![Motivation image](http://media.assettype.com/kalkionline%2F2024-05%2F6f29bead-c429-4eec-886c-2fd808ca785d%2FSample_Size_26_9_Image.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
டேனிஷ் நாட்டின் புகழ்பெற்ற சிற்பி தோர்வால்ட் சென் (Thor Waldsen) . அவர் நிறைய வண்ணச் சிலைகளை செதுக்கி மிகவும் புகழ்பெற்றிருந்தார். அவரிடம் "நீங்கள் செய்த சிலைகளில் உங்களுக்கு பிடித்த சிலை எது? "என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான் "நான் அடுத்ததாக உருவாக்க போகும் சிலை".
இவரைப் போன்று ஒருவர் தான் அடைந்த வெற்றிகளை பற்றி பெருமைப்பட்டு கொண்டிருக்கக் கூடாது. அடுத்தடுத்து இன்னும் பெரிய வெற்றிகளைக்காண முயற்சியை செய்ய வேண்டும். இதுவே வெற்றி வீரர்களின் முக்கிய குணம்.
வாழ்க்கையில் பல வெற்றிகளைக் கண்டு மனித சமுதாயம் மதித்து வணங்கும்படி தங்களை உயர்த்தி கொண்டவர்களிடம் கீழ்கண்ட குணங்கள் இருப்பதை நாம் காணமுடியும். இந்த குணங்களை கடைப்பிடித்து நாமும் பிறர் பாராட்டும்படி வெற்றி வீரராக வலம் வருவோம்.
1.தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் விடா முயற்சியுடன் விடாமல் மீண்டும் மீண்டும் பாடுபட்டு உழைத்து தாங்கள் கண்ட தோல்விகளை வெற்றிகளாக மாற்றி காட்டுவார்கள். தோல்வி என்பது வெற்றி மகுடத்தின் கற்களாக எண்ணி அதையும் அனுபவித்து மீள்வார்கள்.
2. தங்களுக்கு சம்பந்தப்படாத அற்பமான உபயோகமற்ற விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களுடைய வாழ்க்கை இலட்சியத்தை தவற விடமாட்டார்கள். இலக்கு சார்ந்த விஷயங்களை மட்டுமே கவனிப்பார்கள்.
3. தங்களுடைய அறிவு, திறமை ஆகியவைகளை வளர்த்துக் கொள்ளும் முயற்சியில் எப்போதும் ஈடுபட்டிருப்பார்கள். தனக்கு எல்லாம் தெரியும் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். தேடித் தேடிக் கற்றுக்கொள்வார்கள்.
4. மனம் தடம் மாற வைக்கும் கேளிக்கைகளிலும், சூதாட்டங்களிலும், முக்கியமாக தற்போதைய இணைய வலைகளிலும் நாட்டம் கொள்ளாதவர்களாக இருப்பார்கள். ஒழுக்கம் என்பது இவர்களின் உயிராக இருக்கும்.
5. எதிர்வரும் பிரச்னைகளைக் கண்டு மலைத்து நிற்காமல் அவற்றின் வேர்களை ஆராய்ந்து அவற்றை அகற்றும் வழிகளை தேட முயல்வார்கள். நல்ல வழி ஒன்றைத் தேர்ந்தெடுத்து காலம் தாழ்த்தாமல் அதைப் பின்பற்றி பிரச்னையை அகற்றுவார்கள்.
6.ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை ஆகியவற்றை பின்பற்றி வருவதை தங்களுடைய வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள். எத்தருணத்திலும் இவற்றைக் கைவிட மறுப்பார்கள்.
7. சுயநலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் எந்த விதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பொது மக்களுக்கும் சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்கள் வெற்றி மேலும் கூடும்.
8. போலியான வேஷம் போடாமல் உண்மையாகவும், விசுவாசத்துடனும் அனைவரிடமும் பாகுபாடின்றி ஒரே மாதிரி நடந்து கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்களின் இயல்பான குணத்தினை அனைவரும் அறியும்படி காட்டுவார்கள்.
9. முக்கியமாக நேர மேலாண்மையில் சிறந்தவர்களாக இருப்பார்கள். கனநேரத்தையும் வீணாக்காமல் தங்களுடைய முன்னேற்றத்திற்காக பயன் படுத்துவார்கள். நேரங்களை விரயம் செய்வோரையும் தவிர்ப்பார்கள்.
10. எப்போதும் நேர்மறை வார்த்தைகளையே பேசி நேர்மறை எண்ணங்களையும் கொண்டிருப்பார்கள். எதிர்மறையாக பேசுபவர்களையோ சிந்திப்பவர் களையோ தன்னைச் சுற்றி வைத்திருக்க மாட்டார்கள்.