

உணவு விடுதி ஒன்றில் சில தோழிகள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பெண்மணி கரப்பான் பூச்சி பற்றி சுவாரசியமாக பல தகவல்களை கூறினார்.
ஒரு மணி நேரத்தில் கரப்பான் பூச்சி மூன்று மைல் தூரம் ஓடும். ஒரே ஒரு வினாடியில் தன்னுடைய ஓட்டத் திசையை 25 முறை மாற்றும் அற்புத தன்மை கொண்டது. தலையே இல்லாமல் கூட ஒரு வாரம் வரை கரப்பான் பூச்சி வாழக்கூடியது என ஒரேயடியாக மூச்சு விடாமல் உணவு விடுதியில் தங்கியிருந்த தோழிகளிடம் கூறி முடித்தார். அனைவரும் பெண்மணி கூறியதை கண்கொட்டாமல் ஆச்சரியத்தோடு கேட்டு ரசித்தார்கள்.
மேலும் அப்பெண்மணி கரப்பான் பூச்சி எல்லா காலச் சூழலிலும் வாழக்கூடியது. நாஸா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கும் கரப்பான் பூச்சி உதவுகிறது. கரப்பான் பூச்சி அணுகுண்டே வெடித்தாலும் சாகாது போன்ற கரப்பான் பூச்சியை பற்றிய தகவல்களை தொடர்ந்து அழகாகக் கூறிக் கொண்டிருந்தார்.
அந்த வேளையில் எங்கிருந்தோ ஒரு கரப்பான் பூச்சி அவர் மேல் வந்து விழுந்து விட்டது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் ,"நீங்கள் கரப்பான் பூச்சி பற்றி பெருமையாக கூறியதை கேட்க அதுவே வந்துவிட்டது மேடம்! என அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் கூறினார்கள்.
ஆனாலும் அந்தப் பெண்மணிக்கு அவர்கள் கூறியது தர்ம சங்கடமாகி போனது. மேலும் பயத்தால் வியர்த்துக் கொட்டியதோடு எதுவும் பேசாமல் செய்வதறியாது முழித்துக் கொண்டிருந்த போதே, தாவிச் சென்ற கரப்பான் பூச்சி உணவு பரிமாறுபவரின் சட்டையில் உட்கார்ந்து கொண்டது.
ஆனால் உணவு பரிமாறுபவரோ சிறிதும் பதட்டப்படாமல் அமைதியாக எந்த அச்சமும் இன்றி கரப்பான் பூச்சியை கையில் பிடித்து வெளியே எறிந்துவிட்டார். கரப்பான் பூச்சி பற்றிய தகவல்கள் அதற்கு மேல் தொடராததால் அனைவரும் சாப்பாட்டில் கவனம் செலுத்தினார்கள்.
இதிலிருந்து அனைவரும் தெரிந்து கொள்வது என்னவென்றால் ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு நபரைப் பற்றியோ ஒரு செயலைப் பற்றியோ தெளிவாக தெரிந்திருந்தால் மட்டும் பிரச்சனையை தீர்த்துவிடலாம் என கூறி விட முடியாது. அதற்கு பதிலாக ஒரு பிரச்சனை வருகின்றபோது அந்த நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு பிரச்சனைக்கு தீர்வு காணவோ அல்லது அதிலிருந்து விடுபடலாம் என்பதை உணவு பரிமாறுபவர் நிரூபித்து விட்டார்.
ஆகவே ஒரு பிரச்சனைக்கான தீர்வு வேறு ஒன்றுக்கும் தீர்வாக அமையும் என எப்போதும் நினைக்காமல் மாற்றங்களையும், புதிய அணுகுமுறைகளும் மேற்கொள்ளும் போது வெற்றி கிடைக்கும். இவ்வுலகில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளதால் அதனை கண்டறிந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
பிரச்சனைகளும் சிக்கல்களும் தான் ஒவ்வொரு மனிதனையும் உத்வேகப்படுத்தி வாழ வைப்பதோடு மற்றவர்களுக்கு வழி காட்டவும் உறுதுணை செய்கிறது. ஆகவே பிரச்சினைகளை வரவேற்று மாற்றங்களை தேடி ஓடினால் எப்போதும் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.