துணிச்சல்: அச்சத்தைக் கடந்து சாதிக்கும் ஆற்றல்!

Motivational articles
Overcome fear and achieve
Published on

“துணிச்சல்” என்பது ஒருவரின் உள்ளுணர்ச்சி, நம்பிக்கை, மனஉறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் முக்கியமான குணம். ஆனால் துணிச்சல் என்பது அச்சமின்றி எதையும் செய்துவிடுவது அல்ல. அது சரியான சமயத்தில், சரியான முறையில், நல்ல நோக்கத்திற்காக வெளிப்பட வேண்டும்.

துணிச்சல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

1.அறிவுடன் கூடிய துணிச்சல்: அறிவில்லாத துணிச்சல் ஆபத்தாக மாறும். என்ன செய்யவேண்டும், எப்போது செய்யவேண்டும் என்பதை உணர்ந்து செய்யும் துணிவுதான் உண்மையான துணிச்சல்.

2.நியாயத்துக்காக உள்ள துணிச்சல்: அநியாயத்தைக் கண்டால் மௌனமாக இல்லாமல் எதிர்க்கும் தைரியம் வேண்டும். பிறருக்கான நன்மைக்காக குரல் கொடுக்கும் துணிவு உயர்ந்தது.

3.தன்னம்பிக்கையுடன் கூடிய துணிச்சல்: “என்னால் முடியும்” என்ற நம்பிக்கை உள்ள இடத்தில் தான் உண்மையான துணிவு தோன்றும். தோல்வியையும் தைரியமாக எதிர்கொள்வதே சிறந்த துணிச்சல்.

4.அமைதியுடனும் கட்டுப்பாட்டு டனும் இருக்கும் துணிச்சல்: கோபம், அவசரம், ஆவேசம் கொண்டு எடுக்கும் துணிவு தவறான முடிவுகளைக் கொடுக்கும். சிந்தித்துப் பார்த்து அமைதியாக எடுக்கும் முடிவே உறுதியான துணிச்சல்.

5.பயத்தையும் தாண்டும் துணிச்சல்: பயம் இல்லாதவன் துணிச்சலானவன் அல்ல; பயத்தை உணர்ந்தும் அதை கடந்து முன்னேறுபவனே உண்மையான துணிச்சலாளன்.

6 .பொறுப்புடன் இருக்கும் துணிச்சல்: தன் செயலுக்குப் பிறர் பாதிக்கப்படக் கூடாது. துணிச்சல் எடுக்கும்போது அதன் விளைவுகளையும் தாங்கும் மனஉறுதி இருக்க வேண்டும்.

துணிச்சலின் அர்த்தத்தை எளிதாகப் புரிய வைக்கும் ஒரு சிறிய குறுங்கதை.

சிறுவனின் துணிவு

ஒரு சிறிய கிராமத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த குழந்தைகள் ஒரு கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்தான். எல்லா குழந்தைகளும் பயந்துப் போனார்கள். “இவனை எப்படி காப்பாற்றுவது?” என்று யாரும் நினைக்க முடியவில்லை. அப்பொழுது அங்கே இருந்த இன்னொரு சிறுவன் உடனே ஒரு கயிறு எடுத்து கிணற்றுக்குள் இறங்கினான். தன் நண்பனின் கையை பிடித்து மேலே வந்தான். கிராம மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

“இத்தனை சிறியவனாக இருக்கிறாய், நீ எப்படி இப்படிச் செய்தாய்?” என்று கேட்டார்கள். அவன் சொன்னான்:

“என்னை தடுக்க யாரும் அருகில் இல்லை. நான் பயந்தேன், ஆனாலும் நண்பனை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் துணிந்து செய்தேன்.” துணிச்சல் என்பது அச்சமில்லாமை அல்ல. அச்சம் இருந்தாலும், நியாயமான செயலைச் செய்ய மனஉறுதியுடன் நிற்பதே உண்மையான துணிவு.

இதையும் படியுங்கள்:
நமக்குள்ளே உள்ள சக்தியை நாம்தான் உணரவேண்டும்!
Motivational articles

வீரமங்கை வேலுநாச்சியாரின் துணிச்சல்

18ஆம் நூற்றாண்டில் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதனின் அரசியாக இருந்தவர் வேலுநாச்சியார். அக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தென்னகத்தில் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர்கள் சிவகங்கை மீது படையெடுத்து, மன்னரைச் சதி செய்து கொன்றார்கள். அப்போது வேலுநாச்சியார் தன் ஒரு வயது குழந்தையுடன் ஓடிச்சென்று அருகிலுள்ள தேசங்களில் ஒளிந்திருந்தார். அவரது மனம் துவண்டுவிடவில்லை. அங்கே இருந்தபோது தன்னைப் பாதுகாத்த மக்களை ஒருங்கிணைத்தார். படை வீரர்களைத் திரட்டினார். ஆயுதப் பயிற்சிகளை பெண்களுக்கும் கற்றுக்கொடுத்தார். பல ஆண்டுகள் கழித்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பெரிய போரை நடத்தினார். அந்தப் போரில் ஒரு முயலியம்மாள் என்ற வீரத்தாய் தன் உடலிலேயே வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு எதிரி கோட்டையில் புகுந்து தன்னை ஈகை செய்தார். இதன் மூலம் ஆங்கிலேயர்கள் தோல்வியடைந்தனர். பின்னர் வேலுநாச்சியார் மீண்டும் சிவகங்கை அரியணையில் அமர்ந்தார்.

துணிச்சல் என்பது தன்னம்பிக்கையை இழக்காமல், சரியான நேரம் வரும்வரை பொறுமையுடன் தயாராக இருப்பதிலும் இருக்கிறது. ஒருவரின் துணிவு, பலரைத்தூண்டி பெரிய வெற்றியை உருவாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com