இந்த பதிவில் நான் சொல்லப்போகும் 6 விஷயங்களை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால், வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் மனப்பக்குவம் உங்களுக்குக் கிடைத்துவிடும். மேலும் எத்தகைய கெட்ட விஷயங்களுக்கும் நீங்கள் பலியாகாமல், சிறப்பாக வாழ்க்கையை நடத்த இவை பெரிதும் உதவும்.
உடல் நலம்: உடல் நலத்தை நான் ஏன் முதலில் குறிப்பிடுகிறேன் என்றால், ஒருவருக்கு உடல்நலம் சரியாக இருந்தால்தான் அவர் செய்ய விரும்பும் விஷயங்களை செய்ய முடியும். எனவே ஒவ்வொருவரும் முதலில் தங்களது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். வாழ்வில் பல இடங்களில் ஆரோக்கியம் மிகப்பெரிய பலமாக உங்களுக்கு இருக்கும். பல இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வர உடல் வலிமை ஏதுவாக இருக்கும்.
ஒரே தவறை மீண்டும் செய்யாதீர்கள்: தவறு செய்வது என்பது இயல்பானதுதான். ஆனால் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்வது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள நினைக்க வேண்டுமே தவிர, தவறு எனத் தெரிந்து மீண்டும் அதையே செய்யாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கலாம்.
தீய நண்பர்கள் வேண்டாம்: உங்களைப் பற்றி பிறரிடம் தவறாக பேசும் நண்பர்களிடம் ஒருபோதும் பழகாதீர்கள். அவர்களால் உங்களுடைய நற்பெயர் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. உங்களுடன் பழகுபவர் கெட்டவர் என்பது தெரிந்தால், எதைப் பற்றியும் சிந்திக்காமல் விலகிவிடுவது நல்லது. இது உங்களுக்கு பல வகைகளில் நன்மை பயக்கும். எனவே யாருடன் பழகுகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து பழகுங்கள்.
எச்சரிக்கையுடன் இருங்கள்: நம் வாழ்வில் நமக்கு எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே எல்லா சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் தன்மையுடன் இருங்கள். எனவே அனைத்திற்கும் தயாராக எப்போதும் எச்சரிக்கையுடன் இருங்கள். நீங்கள் எச்சரிக்கையாக இல்லாத பட்சத்தில் திடீரென அதிக சவால்களை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல், வாழ்க்கையே மோசமாகலாம்.
திட்டமிட்டு செயல்படுங்கள்: வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் திட்டம் என்பது மிக முக்கியம். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது தெரிந்தால் மட்டுமே, வாழ்க்கையில் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தெளிவு நமக்கு இருக்கும். இலையேல் ஏதோ வாழ்க்கையை வாழ்கிறோம் என்ற நினைப்பிலேயே, ஏதோ ஒரு திசையில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்போம். இது திருப்திகரமான வாழ்க்கையை உங்களுக்குக் கொடுக்காது. எனவே திட்டமிட்டு செயல்படுங்கள்.
யாரையும் பலவீனமாகக் கருதாதீர்கள்: ஒரு நபர் சாதாரணமாக இருக்கிறார் என்பதற்காக அவரை பலவீனமாகப் பார்க்காதீர்கள். அவர்களுக்கு உள்ளே எத்தகைய வலிமை உள்ளது என்பது நமக்குத் தெரியாது. எனவே அனைவரையும் ஒரே மாதிரி புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் மிக முக்கியம். இப்படி இருந்தால் மட்டுமே எதிரிகளையும் எதிர்கொண்டு உங்களால் வீழ்த்த முடியும். எனவே அனைத்தையும் கவனித்து பொறுமையாக செயல்படுங்கள்.