
மகிழ்ச்சி இதைத் தேடாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். மகிழ்ச்சி அதில் கிடைக்குமா, இதில் கிடைக்குமா எதில் கிடைக்கும் என்ற தேடுதல் எல்லோருக்குமே உண்டு.
சிலர் அதைப் புரிந்துகொண்டு எப்படி என்ன செய்தால் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை வாழ்வியலாகக் கொண்டு வாழ்பவர்கள் என்றைக்குமே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் ஆனால் புரிதல் இல்லாமல் அதில் இருக்குமோ இதில் இருக்குமோ என தேடித் தேடியே சிலர் மகிழ்ச்சியை இழக்கிறார்கள்.
சரி. மகிழ்ச்சி எதில்தான் இருக்கிறது. அதற்கு என்னதான் செய்ய வேண்டும். என்ன செய்தால் மகிழ்ச்சி நமக்கு கிடைக்கும். இப்படி பல கேள்விகள் நம் மனதில் எழலாம். அதற்கெல்லாம் விடை கொடுப்பதுதான் இப்பதிவு.
அடுத்தவருக்கு வலியை ஏற்படுத்துவதுதான் மகிழ்ச்சி என்று குதர்க்கமாக யோசிக்கும்போது நம் வாழ்வின் நோக்கம் சிதைந்து போகும். அது நம் உள்ளே உள்ள எதிரி. எதிரி வெளியில் இருந்தாலாவது அவரை சமாளிக்க வாய்ப்பிருக்கிறது. அவர் உங்களுக்குள் இருந்தே ஆட்டுவிக்க ஆரம்பித்துவிட்டால் உங்களது வாழ்வு அதல பாதாளத்துக்கு இழுத்து செல்லப்படும்.
பிறகு, உங்களது மகிழ்ச்சியை அழிக்க வெளியிலிருந்து இன்னொரு எதிரி எதற்கு? நீங்களே போதும். மாறாக உங்களது மகிழ்ச்சியை வெளிச்சூழல்களுக்குப் பணயம் வைக்காமல், உள்ளே அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டால், உங்கள் திறமை முழுமையாக வெளிவரும். வெற்றிகள் உங்களைத் தேடிவரும். மகிழ்ச்சி தானே வரும்.
ஒரு வெற்றியை எதிர்பார்க்கும்போதே, அது கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும் நிழல் போலத் தொடர்ந்து வரும். எதிர்பார்ப்பு எங்கே இருந்தாலும் அங்கே ஏமாற்றத்துக்கும் இடம் இருக்கும். எங்கே ஏமாற்றம் இருக்கிறதோ, அங்கே எரிச்சல் தானாகவே வேகத்தடையாகக் குறுக்கிடும். காத்திருக்கப் பொறுமை இல்லாமல் கவனம் சிதறும்.
முடிவைப் பற்றிய சிந்தனை இல்லாமல், செய்வதை முழு விருப்பத்துடன் செய்து பாருங்கள். வெற்றியைப் பற்றி எண்ணிக் கொண்டிராமல் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். அப்போது தோல்வி பற்றிய பயம் வராது. பயம் இல்லாத இடத்தில் பதற்றம் இருக்காது. பதற்றம் இல்லாத இடத்தில் கவனம் சிதறாது. கவனம் சிதறாதபோது செயலிலே மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியுடன் செயல்படும்போது முழுத்திறமையும் வெளிப்படும். அப்போது வெற்றி நிச்சயம்! மகிழ்ச்சி தானாகவரும்.