ஏன் நாம் ஒவ்வொரு விஷயத்தையும் கடினமாகவே நினைத்துக்கொள்கிறோம். பேச வேண்டாம் என்ற ஈகோ கடினம், ஆசைப்படும் விஷயத்தைக் கேட்கக்கூடாது என்பது கடினம், காதலிக்கக்கூடாது என்று எண்ணுவதும் கடினம். வாழ்க்கை ஒரு ஓடம் என்றால் காற்று அடிக்கும் திசையில் தானே பயணிக்க முடியும். எவ்வளவுத்தான் திசைத் திருப்பப் பார்த்தாலும் கட்டுக்கடங்காதக் காற்றினால் நாம் எதுவுமே செய்ய முடியாது.
'போகிறப் போக்கில் போவோம்' என்று எண்ணுபவர்களின் வாழ்க்கையில் அனைத்தும் அமைதியாகவே செல்லும். அதேபோல் திட்டம் போட்டு கடினத்துடன் வாழ்க்கையைத் திசைத்திருப்ப நினைபவர்கள் அதிகப்படியான கஷ்டங்களையே அனுபவிப்பார்கள். உண்மையில் உங்களுடைய திட்டத்தைவிட கடவுளின் திட்டம் மிகவும் அற்புதமானதே. ஆகையால் போகிறப் போக்கில் சென்று உங்கள் வாழ்க்கையை எளிதாக்கிக்கொள்ளுங்கள்.
எளிய உதாரணங்கள்:
யாரையாவது மிஸ் செய்கிறீர்களா? அப்போது உடனே அவருக்குப் போன் செய்துப் பேசுங்கள். வீராப்பாக இருப்பது கெத்துதான், ஆனால் மனம் அமைதியாக இருப்பது அவசியம்.
யாரையாவது சந்திக்க வேண்டுமென்றுத் தோன்றுகிறதா? உடனே அவரை அழைத்துவிடுங்கள். பார்க்க வேண்டுமென்று முடிவெடுத்தப் பிறகு தூரம் வெறும் சொல்லே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒருவருக்குப் புரிய வைக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? விளக்குங்கள். ஏனெனில் அனைவருக்கும் விளக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அவர் உங்களைத் தவறாக நினைத்துவிடக் கூடாது என்றால் இதனைச் செய்யுங்கள்.
ஒருவரைக் கேள்வி கேட்க வேண்டுமென்று நினைக்கிறீர்களா? மனதில் ஒரு கேள்வி கூட மிச்சம் வைக்காமல் கேட்டுவிடுங்கள். உங்கள் சந்தேகத்தைத் தீர்ப்பவர் யாராயினும் நீங்கள் கேட்கலாம்.
ஏதாவது பிடிக்கவில்லையா? அதனை மாற்றிவிடுங்கள். எந்தப் பொருளை உங்களுக்குப் பார்க்கப் பிடிக்கவில்லையோ அதனை வேறு மாதிரி மாற்றிவிடுங்கள். அல்லது அதனைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு வாங்குங்கள். சென்டிமென்ட் பொருள் என்றெல்லாம் பார்க்காதீர்கள்.
ஏதாவது வேண்டுமா? அதனை அடைய உழையுங்கள். எவ்வளவு பெரிய விஷயமென்றாலும் பொருளென்றாலும் கடின உழைப்புக் கண்டிப்பாக உங்களுக்கு அதனை வாங்கித்தரும்.
யாரையாவது காதலிக்கிறீர்களா? நேரம் பார்த்து சொல்லிவிடுங்கள். அவர்களுக்கு ஏற்ற நேரம் பார்த்தல்ல உங்களுக்கு ஏற்ற நேரம் பார்த்து.
உங்களுக்கு ஒன்றுப் பிடித்தது என்றால், அதனை எப்போதும் உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். உடைந்தாலும் சரி அதனைப் பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்.
எந்த ஒரு காரணத்தினாலும் உங்களுடைய வாழ்க்கையை கடினமாக்கிக் கொள்ளாதீர்கள்.