படிப்பு வேறு. பணி வேறு. படிப்பில் ஜொலிப்பவர்கள் பணியில் மின்னி விட முடியும் என்ற உத்திரவாதம் இல்லை. பணியில் சேர்கின்ற இளைஞர்கள். முதலில் பணியை நேசிக்க வேண்டும். பணத்தைத் தாண்டி நாம் இயற்றிய செயல்களை நினைக்கும்போது நம்மை நெகிழ வைக்கும். நாம் செய்கிற பணி நம்மை இருத்தலோடு இணைக்கிறது மரங்களை நட்டால் அது மண்ணுக்கு இடுகிற மருதாணியாகிறது. கோப்புகளை விரைவாகத் தீர்வு செய்தால் எண்ணற்ற வீடுகளில் விளக்கேற்றிய வெளிச்சம் விழிகளில் தெரிகிறது. தரமான பொருட்களை விற்பனை செய்தால் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய உணர்வு ஏற்படுகிறது. பணியை மகிழ்ச்சியாக நுகராவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டதாகக் கருதிக் கொள்ளலாம்.
கடனுக்காகபணியாற்றுகிறார்கள் அதிகாரியை திருப்திபடுத்துவதற்காக பணியாற்றுவார்கள். பணியை வேண்டா வெறுப்பாகச் செய்வார்கள். கடமைக்காக பணியாற்றுபவர்கள் அக்கறை செலுத்துபவர்கள். கச்சிதமாகப் பணியாற்றுவார்கள். தொலை நோக்குப் பார்வையுடன் பணியாற்றுபவர்கள் விளைவுகளையும் சிந்திப்பார்கள். வாழ்க்கைக்குப் பணம் முக்கியம். ஆனால் அதை நியாயமான முறையில். ஈட்டினால்தான் நிம்மதியாக இருக்க முடியும். பணியில் யார் வேகமாக இருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள். பணிகளை நிறைவேற்றும்போது வேகம் அவசியம் இளம் பணியாளர்கள் உடல்ரீதியாக தங்களை தொடக்கத்திலிருந்தே கவனித்துக்கொள்வது அவசியம். தினமும் ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்தே உடலை நல்ல நிலையில் வைக்கவேண்டும்.
அரசுப்பணி என்பது தற்போது அறிதாகிவிட்டது. எனவே தனியார் துறையில் உள்ளவர்கள் பொருளாதார பாதுகாப்போடு இருக்க வேண்டும். எந்தத் துறையில் இருந்தாலும் நாம் அறிவு ரீதியாக முன்னேறிக் கொண்டே இருப்பது முக்கியம். நாம் அறிவைப் புதுப்பிக்கவில்லை யென்றால் அது தேய்மானம் அடைந்துவிடும். நாம் மற்ற நிறுவனங்களோடு தொடர்பு கொள்ளும்போது நம் அறிவாற்றல் அவர்களைக் கவர்ந்தே நமக்குச் சாதகமாகப் செயல்பட வைக்கும்.
மனிதநேயம் அன்பு கருணை பொங்க சிறந்த இலக்கியங்களை வாசிப்பு அவசியம். அறிவார்ந்த மனிதனையே சமூகம் விரும்புகிறது என்பதை உணரவேண்டும். சிலர் அலுவலகமே வாழ்வு என அங்கேயே தன் ஆற்றல் அனைத்தையும் ஆவியாக்கிவிடுவார்கள். வீட்டுக்கு வரும்போது சக்கையாக பிழிந்த கரும்பாக இருப்பார்கள். இன்னும் சிலரோ இல்லமே எல்லாம் என்று இருப்பார்கள். இரண்டு மனப்பான்மைகளுமே தவறு. பணியில் சேர்ந்த நாள் தொடங்கி இரண்டையும் சரிசமமாகக் கையாளுவதே முக்கியம். அலுவலக நேரத்தைக் கச்சிதமாக பயன்படுத்துவது, அரட்டைகளைப் தவிர்ப்பது பணியிடத்தில் நிறையக் கற்றுக்கொள்வது போன்ற நெறிகளில் மூலம் பணி சுமையாவதைத் தடுக்கலாம்.
இல்லத்திலும் பணிகளை அட்டவணையிட்டு முடித்தல் அவசியம். பணியிடத்தில் மூத்தவர்களுக்கு மரியாதை தருதல் உயர்ந்த பண்பு. நம்மைவிட வயதில் பெரியவர்களாக நமக்குக் கீழ் பணியாற்றலாம். அவர்கள் வயதை மறக்காமல் மரியாதையோடு நடத்துவது நம்மை உயர்த்திப் பிடிக்கும். நேர்மையான உயர் அலுவலர்களோடு பழகுவதன் மூலமாக நாம் தூய்மையாக வைத்திருக்க முடியும். இளம் பணியாளர்கள்.
தங்களைத் தாங்களே. செதுக்கிக் கொள்கிற சிற்பிகளாக மாறினால் நாடும் வீடும் ஒளிர்வதற்கு எண்ணற்ற வாய்ப்புகள் காத்திருக்கின்றன. பணியிலிருந்து ஓய்வு பெறும்போது நாம் திரும்பிப் பார்த்தால் வளமான கடந்த காலம் நம்மைப் பார்த்து புன்னகைக்க வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.