
தோல்விகள் என்றாலே எல்லாமே போய்விட்டது, நாம் தோற்றுப் போய்விட்டோம் என்றுதான் நினைப்போம். ஆனால், தோல்வியும் நமக்கு சில நல்ல விஷயங்களை கொடுக்கிறது என்பதை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். தோல்வியில் சிக்கி பாடம் கற்றவர்கள்தான் நமக்கு நன்மை பயக்கும் பல விஷயங்களை முன்னாளில் செய்திருக்கிறார்கள்.
தோல்விகள் நமக்கு என்னென்ன தருகிறது அதைபோல் விஞ்ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் தோல்விகள் என்னென்ன கொடுத்து இருக்கிறது என்பதை பற்றி இப்பதிவில் சுருக்கமாக பார்ப்போம்.
தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வி யடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார்.
இனி கல்வி கற்கமுடியாது என்று பள்ளியிலிருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் வெற்றியாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது.
சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் லிங்கன் அனைத்துத் தோல்விகளையும் கண்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார். தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனிபோல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு.
யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள். உடல் ஊனமுற்றிருந்த ஒருவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டுபிடிப்பை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப்பயன்படுத்தி உயர்வடையுங்கள்.
நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும். ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்த வகையில் தோல்வி ஓர் நன்மைதான்.
தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர்மறையான மனோபாவத்துடன் எடுத்துக்கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம். தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்னை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை."
தோல்வி என்றால் கவலைப்படாதீர்கள். அது நிச்சயம் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுக்கத்தான் வந்திருக்கிறது என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள் எல்லாமே சக்சஸ்தான்.