

பணக்காரர்கள் பிரதிபலிக்கும் வாழ்க்கை முறையை நோக்கிச் செல்வது உண்மையிலேயே சரியானதா? உளவியல் ஈர்ப்பு (psychological pull) அல்லது நடைமுறையில் சந்திக்கும் விஷயங்கள்(practical consequences) என்று இந்த இரண்டையும் புரிந்துக் கொள்வதில்தான் பதில் உள்ளது.
எங்கிருந்து இது தொடங்குகிறது?
ஆடம்பர வாழ்க்கை முறைகளின் மீது ஆசைப்படுவது பெரும்பாலும் ஒவ்வொருவரின் மனதில் உதிக்கும் சமூக ஒப்பீட்டில் இருந்து தான்(social comparison) உருவாகிறது. அதுவும் இன்றைய கார்போரேட்(Corporate) உலகில், மக்கள் இயல்பாகவே ஒருவர் வைத்திருக்கும் பிராண்டட் (Branded) பொருட்கள் அல்லது நாகரீகமான தோற்றங்கள்(Fashionable appearances) மூலம்தான் ஒருவரை எடை போடுகிறார்கள். இது, ‘நாம் வைத்திருக்கும் செல்வம் (wealth மட்டுமே நம் மதிப்பை முன்னிலைப்படுத்துகிறது' என்ற ஒரு பொய்யான அர்த்தத்தை இந்தச் சமூகத்தில் பரப்பியுள்ளது.
இதோடு சமூக ஊடகங்கள் இந்த அழுத்தத்தை இன்னும் ஒருபடி அதிகரிக்கின்றன. அதில் சிலர் தாங்கள் கஷ்டப்பட்டு வாழ்ந்த நிலையையும், இப்போது வாழும் உயர்ரக வாழ்க்கையும் வீடியோவாக போட்டிருப்பார்கள். ‘அப்படிப்பட்ட இந்த அசுர வளர்ச்சி எப்படி வந்தது என்ற உண்மையை அனைவரும் கூறமாட்டார்கள்’. அதில் அவர்கள் பயன்படுத்தும் உயர் ரகப் பொருட்களின் விசேஷங்கள் அல்லது அதோடு சாதாரணப் பொருளையும் ஒப்பிட்டு கூறும்போது, அந்த வீடியோவைப் பார்க்கும் சிலர் ‘தன்னிலை மறந்து பேராசையால் தூண்டப்படலாம்’.
இந்த வாழ்க்கை முறை எப்படி இருக்கும்?
இருப்பினும் இந்தச் செயற்கை ஆடம்பர வாழ்க்கை பல செலவுகளை அதிகரிக்கும். காரணம் நிதி நெருக்கடி ஒருவருக்குப் பல விளைவுகளை ஏற்படுத்தும். ஒருவரின் திறனுக்கு அப்பால் செலவு செய்வது கடன், சேமிப்பு குறைதல், நீண்டகால பாதுகாப்பின்மைக்கு (long term insecurity) வழிவகுக்கும்.
பணம் ஒரு பக்கம் செலவாகிக் கொண்டே இருக்க, அதை நினைத்து பலர் மன அமைதியை இழக்க நேரிடும். ஏனெனில் பிறரின் வாழ்க்கை மீது ஒருவர் மேற்கொள்ளும் நிலையான ஒப்பீடு (constant comparison with others) அவர்களுக்குள் ஒவ்வொரு நாளும் பதற்றத்தை(anxiety) வளர்க்கிறது. இது அடிப்படையான கல்வி, சுகாதாரம் அல்லது குடும்ப விஷயங்களுக்குக்கூடத் தேவைப்படும் அர்த்தமுள்ள முதலீடுகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பக்கூடும். ஆனால், இறுதியில் இவை மூணும் தான் நமக்கு பிடித்த நிறைவான வாழ்க்கையை அளிக்கின்றன.
எப்படி மீண்டு வரலாம்?
ஆடம்பரத்தின் மாயையிலிருந்து தப்பிப்பது நம்மை உண்மையிலேயே வளப்படுத்தும். அது நாம் கடந்து வந்த அனுபவங்களை (Past experiences) பற்றி யோசிப்பதில் இருந்து தொடங்குகிறது. பின் குடும்பம், இயற்கை அல்லது தனிப்பட்ட வளர்ச்சி போன்ற எளிய மகிழ்ச்சிகளை உணரும்போது, மகிழ்ச்சி வெறும் விலையுயர்ந்த பிராண்டுகளை மட்டும் சார்ந்தது அல்ல என்பதை நாம் உணர்கிறோம்.
நம்மிடம் உள்ள நன்றியுணர்வை (gratitude) வளர்த்துக்கொள்வது, மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற நிலையான எண்ணத்தைக் (constant comparison) கைவிட உதவுகிறது. பின் படிப்படியாக நம் வருமானத்திற்குள் உண்மையாக வாழ்வதன் மூலம், நாம் மன அமைதியையும், நிதி அழுத்தத்திலிருந்து விடுபடுவதையும் உணர்வோம். இறுதியில் ‘செயற்கை மகிழ்ச்சியான’ செல்வத்தின் பிம்பத்தை நோக்கி ஓடுவதற்குப் பதிலாக, ‘வாழும் நம் உண்மையான வாழ்க்கையே போதுமானது’ என்று ஏற்றுக் கொள்ளும்போது ‘நிஜ மகிழ்ச்சி’ இயல்பாகவே நம்முள் பெருக்கெடுக்கிறது.