

வாழ்க்கை என்பது ஒரு சதுரங்க விளையாட்டு போன்றது. இங்கே நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நமக்கு எதிரில் இருப்பவர் எடுக்கும் முடிவைச் சார்ந்தே இருக்கிறது. "நான் யாருக்கும் கெடுதல் நினைக்கல, எனக்கு ஏன் கெடுதல் நடக்குது?" என்று புலம்பும் நல்லவர்கள் ஒரு பக்கம்; "ஊரை ஏமாத்தினாதான் உருப்பட முடியும்" என்று நினைக்கும் கெட்டவர்கள் மறுபக்கம். இதில் யார் உண்மையில் ஜெயிக்கிறார்கள்?
இந்தக் குழப்பத்திற்கு விடை தேட, கணிதத்தின் ஒரு அற்புதமான பிரிவான Game Theory-யை கையில் எடுத்து அலசுவோம் வாருங்கள்.
The Prisoner's Dilemma!
இரண்டு குற்றவாளிகள் போலீசில் மாட்டிக்கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவருமே உண்மையை ஒப்புக்கொள்ளாமல் அமைதியாக இருந்தால், இருவருக்கும் குறைந்த தண்டனை கிடைக்கும். ஆனால், ஒருவர் மற்றவரைக் காட்டிக்கொடுத்தால், காட்டிக்கொடுத்தவர் தப்பிப்பார், மற்றவர் மாட்டுவார். இருவருமே காட்டிக்கொடுத்தால், இருவருக்கும் அதிக தண்டனை கிடைக்கும்.
இதை நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம், ஆனால் அவர் நம்மை ஏமாற்றினால், நமக்கு நஷ்டம். பயந்துபோய் நாமும் எல்லோரையும் ஏமாற்றத் தொடங்கினால், ஒட்டுமொத்த சமூகமும் கெட்டுப்போகும். அப்படியானால், நாம் நல்லவராக இருக்க வேண்டுமா? அல்லது கெட்டவராக இருக்க வேண்டுமா?
நீண்ட கால அடிப்படையில் வாழ்க்கையில் ஜெயிக்க, ராபர்ட் ஆக்ஸல்ராட் (Robert Axelrod) நடத்திய கணினி சோதனையில் வென்றது ‘பழிக்குப் பழி’ என்ற உத்திதான். இதன் மூன்று முக்கிய விதிகள்:
யாரைச் சந்தித்தாலும், எந்தத் தொழிலைத் தொடங்கினாலும், முதலில் நம்பிக்கையோடு, நேர்மையாக இருங்கள்.
ஒருவேளை எதிராளி உங்களை ஏமாற்றினால் அல்லது துரோகம் செய்தால், அடுத்த முறை நீங்களும் அவருக்கு அதையே செய்யுங்கள். அவரைச் சும்மா விடாதீர்கள். அப்போதுதான் "இவனை ஏமாற்ற முடியாது" என்ற பயம் அவருக்கு வரும்.
எதிராளி திருந்தி மீண்டும் உங்களுடன் ஒத்துழைக்க வந்தால், நீங்களும் பழைய பகையை மறந்து மீண்டும் அவருடன் ஒத்துழைக்கவேண்டும்.
ஏன் நல்லவர்கள் தோற்கிறார்கள்?
பல நேரங்களில் ரொம்ப நல்லவர்கள் வாழ்க்கையில் தோற்றுப்போகக் காரணம், அவர்கள் திருப்பியடிக்கத் தயங்குவதுதான். யாராவது கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுவது ஆன்மீகத்திற்குச் சரியாக இருக்கலாம், ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கும் பிஸ்னஸுக்கும் அது செட் ஆகாது. எதிராளிக்குத் தண்டனை கொடுக்காதவரை, அவர் தொடர்ந்து உங்களைச் சுரண்டிக்கொண்டே இருப்பார். அதேசமயம், எப்போதும் சந்தேகப்பட்டுக்கொண்டே இருந்தால், யாரும் உங்களுடன் கூட்டு சேர மாட்டார்கள்.
அலுவலகத்தில் ஒரு சக ஊழியர் உங்களுக்கு உதவுகிறார் என்றால், நீங்களும் உதவுங்கள். அவர் உங்கள் முதுகில் குத்தினால், உடனே எதிர்வினையாற்றுங்கள். அவர் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வந்தால், ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த அணுகுமுறைதான் உங்களை ஒரு பலவீனமானவராகவும் காட்டாது, ஒரு கொடூரமானவராகவும் காட்டாது.
'கேம் தியரி' நமக்குக் கற்றுத்தரும் பாடம் எளிமையானது. "ஏமாளியாகவும் இருக்காதே, ஏமாற்றுபவனாகவும் இருக்காதே". நம்பிக்கை வைப்பது நல்லதுதான், ஆனால் அது கண்மூடித்தனமான நம்பிக்கையாக இருக்கக்கூடாது.