குளம் ஒரே இடத்திலே தேங்கி கிடக்கும். அது தன்னுள் அனைத்தையும் தேக்கி வைத்துக்கொள்ளும் திறன் கொண்டது. எந்த சலனமும் மாற்றமும் இருக்காது. யாரேனும் குளத்தை சுத்தம் செய்து விட்டு போனாலும் கூட அது திரும்பவும் பழைய நிலைக்கே திரும்பிவிடும். எப்போதும் ஒரே இடத்தில் இருப்பதால் என்ன நன்மை நிகழ்ந்து விடப் போகிறது? குளத்திற்கு கடந்து செல்வதின் மகிமை புரிவதில்லை.
இதுவே நதியைப் பாருங்கள். கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும். நதிக்கு எல்லைகள் கிடையாது. நதியை தடுக்க முடியாது. தடைகளை உடைத்தெறிந்து போகக் கூடிய வல்லமை உண்டு. தன்னுள் குப்பைகளை சேர விடுவதில்லை. குப்பைகளை எங்காவது ஒதுக்கி விட்டு சென்று விடும். அதனால் நதியில் எவ்வளவு குப்பைகள் கொட்டப்பட்டாலும், நதி எப்போதும் தன்னை தூய்மையாகவே வைத்து கொள்ளும்.
எனவே மகிழ்ச்சியாக இருப்பதற்கான தாரக மந்திரம் மிகவும் சுலபமானதே, கடந்து சென்று விடுங்கள்.
நீங்கள் உங்களுக்கு இருக்கும் சோகம், கஷ்டம், பிரச்சனை ஆகியவற்றை குளம் போல தனக்குள் போட்டு தேக்கி வைத்து கொண்டேயிருந்தால், உங்கள் மனதில் அழுக்கு மட்டுமே சேர்ந்து கொண்டிருக்கும். நதி போல அடுத்த கட்டத்திற்கு கடந்து செல்ல கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களின் வாழ்வில் எத்தனை ஏற்றத்தாழ்வு வந்தது என்பது முக்கியமில்லை.
உங்கள் வாழ்க்கையில் பணப்பிரச்சனையோ, காதல் தோல்வியோ, கடந்த கால பிரச்சனைகளா எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்.
புது இடங்களுக்குச் சென்று, புதிய மக்களைச் சந்தியுங்கள், அழகான விஷயங்களைத் தேடி செல்லுங்கள். அதிகமாக பழைய விஷயங்களை சிந்திப்பதை நிறுத்துங்கள். மனதை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள்.
எப்போதும் நாம் படிக்கும் புத்தகத்தில் படித்த பக்கங்களை திரும்பி படிப்பதில்லை. அது ஏன் என்று தெரியுமா?
ஏனெனில் படித்த பக்கங்களில் இருக்கும் கதை நமக்கு தெரியும். அதனால் நாம் வாழ்க்கையில் கடந்த காலங்களில் நிகழ்ந்ததை அசைபோட்டுக் கொண்டு பின்நோக்கி செல்வது வீண் நேர விரயமாகும்.
எனவே புத்தகத்தில் இருக்கும் அடுத்த பக்கங்களுக்கு முன் நோக்கி நகருங்கள். வாழ்க்கையில் நிகழ்ந்த கசப்பான விஷயங்களை கடந்து செல்லவும் கற்றுக்கொள்ளுங்கள்.