்ச்சியான தருணங்கள் இருந்தாலும் அவை உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாது.
ஒரு காலத்தில் சில விஷயங்களில் ஆர்வத்துடனும், மோட்டிவேஷனுடனும் இருந்திருப்பீர்கள்: சோம்பேறித்தனம் என்பது உங்களது குண நலனுடன் தொடர்புடைய ஒன்றாகும். சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் எப்போதுமே அப்படியேதான் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த வேலையும் செய்ய ஆர்வம் இருக்கவே இருக்காது. ஆனால் விரக்தி மன நிலையில் இருப்பவர்கள் ஒரு காலத்தில் எல்லா விஷயங்களையும் மிகச் சிறப்பாக செய்திருப்பார்கள். அவர்கள் விரும்பி செய்த விஷயங்கள் காலப்போக்கில் அவர்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கொடுக்காததால், இந்த விரக்தி மனநிலை என்பது ஏற்பட்டிருக்கும். அதேபோலதான் ஒரு காலத்தில் அனைத்தையும் உந்துதலுடன் பார்த்தவர்கள் இப்போது எதிலும் மோட்டிவேஷன் இல்லாமல் அமைதியாக இருப்பார்கள். இதுவும் ஒரு முக்கியமான அறிகுறியாகும்.
எளிதில் கோபமடைவீர்கள்: பிறர் சொல்லும் சாதாரண விஷயங்களுக்கும் உங்களுக்கு கோபம் வந்தால், நீங்கள் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விட்டீர்கள் என அர்த்தம். அதேபோல உங்களால் உங்களது உணர்வுகளை ஒழுங்காக கட்டுப்படுத்த முடியாது. பிறர் விளையாட்டாக பேசினாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு மூர்க்கமாக நடந்து கொள்வீர்கள். யார் என்ன சொன்னாலும் உங்களைதான் தவறாக பேசுகிறார்கள் என நீங்களே நினைத்துக் கொண்டு, எல்லா விஷயங்களுக்கும் கோபப்படவே தோன்றும்.
உங்கள் மீது அக்கறையின்மை: விரக்தி மனநிலையின் மிக முக்கியமான அறிகுறிகளில் ஒன்று தான் உங்கள் மீது நீங்கள் அக்கறை காட்டாமல் போவது. ஒழுங்காக தூங்க மாட்டீர்கள், சாப்பிட மாட்டீர்கள் உடற்பயிற்சி செய்ய மாட்டீர்கள். உங்களை அழகாக காட்ட வேண்டும், நல்ல உடைகளை உடுத்த வேண்டும் என்பது பற்றிய சிந்தனை உங்களுக்கு சுத்தமாக இருக்காது.
மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் அத்தனையும் உங்களுக்கு உடனடியாகத் தெரியாது. அவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் வாழ்க்கையில் ஊடுருவ ஆரம்பிக்கும். எனவே தொடக்கத்திலேயே இதன் அறிகுறிகளை புரிந்துகொண்டு, அது உங்கள் வாழ்க்கையை முழுமையாக கெடுக்கும் வரை விடாதீர்கள். விரக்தி மனநிலையில் இருப்பவர்களால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. மன அழுத்தம் காரணமாக பல மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எனவே தொடக்கத்திலேயே அதிலிருந்து வெளிவர முயற்சித்து, புதிய மனிதனாக புத்துயிர் பெற்று வாழ்க்கையை ரசித்து வாழத் தொடங்குங்கள்.
அப்படியே எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தால் வாழ்க்கையில் எதுவும் மாறாது. நாம்தான் எதுவாக இருந்தாலும் மாற்ற வேண்டும்.