
உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? நம் வாழ்க்கையில் நடக்கும் நல்ல விஷயங்களை நாம் விரைவாக மறந்துவிடுவோம். ஆனால், கெட்ட விஷயங்களை வெகு நாட்கள் நினைவில் வத்திருப்போம். யாராவது நம்மை புகழ்ந்து பேசினால் அது ஒரு வாரம் தாண்டி நினைவிருக்காது. ஆனால், நம்மை பற்றி தவறாக யாராவது சொல்லிவிட்டால் அதை ஆயுசுக்கும் மறக்க மாட்டோம். ஏன் இப்படி நம் மனம் நெகட்டிவ் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இப்போது நீங்கள் உங்கள் புகைப்படத்தை ஷோசியல் மீடியாவில் பதிவேற்றம் செய்கிறீர்கள். அதை பார்த்து பத்து பேர் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும் நன்றாக இல்லை என்று சொல்கிறார். இப்போது அந்த ஒருவர் பிடிக்கவில்லை என்று சொன்னது மட்டும் தான் நம் மண்டைக்குள் ஓடும். பத்து பேர் பிடித்திருக்கிறது என்று சொன்னதை மறந்து விடுவோம். இதை தான் Negativity bias என்று சொல்வார்கள்.
இது மனிதர்களுக்கு ஒரு Survival instinct ஆக உருவான விஷயம். ஆதி காலத்தில் நாம் காட்டிற்குள் வாழ்ந்த போது ஏதேனும் அச்சுறுத்தல்கள் வந்தால் அதை நாம் கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும். ஏதாவது ஆபத்து அல்லது நெகட்டிவான உணர்வுகளை கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. அத்தகைய உணர்வை ஒருமுறை கண்டுக்கொள்ளாமல் விட்டால் கூட நம் உயிரே போகக்கூடிய அபாயம் இருக்கிறது.
இப்போது நாம் வளர்ச்சியடைந்தாலும் நம்முடைய மூளை அதைப்போலவே இன்னும் யோசிக்கிறது. நாம் நெகட்டிவான உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
பத்து பேரில் ஒருவன் ஏதாவது சொல்லிவிட்டால் வருத்தப்படுகிறோம். பத்து தடவை ஜெயித்து ஒருமுறை தோற்றால் கஷ்டமாக உணர்கிறோம். நெகட்டிவான விஷயங்களை தேடித்தேடி பார்க்கிறோம்.
90 சதவீதம் நம் வாழ்க்கை நல்லதாகவே இருக்கும். ஒரு 10 சதவீதம் பிரச்னைகளோடு இருக்கும். அந்த பிரச்னைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு வாழ்க்கை மோசமாக இருக்கிறது என்று முடிவு செய்யக்கூடாது. நமக்கு நிறைய தடவை தோன்றியிருக்கும் 'ஏன் எப்போ பார்த்தாலும் நம்முடைய எண்ணம் நெகட்டிவாகவே இருக்கிறது' என்று. அந்த உணர்வு தான் நம்மை காலம் காலமாக Survive பண்ண உதவியிருக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது.