நாம் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைப்பதில்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைக்கும். தோல்வி அடையும் சமயங்களில் மனம் சோர்வுறுவது இயல்பு. இது போன்ற நேரத்தில் தோல்வியை வெற்றிகரமாக எப்படி மாற்றுவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வெற்றி பெற உதவும் எட்டு விஷயங்கள்;
1. ஒன்றே செய்க நன்றே செய்க;
எப்போதும் பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்யும்போது கவனக் குறைவு ஏற்படும். செய்யும் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த முடியாமல் போகும். எனவே ஒரு வேலை செய்யும்போது அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். எண்ணம் முழுவதும் அதில் இருக்கும்போது அக்கறையுடன் வேலை செய்யலாம். அதை முழு மனதோடு கவனமாக செய்யும்போது அந்த வேலை சுலபமாக முடிவது மட்டுமல்லாமல் வெற்றிகரமாகவும் அமையும்.
2. மெதுவாக ரசித்து வேலை செய்யவும்;.
எப்போதும் பரபரப்பாக வேலை செய்யும் போது இதயமும் படபடக்கும். அதனால் செய்யும் வேலை சரியாக அமையாது. டிஜிட்டல் சாதனங்களில் அதிக நேரம் செலவழிக்க தூண்டும். அவற்றை ஒதுக்கி விட்டு செய்யும் வேலைகளை ரசித்து செய்ய வேண்டும். உணவு உண்ணும் போது செல்போனை அருகில் வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே உண்ணாமல் நிதானமாக உணவை ருசித்து உண்ணவும். நடை பயணத்தின் போது இயர் போன் மாட்டாமல் இயற்கையை ரசித்துக் கொண்டே செல்லவும். இதுபோன்ற செயல்கள் மனதிற்கும் உடலுக்கும் நல்ல ஓய்வையும் அமைதியையும் தரும் வாழ்க்கையை ரசிக்க கற்றுத் தரும்.
3. மனதார பிறருடன் உரையாடுங்கள்;
தொடர்ந்து டிஜிட்டல் சாதனங்களில் உரையாடிக் கொண்டே இருப்பதை தவிர்த்து விட்டு உங்கள் எதிரில் இருப்பவரிடம் முகம் பார்த்து சிறிது நேரம் ஆவது ஆத்மார்த்தமாக உரையாட வேண்டும். பிறர் பேசும் போது கவனமாக கேட்க வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சிந்தித்து பதில் சொல்ல வேண்டும்.
4. பரிபூரணத்துவத்தை விட்டு விடுங்கள்;
செய்யும் எல்லா வேலைகளிலும் பெர்ஃபெக்சன் எதிர்பார்ப்பது படபடப்பை அதிகரிக்க செய்யும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அவ்வப்போது செயல்களில் சிறிய தவறுகள் செய்தால் அதற்காக பெரிதாக கவலைப்பட தேவை இல்லை. வாழ்க்கை தவறுகள் நிரம்பியதுதான். அவற்றையும் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். பிறரிடம் நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். நான் மட்டும்தான் இந்த வேலையை மிகவும் பர்ஃபெக்சன் ஆக செய்வேன் என்று தாமே எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லா வேலையும் செய்வது நல்லதல்ல.
5. மனதாரப் பாராட்டுங்கள்;
பிறரை எப்போதும் மனம் திறந்து பாராட்ட வேண்டும். இது கேட்பவருக்கு மட்டுமல்ல சொல்பவருக்கும் மகிழ்ச்சியை தரும். நிறைய நட்புகளை ஏற்படுத்தித் தரும். நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தும்.
6. தரத்தில் கவனம் வையுங்கள்;
செய்யும் வேலை தரமாக இருக்கிறதா என்று பாருங்கள். முழு மனதோடு வேலை செய்யுங்கள். பொருள்கள் தயாரிக்கும் பணியில் இருந்தால் அவை மிகவும் தரமாக இருக்கிறதா என்று கவனம் வைத்து செய்ய வேண்டும். ஏனென்றால் அவை பிறருக்கு அளிக்கப்படும் போது நல்ல தரத்துடன் இருப்பது அவசியம்.
7. பிறரிடம் அன்பு பாராட்டுங்கள்;
எப்போதும் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் அன்புக்குரியவர்கள் இவர்களிடம் அன்பு பாராட்ட வேண்டும். அவர்களிடம் எப்போதும் நல்ல தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனம் சோர்வுறும் போது இவர்கள் உற்சாகத்தையும் அன்பையும் வாரி வழங்குவார்கள்.
8. உள்ளூர மகிழ்ச்சியை அனுபவியுங்கள்
எப்போதும் உம் என்று இருக்காமல் சிறிய வெற்றிகளைக் கூட சந்தோஷமாக அனுபவியுங்கள். மனதை எப்போதும் சிறு குழந்தை போல வைத்துக்கொள்ள வேண்டும். சின்ன சின்ன விஷயங்களை ரசிக்கும்போது மனம் குதூகலமாக மாறும். கடவுள் நம்மை நல்ல நிலையில் வைத்திருக்கிறார் என்று எண்ணி சந்தோஷமாக இருங்கள். உள்ளூர மகிழ்ச்சியை எப்போதும் அனுபவியுங்கள்.