
நாம் பெரும்பாலும் நமது மனதில் என்ன உணர்வு இருக்கிறதோ அதன் மூலம்தான் இந்த உலகத்தையும் பார்க்கிறோம். உதாரணமாக எதைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறோமோ அதைத்தான் பார்க்கிறோம். எதைக் கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அதை மட்டும்தான் கேட்கிறோம்.
ஆனால் வாழ்வில் எப்போதுமே நம்பிக்கை மிக்க ஒருவருக்கு இந்த உலகம் எப்போதுமே ஒரே மாதிரிதான் தோன்றும். அவர் தன்னைப் பற்றிய எண்ணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறார். வாழ்க்கை அவருக்கு வாழ எளிதாக இருக்கிறது. காரணம் அவரது நேர்மறை மனப்பாங்கு.
நாமும் அவர் போன்றே நேர்மையான மனப்பாங்கு நோக்கி மென்மேலும் நகர்வதற்கு முயல்வோம். முதலில் நேர்மறை மனப்பாங்கினால் வரும் நன்மைகளை எண்ணிப் பார்ப்போம் .நமது வாழ்க்கையில் மென்மேலும் நேர்மறை எண்ணங்களை கூட்டுவதற்கு வழிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். துக்கங்களை விரட்டி அடிக்க பல பல வழிகள் இந்த உலகில் உள்ளது. அவற்றுள் தகுந்தவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். யதார்த்தமான பார்வையில் இந்த உலகத்தை பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.
சோதனைகள் நமது பார்வைக்கும் உள்மனமாற்றத்திற்கும் உள்ள சம்பந்தத்தை நிரூபிக்கின்றன. இது குறித்து அறிய சோதனை முயற்சியாக ஒரு கூட்டத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஒருமுறை சந்தோஷமான அனுபவங்கள் தரப்பட்டு அவர்கள் மனதை மகிழ்ச்சி நிலையில் வைக்கப்பட்டு சிலரின் புகைப்படங்களை திரையில் காட்டி பார்க்க வைத்தார்கள். அப்போது அவர்களுக்கு புகைப்படங்களில் தெரிந்தவர்கள் மிகவும் வசீகரமாகவும், விருப்பத்திற்கு உரியவராகவும் தெரிந்தார்கள்.
சற்று நேரம் கழித்து இதே உறுப்பினர்களுக்கு மனநிலை பாதிக்கும்படியாக சில அனுபவங்கள் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து முன்பு காண்பிக்கப்பட்ட அதே படங்கள் மீண்டும் காண்பிக்கப்பட்டன . இப்போது புகைப்படங்களில் தெரிந்தவர்களது தீயகுணங்கள் மட்டுமே அவர்களுக்குத் தெரிந்தது. கெட்டவர்களாகவும் கொடுமையானவர் களாகவும் விமர்சித்தனர். நன்றாக நினைவில் கொள்ளவேண்டும் அவர்கள் பார்த்த (புகைப்படங்கள்) வெளி உலகம் மாறவில்லை. ஆனால் அவர்களின் மனங்கள் மாறுபட்டு இருந்த நிலையில் எல்லாமே மாறுபட்டு தோன்றுகிறது. இப்படித்தான் பலரும் தங்கள் எதிர்மறை எண்ணங்களினால் உலகம் பொல்லாதது என முடிவு கட்டி விடுகிறார்கள்.
மன ஆரோக்கியமானவர்கள் யார் தெரியுமா? ஓரளவு தனது லட்சியங்களை வாழ்க்கையில் அடைந்தவர்கள். தன்னைப் பற்றிய தனது கனவுகளுக்கு ஏற்ப கிட்டத்தட்ட அதே நிலையை வாழ்க்கையில் வந்து அடைந்தவர்கள். தங்களுக்கு திருப்திப்படுத்திக் கொள்ளும் வகையில் தங்களது திறமைகளை உபயோகித்துக் கொள்பவர்கள் . பயம் அல்லது விரோதம் போன்ற எதிர்மறைகள் தங்களை வயப்படுத்தாமல் எந்த ஒரு அனுபவத்திற்கும் தன்னை தயார்படுத்திக் கொண்டு செயல்படுகிறார்கள்.
நண்பர்கள், பொருள்கள், மக்கள், வாழ்க்கை என எங்கும் எவற்றிலும் நேர்மறை மனப்பான்மையை மட்டுமே காண்கிறார்கள் இவர்கள் தங்களுடைய பலம் மற்றும் குறைபாடுகளை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். தங்களது நேர்மறை உணர்வுகளை எந்த அளவுக்கு உபயோகிக்க முடியுமோ அந்த அளவுக்கு உபயோகித்தும் தங்களது குறைபாடுகளை அவ்வளவு முன்னிலைப்படுத்திக் கொள்ளாமலும் செயல் படுகிறார்கள். தங்களது கனவுகளை எப்படி தாங்கள் இருக்க வேண்டும் என்று வகித்துக் கொண்டாரோ அப்படியே கஷ்டப்பட்டு தன்னை உருவாக்கிக் கொண்டவர்கள். வாழ்க்கை வாழ்வதற்கு உறுதுணையாக இருப்பதற்கு உணர்வுகளே காரணம் என்பதை உணர்ந்தவர்கள்.
நாமும் நேர்மறை எண்ணத்துடன் இந்த உலகைக் கண்டு வெற்றி பெறுவோமா?