
தன் வாழ்வில் ஆனந்தத்தையே உணராத மனிதர் என்று யாராவது இருக்கிறார்களா?. அப்படி ஒருவர் இருக்க சாத்தியமே இல்லை. உலகத்திலே மிகவும் துயரமான மனிதன் கூட, தன் வாழ்வில் ஆனந்தமான கணங்களை அனுபவித்திருக்கிறான். அவனால் எப்படி துக்கமாக இருக்க முடிகிறதோ, அதேபோல் ஆனந்தமாகவும் இருக்கமுடியும். அவனுடைய பிரச்னை என்னவென்றால் ஆனந்தத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அவன் துயரமாக இருப்பதற்குக் காரணமே ஆனந்தத்தைத் தொலைந்துவிட்டதுதான். மக்களிடம் துயரம் அதிகமாக இருப்பதற்குக் காரணமே, நேற்று அற்புதமாக இருந்தது. இன்று என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்று நினைப்பதுதான். இது அவர்கள் துயரத்தைப் பன்மடங்காக்குகிறது. ஆனந்தத்தை உணராதவர்கள் யாருமே கிடையாது.
உங்களால் ஒரு கணத்திற்கு ஆனந்தத்தை உருவாக்க முடியும் என்றால் நீங்கள் ஒவ்வொரு கணமும் அந்த ஆனந்தத்தை தக்க வைக்கவும் முடியும். சிலர் உள்ளார்ந்த ஆனந்தத்தை எப்படிப் பெறுவது என்று நினைக்கின்றனர். நீங்கள் ஆனந்தத்தை வெளியே எப்போது அனுபவித்தீர்கள்?. நீங்கள் மது அருந்தும்போது ஆனந்தமாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த அந்த ஆனந்தத்தையும் நீங்கள் உள்ளேதானே உணர்ந்தீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் சரி, ஆனந்தம் எப்போதும் உள்ளுக்குள்ளேதான் நிகழ்கிறது. உங்களுக்கு வெளியே அல்ல.
உங்கள் துயரத்திற்குக் காரணம் நீங்கள் ஆனந்தத்திற்குத் திரும்பி வராமல் அதைத்தேடி வெளியே அலைந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனந்தம் உள்ளேயே இருக்கிறது என்பது தெரியாமல் அது வெளியே தொங்கிக் கொண்டிருப்பதைபோல் தேடிக்கொண்டு உங்கள் சக்தியை விரயம் செய்கிறீர்கள். உங்கள் இயல்பே ஆனந்தமாக இருக்கும்போது, அதை உணராமல் அதைவிட்டு விலகி தேடி அலைகிறீர்கள்.
ஆக, ஆனந்தமாக இருக்கும் தகுதி அனைவருக்கும் உண்டு. ஆனால் அதை உங்களால் சில கணங்களுக்குதான் உருவாக்க முடிகிறது. மீதி நேரம் முழுவதும் துயரமான கணங்களை உருவாக்குகிறீர்கள். ஒரு கணத்தை ஆனந்தமாக உங்களால் உருவாக்க முடியும் என்றால், அடுத்தடுத்த. கணங்களையும் நீங்கள் விரும்பிய விதத்தில் ஆனந்தமாக உங்களால் நிச்சயம் உருவாக்க முடியும். முழு வாழ்க்கையே இப்படி ஒவ்வொரு கணங்களால்தான் உங்களிடம் வருகிறது.
நல்லவேளை, ஒரு நேரத்திற்கு ஒரு கணம்தான் தனித்தனியாக வருகின்றது. கணங்கள் கட்டு கட்டாக உங்களிடம் வருவதில்லை. இந்தக் கணத்தில் ஆனந்தமாக இருக்கத் தெரிந்தால் போதும், உங்கள் வாழ்வே ஆனந்தமாகிவிடும். ஆனால் இது தெரியவில்லை என்றால், நீங்கள் நிரந்தரமாக உங்களை தொலைத்துவிடுவீர்கள்.