நேர்த்தி... இதற்கு நம் வாழ்வில் பல அர்த்தங்களை சொல்லலாம். மகிழ்ச்சியான, தீவிரமான, திறமையான, நிதானமான, தெய்வீகமான, மென்மையான இப்படி பல அர்த்தங்கள் இதில் பொதிந்து இருக்கிறது. மிகவும் குறிப்பிடத்தக்க குணாதிசயங்களுக்கான வார்த்தை மனோபாவம் என்றும் இந்த நேர்த்தியை குறிப்பிடலாம். ஆங்கிலத்தில் சொல்வதானால் habitually orderly&clean in habits என்று சொல்லலாம்.
நாம் செய்கின்ற செயல் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு துணி துவைத்து, அலசி காய வைக்கிறீர்கள். இதில் என்ன நேர்த்தி வேண்டிக்கிடக்கு என்று கேட்கலாம். ஆனால் அதிலும் ஒரு ஒழுங்கு/நேர்த்தி இருக்க வேண்டும் உள்ளாடைகளை, புடவை மற்றும் சட்டைகளை நன்றாக உதறி நேர்த்தியாக வரிசையாக' கிளிப் 'போட்டு காய வைக்க துணிகள்காற்றில் அசைந்தாடி உங்களுக்கு நன்றி சொல்லும்.
காய்ந்ததும் காயவைத்து எடுத்த துணிகளை அயர்ன் செய்வது போல் அழகாய் மடித்து வைக்க... நீண்ட நாள் உங்களுக்கு விஸ்வாசமாக இருக்கும்.
சமையல் செய்து முடித்தவுடன் சமையல் செய்த சுவடே தெரியாமல் அடுப்பு மற்றும் மேடைகளை சுத்தமாக கண்ணில் ஒற்றிக் கொள்வது போல் சுத்தம் செய்வது... சமையலறைக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை.
சமைத்த உணவுகளை அப்படியே கடை பறக்காமல் அததற்குரிய கிண்ணங்களில் வைத்து மூடி போட்டு வைக்க வேண்டும். அழகழகாய் சரியான அளவுகளில் கரண்டிகள் மற்றும் ஸ்பூன்கள்.
சாப்பிட்டு முடித்ததும், சாப்பிட்ட பாத்திரங்களை, அதில் உள்ள பத்துக்களை எல்லாம் எடுத்துவிட்டு ஒரு முறை அலசி விட்டு பாத்திரம் கழுவும் இடத்தில் போட வேண்டும். (வேலை செய்யவரும் பெண்மணியும் நம்மைப்போல் ஒரு மனுஷி தானே) (நாம் சாப்பிட்ட தட்டை அப்படியே போடலாமா?) இப்படி....
எல்லாவற்றிலும் ஒரு சிறப்பு, ஒழுங்கு, அழகு இருக்க வேண்டும். முக்கியமாக வார்த்தை பிரயோகிப்பு. இது மிகவும் முக்கியமான ஒன்று.
வார்த்தைகளை உதிர்த்திடும் முன் கவனிப்பது முக்கியம்.
சிதறிய பின் கதறி பலனில்லை. நம் எண்ணத்தை வெளிப்படுத்த வண்ண வண்ண வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும்.
நாம் சொல்ல வந்த விஷயங்களை அன்பு என்னும் மொழிகொண்டு வார்த்தைகளை ஒன்றிணைத்து, அளந்து பேசுதல் அவசியம்.
பூஜை அறையில் சிறிய அகல் விளக்கு ஏற்றுவதாக இருந்தாலும் எண்ணெயை சிந்தாமல், சிதறாமல் ஊற்றி சுவாமி படங்களை சுத்தம் செய்து பழைய பூக்களை எடுத்து புதிய பூக்களை போட்டு விளக்கேற்றி வழிபட பூஜை அறை தெய்வாம்சமாக மிளிரும். இறைவன் மானசீகமாக பேசுவார்.
கண்ணில் படும் ஒட்டடைகளை அவ்வப்போதுசுத்தம் செய்தல், மின்விசிறியை மாதமொருமுறை சுத்தம் செய்தல்... இவையெல்லாம் நம் எனர்ஜிலெவலை அதிகப்படுத்தக்கூடியது.
குளியலறையில் ஆங்காங்கே கழற்றிய துணிகளை போடாமல், சோப்புகளை குளித்து முடித்த பின் அலசி அதற்குரிய இடத்தில் வைக்க, குளித்து விட்டுவெளியில் வரும்போது குளியல் அறையை நன்கு அழுத்(ந்)த பெருக்கிவிட்டு (நீர்போக)வர... குளியலறை... நமக்கு சல்யூட் வைக்கும்.
இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் கொண்டு நேர்த்தியாக இருந்தோமேயானால் நமக்கே நம்மை பார்க்க மிகவும் பிடிக்கும்.
இப்படி எல்லா விஷயங்களிலும் நேர்த்தியைக் கடைபிடிக்க...
நாளை வரலாற்றில் நிச்சயம் உங்களுக்கு ஓர் இடம் உண்டு!
நீங்களும் முயற்சித்துதான் பாருங்களேன். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் நேர்த்தியாக இருங்களேன். வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.