

கையில் முதல் சம்பளம் வந்தவுடன் நாம் என்ன செய்வோம்? உடனே ஒரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் அல்லது நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட ஒரு வாட்ச் இல்லையென்றால் நண்பர்களுக்குப் பார்ட்டி என்று பணத்தைக் காலி செய்வோம். 'நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம், நான் செலவு பண்றேன்' என்று நாம் நினைப்போம். ஆனால், உண்மையான பணக்காரர்கள் சிந்திக்கும் விதமே வேறு. இந்தப் பதிவில் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கு முன், நாம் வாங்க வேண்டிய அத்தியாவசியமான விஷயங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.
1. முதலில் 'சுதந்திரத்தை' வாங்குங்கள்: பணக்காரர் ஆவதற்கு முதல் படி, கடன் இல்லாத வாழ்க்கை. உங்களிடம் கிரெடிட் கார்டு கடனோ அல்லது தனிநபர் கடனோ இருந்தால், நீங்கள் முதலில் வாங்க வேண்டியது அந்த கடனுக்கான விடுதலையைத் தான். கடன் என்பது உங்களை ஒரு அடிமையாக வைத்திருக்கும் சங்கிலி. அந்தச் சங்கிலியை உடைப்பதுதான் உங்களின் முதல் Purchase ஆக இருக்க வேண்டும்.
2. மன அமைதி: கடன் அடைத்த பிறகு, அடுத்து வாங்க வேண்டியது 'மன அமைதி'. அதாவது, வேலை போனாலும் அல்லது அவசரத் தேவை வந்தாலும் சமாளிக்கக்கூடிய Emergency Fund. குறைந்தது 6 மாத காலத்திற்குத் தேவையான பணத்தைச் சேமித்து வைப்பதே உண்மையான மன அமைதி. அடுத்த வேளை சோற்றுக்குப் பயப்படாமல் இருந்தால்தான், உங்களால் தைரியமாகப் பெரிய முடிவுகளை எடுக்க முடியும்.
3. வருமானம் தரும் விஷயங்கள்: அடுத்து, உங்கள் தொழிலுக்குத் தேவையான கருவிகளை வாங்க வேண்டும். நீங்கள் ஒரு வீடியோ எடிட்டர் என்றால், ஒரு நல்ல லேப்டாப் வாங்குவது செலவு அல்ல அது முதலீடு. ஒரு கேமரா வாங்குவது, நல்ல இணைய வசதியை ஏற்படுத்துவது போன்றவை உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் கருவிகள். கேளிக்கைக்காகச் செலவு செய்யாமல், உங்கள் திறமையை வளர்க்கும் கருவிகளை வாங்குங்கள்.
4. அறிவு மற்றும் திறமை: 'என்னிடம் இருக்கும் பணத்தை யாரும் திருடலாம், ஆனால் என் அறிவை யாராலும் திருட முடியாது.' எனவே, புத்தகங்கள், ஆன்லைன் கோர்ஸ்கள், செமினார்கள் போன்றவற்றில் பணத்தை முதலீடு செய்யுங்கள். உங்களை நீங்களே தகுதிப்படுத்திக் கொள்வது தான் நீங்கள் செய்யும் மிகச் சிறந்த முதலீடு.
5. சொத்துக்கள்: இப்போதுதான் முக்கியமான கட்டத்திற்கு வருகிறோம். மேலே சொன்னவற்றைச் செய்த பிறகு, மீதமுள்ள பணத்தில் 'சொத்துக்களை' வாங்க வேண்டும். பங்குகள், ரியல் எஸ்டேட், தங்கம் அல்லது உங்களுக்கு வருமானம் தரக்கூடிய பிஸ்னஸ் ஆகியவற்றில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் தூங்கும்போது கூட இந்தப் பணம் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும். பணக்காரர்கள் சொத்துக்களை வாங்கிய பிறகுதான் ஆடம்பரத்தை யோசிப்பார்கள்.
6. ஆரோக்கியம் மற்றும் அனுபவங்கள்: உடல்நிலை சரியில்லை என்றால், எவ்வளவு பணம் இருந்தும் பயனில்லை. எனவே, நல்ல சத்தான உணவு, ஜிம் மெம்பர்ஷிப் போன்ற ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் செலவு செய்யுங்கள். அதேபோல், புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது, புதிய மனிதர்களைச் சந்திப்பது போன்ற அனுபவங்களை வாங்குங்கள். இது உங்கள் சிந்தனையை விரிவுபடுத்தும்.
நம்மில் பலர் செய்யும் தவறு என்னவென்றால், எடுத்தவுடனேயே பணக்காரர்களைப் போலத் தோற்றமளிக்க விரும்புகிறோம். விலையுயர்ந்த கார், பிராண்டட் துணிகள் வாங்குவது நம்மைப் பணக்காரர்களாகக் காட்டலாம், ஆனால் அது நம்மை ஏழையாக்கிவிடும். மேலே குறிப்பிட்டது போல, முதலில் கடனை அடைத்து, திறமையை வளர்த்து, சொத்துக்களைச் சேர்த்த பிறகு, அந்தச் சொத்துக்களில் இருந்து வரும் வருமானத்தில் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதே புத்திசாலித்தனம்.