ஒருமுறை என்னுடைய தந்தை என்னை மட்டும் தனியாக பேருந்தில் ஏற்றிவிட்டு கல்லூரிக்குப் போகச் சொல்லி அனுப்பிவிட்டார். அதுவரை எல்லாவற்றிற்கும் துணையாக வந்துகொண்டிருந்தவர், திடீரென்று ஒரு நாள் எனக்கு வேலையிருக்கிறது. இனி நீயே தனியாக போக கற்றுக்கொள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அதுவரை வெளியுலகையே பார்க்காத எனக்கு அது ஒரு திகிலான அனுபவம். யாராவது என்னைக் கடத்திச் சென்றுவிட்டால் என்ன செய்வது? என்னுடைய பணம், போன் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? எங்கே போவது என்று வழி தெரியாமல் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது? போன்ற கேள்விகள் என் மனதில் மோதின.
எப்படியோ கஷ்டப்பட்டு கல்லூரிக்குச் சென்றுவிட்டேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த நாளிலிருந்து, என் தந்தையை துணைக்கு வரும்படி ஒருபோதும் அழைத்ததில்லை. நானே தனியாகப் போக பழகிக்கொண்டேன். எனக்கு இந்த உலகத்தை எப்படி தனியாக எதிர்க்கொள்வேன் என்று இருந்த பயம் எல்லாமே விலகிவிட்டது. ‘இவ்வளவுதானா? இதுக்காகவா இவ்வளவு நாள் பயந்துக்கிட்டிருந்தோம்’ என்ற மன தைரியம் வந்துவிட்டது.
சகோதரிகளே! நாம ஒரு விஷயத்தை செஞ்சித்தான் ஆகணும்ங்குற கட்டாயம் நம் வாழ்வில் ஏற்படும்போது, நம்முடைய கம்ஃபர்ட் ஸோனை விட்டு வெளியே வந்துதான் ஆகவேண்டும். அப்போதுதான் நம்முடைய அடுத்த வெர்ஷனை நம்மாலேயே உணரமுடியும். நமக்குள்ள இவ்வளவு தைரியமான நபர் இருந்திருக்கிறார், நமக்குள் இவ்வளவு விஷயம் தெரிந்த நபர் இருந்திருக்கிறார் என்று நம்மைப் பற்றி நாமே புரிந்துக்கொள்ள முடியும்.
எனவே பெண்களே! உங்களை நீங்களே நம்புங்கள்! தைரியமாக வெளியுலகை வலம் வாருங்கள். கேஸ் சிலிண்டர் எப்படி மாத்துவது, வண்டியை எங்கே சென்று பஞ்சர் போடுவது, பைக் எப்படி ஓட்டுவது, வங்கிக் கணக்கு முதல் வலைதளம் வரை எப்படி இயக்குவது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். தற்காப்பு பயிற்சிகளை எடுத்துக்கொள்ளுங்கள். நாளைக்கு இந்தச் சமூகத்தில் தனியாக வாழ வேண்டிய நிலை ஏற்படுமாயின் அதற்கு அஞ்சாமல் இருக்கும் மன தைரியத்தை இளமையிலேயே விதைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் இருக்கும் ஆண் மகன் இதையெல்லாம் உங்களுக்குக் கற்று தருவார் என்று காத்திருக்காதீர்கள். தனித்தோ அல்லது உங்கள் சிநேகிதிகளுடன் சேர்ந்தோ, ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் உங்களுக்குள் உணரச் செய்யுங்கள்.
ஆண்கள் மாறுவார்களா? சமூகம் மாறுமா? என்றெல்லாம் யோசிப்பதைக் காட்டிலும், அதை நினைத்துப் புலம்புவதைக் காட்டிலும், நாம் மாறுவது, நம் பார்வையை மாற்றிக்கொள்வது, நமக்கு நாமே தைரியத்தை வரவழைத்துக்கொள்வது சுலபம். அதுவே நிரந்தரமும் கூட.