

சாதாரணமாக ஒரு வீட்டில் திருமணத்திற்கு தகுதி படைத்த இளைஞன் இருந்தால், அந்தப் பையனை பார்த்து கேட்கும் முதல் கேள்வி, "விளக்கேற்ற எப்பொழுது ஒரு மகாலட்சுமியை அழைத்து வரப் போகிறாய்?" என்பதுதான் இருக்கும். அதற்கு அந்த பையன், "இப்பொழுது எல்லாம் சுவிட்ச் போட்டால் லைட் எரிகிறது. அதற்கு எதற்கு பெண்?" என்பார். "அதை போடுவதற்கும் ஓர் ஆள் வேண்டும்," என்று எதிர் பதில் வரும்.
இப்படி தமாஷாக பேசப்பட்டாலும், மார்கழி காலையில் கோலம் போட்டு விளக்கு ஏற்றுவதில் இருந்து, மாலை ஆறு மணிக்கு விளக்கு ஏற்றுவது என்பது வரை, குடும்பத் தலைவியின் தலைமைத்துவம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த விளக்கு ஒளிரும் அழகைப் பார்த்தே இருள் அகல மனது உற்சாகம் பெறும் . இருளைப்போக்கி ஒளி ஏற்றுவதில் முக்கியத்துவம் பெறுகிறாள் என்பதால் தான் குடும்பத் தலைவிக்கு குடும்ப விளக்கு என்ற பெயர் நிலைத்து நிற்கிறது. அது அவளது தலைமைத்துவம்.
அடுத்ததாக வீட்டிற்கு மூத்த மகன் தான் தலைவன். பெற்றார், பிறந்தார், தான் பெற்றவர், தாய் வழி, தந்தை வழி உறவுகளை பேணுபவர் என்று உறவுகளை கட்டி காப்பதில் தலைமைத்துவம் பெறுபவர் மகன்தான். அதிலும் மைந்தன் என்ற சொல்லின் அர்த்தம் உறவுகளை வளர்த்தெடுப்பதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மிக அன்பான நேர்மையான மனிதராக இருப்பது, எல்லோரையும் கட்டி காப்பவன் என்பதை குறிப்பதாகும்.
பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மிகுந்த தலைமைத்துவம் உண்டு. அந்தப் பள்ளியை சிறப்பாக நடத்தி அங்குள்ள பள்ளிகளில் ஏன் மாநில அளவில் தலைசிறந்த பள்ளியாக தனது பள்ளியை கொண்டு வர வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக செயல்பட வேண்டும். அதில் தான் அவரின் தனித்துவமான தலைமைத்துவம் அடங்கியிருக்கிறது.
கல்லூரி மேலாளர் தலைமைத்துவம் என்பது தன்னாட்டு மாணவர்களை தனித்துவம் மிக்கவர்களாக்கி பல்வேறு நிறுவனங்களில் தொழில் முனைவோர் ஆக்குவது தான்.
ஒரு நிறுவனத்தின் மேலாளருக்கு தலைமைத்துவம் என்பது அந்த நிறுவனத்தை உலகத் தரம் வாய்ந்த ஒரு நிறுவனமாக உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், ஒரு புதிய உலகை உருவாக்குவதற்கு அவர்களால் இயன்ற பங்கை ஆற்றுவதன் மூலம் ஒரு சமூக பொறுப்புணர்வை கொண்டிருப்பது என்று கூறலாம்.
ஆக இப்படி அவரவரும் தான் ஏற்றுக் கொண்ட விளைவுகளுக்கு தனிப்பட்ட பொறுப்பு ஏற்றுக் கொள்வது என்பதுதான் தலைமைத்துவம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூற வேண்டுமானால் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களைக் கூறலாம். அவர் முதல் முதலாக ஏவுகணை ஏவிய போது அது தோல்வியைத் தான் தழுவியது. அப்பொழுது பல பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் பொழுது இந்த தோல்வி என்னால் ஏற்பட்டது என்று தோல்வியை தன் மீது சுமத்திக் கொண்டு, அடுத்த முறை வெற்றி பெற்ற போது அது டீம் ஒர்க் என்று கூறி டீமை பெருமைப்படுத்தினார். அதுதான் அந்த தலைமைப் பொறுப்புக்கு அவர்கள் அளித்த சிறப்புமிக்க மதிப்பு.
இப்படி தலைமைத்துவம் என்பது அந்தந்த தலைவர்கள் தான் கொடுத்த வாக்குகளை காப்பாற்றி ஆக வேண்டும். மக்களிடம் இருக்கும் சிறந்த விஷயங்களை கண்டு கொண்டு அவர்கள் வெற்றி பெறுவதற்கு அவர்களை பயிற்று விப்பது என்று பொருள் கொள்ளலாம்.
இந்த வழியில் பார்த்தால் லீ க்வான் யூ என்பவர் பதவியில் இருந்த பொழுதும், இல்லாத பொழுதும் நாட்டுப்பற்று மிக்கவராக தலைமைத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக திகழ்ந்தார்.
தன் மனைவியோடு சிறிது நேரம் தன் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் ஆற்றுப்பக்கம் உலாவச் செல்வது வழக்கம். அவர் மனைவி இறந்த போதும் அந்த கஷ்டமான துயரில் உலாவச் சென்றவர், அந்த ஆற்றில் மிதந்த குப்பையை தான் சுட்டிக் காட்டுவது போல் போட்டோ எடுக்க வைத்து, 'அதை இதற்குரிய பரிகார நடவடிக்கை எடுக்கும் போது, அது எந்த இடத்தில் இருந்தது என்று எளிதில் அடையாளம் காட்டத்தான் குறிப்பிட்டு காட்டுவது போல் படத்தினையும் இணைத்தே அனுப்பச் சொன்னேன்' என்று விளக்கம் கூறினாராம். அவர் நீண்ட காலம் சிங்கப்பூரில் ஆட்சி புரிந்தவர் என்பதை நாம் அறிவோம். அந்த தலைமைத்துவத்துக்கு அவர் செலுத்திய மரியாதை எப்படி என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இப்பொழுது சிறுவயதாக இருப்பவர்கள் விரும்பிய பெரிய பதவியை வகிக்கிறார்கள். அவர்கள் இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது அவர்களின் தலைமைத்துவத்தை இன்னும் சிறப்பாக நடத்த வழிவகுக்கும்.