அனைத்திற்கும் பிறரைச் சார்ந்திருப்பதும் சரியல்ல. பிறர் ஏதாவது தரமாட்டார்களா என ஏங்குவது மடத்தனம். சில இளைஞர்கள் அம்மா என் பனியன் எங்கே துண்டு எங்கே என்று அம்மாவை சார்ந்திருப்பார்கள். திருமணத்திற்குப் பின் மனைவியைச் சார்ந்து விடுவார்கள். தொலைந்த பொருட்களைத் தேடிக் கொடுப்பது , துணிகள் துவைத்துப் போடுவது இவையாவும் அம்மா அக்கா அண்ணா வேலைகள் என்று பிறரைச் சார்ந்து வளரும் பண்பு இளைஞர்களுக்கு இருக்கக் கூடாது. நமது காலில் நிற்க முடியாவிட்டால் உடல் ஊனம் என்கிறோம். வாழ்க்கையில் பிறரை சார்ந்திருப்பதும் ஒரு ஊனமே. இந்த ஊனம் வெற்றியின் விரோதி.
எனவே சொந்தக்காலில் நில்லுங்கள். இல்லையேல் நொந்து நூலாகி விடுவீர்கள். உழைப்புக்குத் தயாராக இருப்பவர்கள் ஒரு போதும் தோற்றதில்லை. முதுமை அவர்கள் உடலில் இடம் கேட்பதில்லை.
முத்தழிக் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதன் அவர்கள் நெடிய உருவம். எண்பது வயதிலும் மிடுக்கான நடை. கம்பீரமான பிசிறில்லாத குரல். தடுமாற்றம் இல்லாத பேச்சு. பல்லாண்டுளுக்கு முன் விழா ஒன்றிற்காக சென்னை வந்த அவரை ரயில் நிலையத்தில் ஒருவர் அவரை அழைத்துப் போக அவரிடமிருந்த பெட்டியை வாங்க கைநீட்ட... அதற்கு அவர், "வேண்டாம். பிறரிடம் பெட்டியை கொடுத்துத் தூக்கிச் சொல்லும் அளவிற்கு எனக்கு வயதாகவில்லை " என்றாராம். அந்த வயதிலும் பிறரிடம் உதவியை எதிர்பாராத பெருஞ்செல்வம் அவர் மனதில் இருந்தது. அதனால்தான் அவர் திருச்சியில் அழகிய கிழவர் என்று அழைக்கப்பட்டார்.
மூன்று இளைஞர்கள் குடியிருக்கும் இடத்திற்கு ஒரு உறவினர் வந்தார். அறையில் ஆங்காங்கு சுருட்டி வைக்கப்பட்ட துணிகள், லுங்கிகள், அடைத்து வைக்கப்பட்ட ஜன்னல்கள், குமட்டும் துர்வாசனை வர அவர்களிடம் ஜன்னலைத் திறக்கக் கூடாதா என்றார்.
அதற்கு அவர்கள் "யாரு திறக்கிறது. யார் அடைக்கிறது. போர் அடிக்கிற வேலை சார் அது. ஞாபகமா சாத்தாட்டா சாயங்காலம் கொசு வரும் என்று கூறினார்கள். ஜன்னலை நாள்தோறும் திறந்து மூடுவதையே பெரிய வேலையாகக் கருதும் இந்த சோம்பேறி இளைஞர்களுக்கு வெற்றி எப்படி கிடைக்கும்?
ஆப்ரகாம் லிங்கன் ஜனாதிபதியாக இருந்தபோது நிதானமாக தன் ஷூவுக்குப் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்த ஒருவர் அதிர்ச்சியடைந்து, "என்ன சார், உங்கள் ஷூவுக்கு நீங்கள் பாலிஷ் போடுகிறீர்கள்" என்றார்.
உடனே லிங்கன், "ஏன் நீங்கள் வேறு யாராவது ஷூவுக்கு பாலிஷ் போடுவீர்களா" என்று கேலியாகத் திருப்பிக் கேட்டாராம். உடல் உழைப்பு கேவலமானது அல்ல. உழைக்க மறுப்பவர்கள் சோம்பேறிகள். பிறர் உதவியை எப்போதும் எதிர்பார்ப்பவர்கள். உழைப்பவர்களுக்குப் பொற்காலம் காத்திருக்கிறது. வெற்றி நிச்சயம்.