மனித மனம் எப்பொழுதும் சோர்வாக இல்லாமல் குழப்பமாக இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அந்த மகிழ்ச்சி தான் நமக்கு உற்சாகத்தை தரக்கூடியது.
ஒவ்வொரு சின்ன சின்ன விஷயத்திலும் நாம் சந்தோஷம் அடைந்தால் நம் மனது மட்டுமல்ல நமது உடலும் நல்ல உற்சாகத்தை பெறும். உற்சாகம் இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் இதுவும் கடந்து போகும் என நினைத்து நாம் எதையாவது இழந்தோம் என்றால் அதையே சிந்தித்து கொண்டு இருக்காமல் மீண்டும் எழுந்து வெற்றி பெறுவது எப்படி என மனதில் ஒரு வைராக்கியத்துடன் எழுந்து நின்றோம் என்றால் உற்சாகம் தானே தொற்றிக் கொள்ளும்.
இதற்கு இந்த ஒரு சம்பவம் உதாரணமாக இருக்கும் எவ்வளவு மோசமான சூழ்நிலையிலும் ஓர் நேர்மறையான அம்சம் இருக்கும் அதில் கவனம் வைத்தல் ஜெயிக்கலாம் என்று எல்லோருக்கும் சொல்லும் மனிதர் ஒருவர் இருந்த வியாபாரத்தில் நல்ல வருமானம் வந்தது. அரண்மனை மாதிரி வீடு ஐந்தாறு கார்கள், ஏராளமான நிலம் எல்லாவற்றிற்கும் வேலையாட்கள் என்று வாழ்பவர் இதை சொல்வதில் யாருக்கும் ஆச்சரியம் இருக்காது. அவரிடம் பேசினாலே யாருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். தன் பள்ளி கால நண்பருக்கு உதவி செய்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைத்தார் அந்த வியாபாரி.
ஆண்டுகள் ஓடின. வெளிநாட்டு வேலைக்கு போன நண்பர் திரும்பி வந்தார். வியாபாரி இப்போது தொழிலில் நஷ்டம் அடைந்து எல்லா சொத்துக்களையும் இழந்து பக்கத்து நகரில் வாடகை வீட்டில் வசிப்பதை அறிந்தார். அவரை போய் பார்த்தார் இப்போதும் அதே உற்சாகத்துடன் இருந்தார் அந்த மனிதர்.
எப்படி இது? என்று பிரமிப்புடன் கேட்டார் நண்பர்.
இழந்ததைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் இருப்பதன் அருமையை உணராமல் போய்விடுவோம். நன்கு படிக்கிற மகன் இருக்கிறான் எனக்கு உழைக்கிற ஆரோக்கியம் இன்னும் இருக்கிறது. குறைந்த வாடகையில் ஒரு வீடு கிடைத்திருக்கிறது. வாழ்க்கையை ஓட்டும் அளவு வருமானம் இருக்கிறது. இந்த கஷ்ட காலமும் நிரந்தரமில்லை இதுவும் ஒரு நாள் மாறும் என்றார் உற்சாகம் குறையாமல்.
நிச்சயமாக துன்பத்துடன் இன்பமும் இருக்கிறது. வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும். நாம் அதை மனதில் நினைத்துக் கொண்டால் தினம் தினம் உற்சாகத்துடன் நாளைக் கழித்து வாழ்நாளை சந்தோஷமான நாட்களாக மாற்றலாம்.