இன்றைய காலத்தில் நாம் எல்லோருமே ஏதோ ஒரு ஓட்டத்தில் இருக்கிறோம். காலையில் எழுந்தால் அவசரம், ஆபீஸ் போனா வேலை, வீட்டுக்கு வந்தால் சோர்வு என வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், நாம் நாள் முழுவதும் பிஸியாகவே இருக்கிறோம், ஆனால் உருப்படியாக என்ன செய்தோம் என்று பார்த்தால் பெரிதாக எதுவும் இருக்காது.
இதற்கு முக்கிய காரணம் நம்மிடம் உள்ள கவனச் சிதறல்கள். கால் நியூபோர்ட் எழுதிய "Deep Work" புத்தகம் இதைத்தான் உடைத்தெரிகிறது. ஒரு வேலையை எப்படி முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பது என்பதைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை இந்த புத்தகம் நமக்குத் தருகிறது.
டீப் ஒர்க் என்றால் என்ன?
கால் நியூபோர்ட் இரண்டு வகையான வேலைகளைப் பற்றிச் சொல்கிறார். ஒன்று "ஷாலோ ஒர்க்" (Shallow Work), மற்றொன்று "டீப் ஒர்க்" (Deep Work). ஷாலோ ஒர்க் என்பது மேலோட்டமான வேலைகள். அதாவது ஈமெயில் செக் செய்வது, மீட்டிங் போவது, சும்மா ஃபைலை நகர்த்துவது போன்ற மூளைக்கு அதிக வேலை தராத விஷயங்கள். ஆனால் டீப் ஒர்க் என்பது அப்படி இல்லை. எந்த ஒரு கவனச் சிதறலும் இல்லாமல், முழு மூச்சாக ஒரு வேலையில் இறங்கி, கடினமான விஷயங்களைக் கற்றுக்கொண்டு, அதை வேகமாக முடிப்பதுதான் டீப் ஒர்க். இந்த 21-ம் நூற்றாண்டில் இது ஒரு சூப்பர் பவர் என்றே சொல்லலாம்.
கவனச் சிதறல் Vs மல்டிடாஸ்கிங்!
நம்மில் பலரும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை பெருமையாக நினைக்கிறோம். பாட்டு கேட்டுக்கொண்டே படிப்பது, போன் பேசிக்கொண்டே டைப் செய்வது என இதைத்தான் மல்டிடாஸ்கிங் என்கிறோம். ஆனால் இது உண்மையில் நம் மூளையின் திறனை குறைக்கிறது.
ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு தாவும்போது, நம் கவனம் முந்தைய வேலையிலேயே சிக்கிக்கொள்கிறது. இதை "Attention Residue" என்று சொல்கிறார்கள். இதனால் அடுத்த வேலையை முழுமையாகச் செய்ய முடிவதில்லை. எனவே "சிங்கிள் டாஸ்கிங்" அதாவது ஒரே நேரத்தில் ஒரு வேலை என்பதுதான் வெற்றிக்கான தாரக மந்திரம்.
நாம் எப்போதெல்லாம் சோர்வாக அல்லது போராக உணர்கிறோமோ, உடனே கையில் எடுப்பது ஸ்மார்ட்போனைத்தான். ஆனால் டீப் ஒர்க் செய்ய நினைப்பவர்கள் அந்த போரடிக்கும் நேரத்தை ஏற்றுக்கொள்ள பழகவேண்டும். சமூக வலைத்தளங்கள் நம் கவனத்தை முழுமையாக சிதறடிக்கும் கருவிகள். வேலை நேரத்தில் சோஷியல் மீடியாவிற்கு குட்-பை சொல்வது உங்கள் உற்பத்தித்திறனை பல மடங்கு உயர்த்தும். இது ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் போகப்போக பழகிவிடும்.
ஓய்வும் ஒரு வேலைதான்!
வேலை முடிந்த பிறகும் வேலையைப்பற்றியே யோசிப்பது நல்லதல்ல. ஆசிரியர் "Shut Down Ritual" என்ற முறையை பின்பற்றச் சொல்கிறார். அதாவது வேலை நேரம் முடிந்ததும், லேப்டாப்பை மூடுவது போல, மூளையில் இருந்தும் வேலையை மூடிவிட வேண்டும். அடுத்த நாள் என்ன செய்ய வேண்டும் என்று குறித்து வைத்துவிட்டு, ஜாலியாக ரெஸ்ட் எடுக்க வேண்டும். இப்படி முழுமையாக ஓய்வு எடுக்கும்போதுதான், அடுத்த நாள் வேலை செய்ய மூளை புத்துணர்ச்சியுடன் தயாராகும்.
வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க நினைப்பவர் களுக்கு டீப் ஒர்க் ஒரு வரப்பிரசாதம். இது வெறும் வேலை செய்வதற்கான முறை மட்டுமல்ல, இது ஒரு வாழ்க்கை முறை. நாம் செய்யும் வேலையில் முழு திருப்தியும், வெற்றியும் கிடைக்க வேண்டுமென்றால், கவனச் சிதறல்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஆழமான கவனத்தை செலுத்த வேண்டும். மேலோட்டமாக வாழ்வதை விட்டுவிட்டு, ஆழமாக வாழ்வதே சிறந்தது.