மனிதர்களுக்கு எப்பொழுதும் ஒரு ஆசை உண்டு. எல்லோரும் நம்மை பாராட்ட வேண்டும். புகழ வேண்டும். இன் சொல்லையே நம்மிடம் பேசவேண்டும் என்பதுதான் அது. நம் குற்றங்களை யாராவது கண்டுபிடித்து திருத்திக் கொள்ளுமாறு கூறிவிட்டால் அடுத்த நாளிலிருந்து அவரிடம் பேசுவதைக் கூட நிறுத்தி விடுவோம். அப்படி ஒரு கோபம் வரும் அவரைக் கண்டால்.
அதேபோல் மற்றவர்கள் வித்தியாசமாக ஏதாவது ஒரு பொருளை வைத்திருந்தால் அதேபோல் நாமும் வாங்கிவிட வேண்டும் என்று துடி துடிப்பவர்கள் அநேகம் உண்டு. இன்னும் சொல்லப் போனால் நாடு பிடிக்கும் ஆசை மன்னர்களுக்கு, சொந்த வீடு கட்டி வாழ சாதாரண மனிதனுக்கு ஆசை, கல்வியில் சிறந்தோங்கி வாழ்வாங்கு வாழ மாணவர்களுக்கு ஆசை. இப்படி மானுடப் பிறவியில் ஆசையே அலை போல நாமெல்லாம் அதன் மேலே. ஆசைப்பட்டதால்தான் இன்றைக்கு கைப்பேசி வரை விஞ்ஞானம் வளர்ந்தது. இந்த வளர்ச்சி உலகத்திற்கு தேவையான ஆக்கபூர்வமான வளர்ச்சி. ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் செருக்குடன் மற்ற நாடுகளோடு போர் புரிய ஆசைப்படுவது செருக்கை காண்பிக்க துறவி யாரை வரவேற்பது போன்றது தேவையற்ற ஆசை.
ஒரு முறை அரசர் ஒருவர் துறவி ஒருவரை வரவேற்றார். தன் செல்வ செருக்கை காட்ட நினைத்த அரசன் 'துறவியாரே உங்களுக்கு என்ன தேவையானாலும் கேளுங்கள் தருகிறேன்’ என்று ஆணவத்துடன் சொன்னான்.
அரசே! என் இரு அடிமைகளுக்கு நீர் அடிமையாக இருக்கிறீர். அப்படி இருக்கையில் உம்மால் எப்படி என் தேவைகளை நிறைவேற்ற முடியும்? என்று சிரித்துக் கொண்டே கேட்டார் துறவி.
துறவியாரே இந்த நாட்டையே ஆளும் அரசன் நான். இந்த நிலையில் உங்கள் இரு அடிமைகளுக்கு நான் எப்படி அடிமையாக இருக்க முடியும்? அந்த அடிமைகள் யார் என்று கோபத்துடன் கேட்டான் அரசன்.
அரசே கோபம் வேண்டாம். என் இரு அடிமைகளுக்கு பெரும்பாலான அரசர்கள் அடிமைகள்தான் எனக்குக் கட்டுப்பட்ட அந்த இரு அடிமைகளின் பெயர் கோபமும், ஆசையும் அவர்களுக்கு நீர் அடிமையா? இல்லையா? என்று கேட்டார் துறவி.
எந்தப் பதிலும் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றான் அரசன்.
அரசனே ஆனாலும் ஆணவம் கொள்ளக்கூடாது. ஆணவத்தால் எதையும் சாதிக்க முடியாது. ஆணவம் கொண்டால் சினம் வரும். அந்த சினத்தை அடக்கி ஆள தெரியாவிட்டால் கொண்டவனையே கொல்லும் அந்த சினம். அதனால்தான் வள்ளுவரும் தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் என்று கூறியுள்ளார்.
ஆதலால் செருக்கு ஆணவத்தை அடியோடு அழித்துவிட்டு அறவழியில் செல்ல அன்பை நாடுவோம். அதுவே துன்பத்திற்கு காரணமான ஆசையையும் கோபத்தையும் துண்டித்து வழி நடத்தும்!