ஒருவர் தன் வாழ்நாளில் 16 வயதிலிருந்து 25 வயது வரை பணம் பணம் என்று அதன் பின்னாடி போகக்கூடாது. பின் அந்த வயதில் எந்த விஷயம் முதன்மையானது என்ற சந்தேகம் வருகிறதா?
இங்கு பணக்காரர்களை விட, பணத்திற்காக போராடுபவர்களே அதிகம். அதுவும் வீட்டு சுமையை சிறு வயதிலேயே முதுகில் தூக்குபவர்களுக்கு சொல்லவே வேண்டாம். சிலர் படிப்பைக்கூட பாதியிலேயே நிறுத்திவிட்டு பணம் சம்பாதிக்கப் போய்விடுவார்கள். இதனால், அந்த வயதில் அனுபவிக்க வேண்டிய எதையும் அணுபவிக்க முடியாமல் போய்விடும். இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம், பணத்தினால் மட்டுமே உலகம் இயங்குகிறது என்று பணம் குறித்தான தவறான அர்த்தத்தைப் புரிந்துக்கொண்டு பணம் சம்பாதிப்பார்கள்.
எதிலும் அவசரம் வேண்டாம். ஏனெனில், ஒருமுறை மூச்சை இழுத்துவிட்டு, 'வாழ்க்கை என்றால் என்ன?' என்று யோசித்து பாருங்கள். ஓடி ஓடி சம்பாதித்து முதுமையில் திரும்பிப் பார்க்கும்போது, நாம் வாழ்ந்தது என்ன வாழ்க்கை என்று நினைக்கத் தோன்றும்.
ஒருவர் உங்களிடம் நீ யார்? என்று கேட்கும்போது உங்கள் பெயரையோ? அல்லது உங்கள் தொழிலையோ? உங்கள் சம்பளத்தையோ? சொல்வது நீங்கள் என்ற அர்த்தம் இல்லை. நீங்கள் யார் என்ற பதிலுக்கு ஆழ்ந்த அர்த்தத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், முதலில் பணத்தின் பின் ஓடுவதை நிறுத்த வேண்டும்.
காலை மடக்கி சாலையில் உட்கார்ந்தால்கூடத்தான் பணம் கிடைக்கும்… சரிதானே?
இதற்கு மானம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா என்ற ஒரு கேள்வி வரும். சுரண்டுவதை எங்கு சுரண்டினால் என்ன?
சரி விஷயத்திற்கு வருவோம்.
16 வயது முதல் 25 வயது வரை பணம் பின்னால் ஓட வேண்டாம். அந்த வயதில், உங்கள் திறமை என்ன என்று கண்டுபிடித்து, அதில் தேர்ச்சிப்பெறுங்கள், உங்களை சுற்றி யாரெல்லாம் இருக்க வேண்டும், எந்த மாதிரியான ஆட்கள் இருந்தால், உங்கள் குணத்தையும் திறமையையும் வளர்த்துக்கொள்ளலாம் என்று சிந்தியுங்கள். உங்களின் உடல் ஆரோக்கியத்தை கவனியுங்கள். பணியில் உங்கள் திறமை வைத்து எப்படி முன்னேறலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள், உங்கள் வெளித்தோற்றத்தை மேம்படுத்துங்கள் (அதாவது ஆடை முதல் காலணி வரை).
ஆகமொத்தம் அந்த வயதில் உங்கள் மீதும், உங்கள் திறமை மீதும், உங்கள் பணி மீதும் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
இவற்றில் கவனம் செலுத்தினாலே, 25 வயதுக்கு பின் பணம் உங்களைத்தேடி வரும் என்பதில் சந்தேகமேயில்லை.
நமது வாழ்நாளில், எப்போது என்ன செய்ய வேண்டும், எதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற புரிதல் இருந்தாலே வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும்.