நமது எண்ணமானது ஒரு லட்சியத்துடன் தொடர்பு கொள்ளும்போது சாதனைகள் நிகழ்கின்றன. எண்ண ஓட்டங்கள் வாழ்க்கை என்ற கடலில். திசையின்றி மிதந்து கொண்டிருக்கின்றன. வாழ்வில் நோக்கம் இல்லையென்றால் அது நீடிக்காது. வாழ்வில் முக்கிய நோக்கம் இல்லாதபோது சின்னஞ்சிறு அற்பக் கவலைகள் நம்மைக் சூழ்கின்றன. இவை நம்மை தோல்விக்கும் துக்கத்திற்கும் அழைத்துச் செல்கின்றன.
ஒரு மனிதன் தன் இதயத்தில் ஒரு நியாயமான லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு அதை அடைய முயலவேண்டும். அது ஆன்மிக இலட்சியமாகவும் இருக்கலாம் அல்லது உலக சம்பந்தப்பட்ட ஒரு பொருள் பற்றியதாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் மனிதன் தனது எண்ண சக்தியை ஒருமுகப்படுத்த வேண்டும். லட்சியத்தில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மாறாக மேலோட்டமான கற்பனைகளிலும், ஆசைகளிலும் எண்ணங்களை அலைய விடக்கூடாது.
தனது இலட்சியத்தை அடைய ஒருவன் பலமுறை தோற்கலாம். பலகீனத்திலிருந்து அவன் விடுபடும் வரை இத்தகைய தோல்விகள் நிகழும். ஆனால் அவன் தன்னுள் வளர்த்துக் கொண்ட மனஉறுதி அவனது இயல்பான குணமாக மாறி வலிமை தருகிறது. அதுதான் வெற்றியின் உரைகல். உயர் லட்சியத்தில் தயாராகாதவர்கள் தங்கள் கடமைகளை அப்பழுக்கின்றி நேர்மையாக செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். வேலை அற்பமானதாக இருக்கலாம். ஆனால் அதை நேர்மையாக செய்யவேண்டும். இதன் மூலம் எண்ணங்களை ஒன்று திரட்டி ஒரு இலக்கை நோக்கிச் செல்லும் வழியை அறிய முடியும்.
முயற்சியினாலும் பயிற்சியாலும் தன் வலிமையை வளர்த்துக் கொள்ள முடியும் என்று தெரிந்து கொள்ளும்போது ஒரு பலகீனமான ஆத்மா கூட உடனடியாக வலிமை பெறுகிறது.
பலகீனமான எண்ணங்கள் உடைய மனிதன் சரியான எண்ணங்களைத் கொள்வதன் மூலம் தன் சிந்தனை களுக்கு வலிமை ஊட்ட முடியும். நோக்கமின்மையையும், பலவீனத்தையும் தூர எறிந்து விட்டு ஒரு நோக்கத்துடன் சிந்திக்கத் துவங்கும் ஒரு மனிதன் வலிமை படைத்தவர்களின் வரிசையில் சேருகிறான். தோல்வி கண்டால் கூட சாதனைப் பாதையில் அது ஒரு பாடம் என்பதை உணர்கிறான். லட்சியத்தை மனதில் வாங்கிக் கொண்ட பின் அதை சாதிப்பதற்கு நேர்வழியை திட்டமிட வேண்டும். சந்தேகமும் பயமும் மனித முயற்சியைப் பொடி பொடியாக்கிவிடும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையில் இருந்துதான் செய்து முடிப்பேன் என்ற மனஉறுதி துளிர்க்கிறது.
சந்தேகத்தையும் பயத்தையும் வென்றவன் தோல்வியை வென்றவன். அவனது ஒவ்வொரு எண்ணமும் பெருஞ் சக்தியுடன் இணைந்து செயல்படுகிறது. புத்திசாலித் தனத்துடன் சங்கடங்களிலிருந்து மீள்கிறான். அவன் சரியான காலங்களில் தன் லட்சிய விதையை விதைக்கிறான். அவை சரியானபடி பூத்துக் குலுங்கி காய்கனிகளை கொண்டு தருகின்றன. அவை பிஞ்சிலே வெம்பி விழுவதில்லை. இதை உணர்ந்து கொள்ளும் மனிதன் உயர்ந்த வலிமை படைத்தவனாகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறான். தனது மனோ சக்திகளைப் புரிந்துகொண்டு அவற்றை ஆட்டுவிக்கும் சூத்ரதாரியாக ஆகிறான் புத்திசாலியான விஷயம் தெரிந்த மனிதனாக ஆகிறான்.