நம் வாழ்க்கையில் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் என்ன தெரியுமா? ரொம்ப சிம்பிள் தேவையில்லாத குழப்பம்தான். ஒரு வேலையை செய்யும் முன் அது நடக்குமா நடக்காதா? சரி வருமா? சரி வராதா? என பலவிதமான குழப்பங்கள். இப்படி குழப்பம் அடைந்து நாம் பல நல்ல வாய்ப்புகளை தவற விட்டிருக்கிறோம்.
நம் மனதில் ஆசை மட்டும் வளரும். ஆனால் அதை அடைய வேண்டிய வழி கொஞ்சம் கடினமாக இருந்தாலும் அதை ஓரம் வைத்துவிட்டு அடுத்ததை பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுவோம். மனதை ஒருநிலைப்படுத்தி நாம் செய்யும் எல்லா காரியமும் நமக்கு வெற்றிதான் என்பதை உணர்த்தும் ஒரு சின்ன கதை.
ஒரு துறவி இருந்தார். அற்புதமான துறவு நிலை அடைந்தவர். எல்லாருக்கும் அவரை பிடித்திருந்தது.
அவரை பற்றி கேள்விப்பட்டு பல பேர் துறவறம் மேற்கொள்ள நினைத்தனர். ஒருநாள், கிட்டத்தட்ட 50 பேர் அவரிடம் சென்று தாங்களும் துறவி ஆகவேண்டும் என்று நிற்க, அந்தத் துறவி யோசனையில் ஆழ்ந்து, எல்லோரையும் நாளை காலை வரக் கூறினார்.
அடுத்த நாள் எல்லாரும் துறவியின் ஆசிரமத்துக்கு வந்தனர். அங்கே 50 வெல்லக் கட்டிகள் சிறு சிறு கட்டிகளாக வைக்கப்பட்டு இருந்தது. துறவி எல்லார் வாயிலும் ஒரு கட்டியை வைத்தார். தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். அருமையான வாழ்க்கை பற்றிய தத்துவங்கள் அள்ளி கொட்டினார். அவர் பேசியது அவ்வளவு சிறப்பு.
30 நிமிடம் கழிந்தது. துறவி ஒவ்வொருவர் வாயிலும் வெல்ல கட்டி இருக்கிறதா என்று பார்க்க, ஒருவர் மட்டுமே வெல்ல கட்டியை சாப்பிடாமல், நாக்கின் மேலேயே வைத்திருந்தார்.
மற்றவர்கள் எல்லாருக்கும் ஒரு வெல்ல கட்டியை சாப்பிடாமல் இருக்க மனம் கேட்கவில்லை. உங்கள் கவனம் எங்கே இருக்கிறது? பின் எப்படி துறவி ஆவது? ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்கான முயற்சி வேண்டும்.
நீங்கள் வாழ்க்கையில் எதை தேடிச் செல்கிறீர்கள்? அதை மட்டும் செய்யுங்கள். மனதை ஒருமுகப்படுத்தி முழு ஈடுபாட்டோடு ஒரு நேரத்தில் ஒரு வேலையை நன்றாக செய்தால் போதும். Multi tasking - எல்லாருக்கும் சரிவராது. குழப்பம்தான் மிஞ்சும். மனதை ஒருநிலைப்படுத்தி நம் இலக்கை அடைவோம்.