மனிதனை மனிதனாக்கும் இரு கண்கள்!

விருந்தோம்பல்/வாசிப்பு இவை இரண்டும் இன்று காணாமல் போகும் நிலையில் உள்ளன என்பதை எடுத்துச் சொல்வோம்.
hospitality and reading habit
hospitality and reading habit
Published on

விருந்தோம்பல் – மனிதனை மனிதனாக்கும் அறம்

ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் வீடுகளில் கதவைத் தட்ட வேண்டியதில்லை.

வாசலில் நின்றாலே முகத்தில் புன்னகையுடன்

“வாங்க… வாங்க…” என்ற அழைப்பு ஒலித்தது.

அது வெறும் வார்த்தையல்ல — அது தமிழரின் பண்பாடு.

விருந்தோம்பல் என்பது உணவு பரிமாறுதல் மட்டும் அல்ல.

அது மனத்தைப் பகிர்தல்.

ஒரு தட்டு சோறு, ஒரு சொட்டு ரசம்,

அதற்கும் மேலாக ஒரு அன்பான பார்வை...

அதுவே விருந்தினரின் பசியை முழுமையாக தீர்த்தது.

இன்றைய வேகமான வாழ்க்கையில்

“நேரமில்லை”, “வேலை அதிகம்” என்ற காரணங்கள்

விருந்தோம்பலை மெதுவாக வாசலுக்கு வெளியே நிறுத்திவிட்டன.

ஆனால் நினைவில் கொள்ளுங்கள்...

திருவள்ளுவர் உயிரைக் காட்டிலும் உயர்வாகக் கூறிய அறம் இது ஒன்றே.

விருந்தினரை வரவேற்கும் அந்த ஒரு நிமிடம்

நம்முடைய மனதை விரிவாக்குகிறது.

சுயநலத்திலிருந்து சமூகத்துக்கான பயணம்

அங்கேதான் தொடங்குகிறது.

இதையும் படியுங்கள்:
அன்றும் இன்றும் விருந்தோம்பல்: தமிழர் பண்பாட்டின் பரிணாமம்!
hospitality and reading habit

விருந்தோம்பல் என்பதை party என அர்த்தம் கொள்கின்றனர் இந்த காலத்து இளைஞர்கள்.

ஆனால் வீட்டிற்கு வருகின்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாராயிருப்பினும் அன்புடன் வரவேற்று தாகம் தீர தண்ணீர் அல்லது மோர் கொடுத்து உபசரிப்பது தான் தமிழரின் தலையாய பண்பாடு.

இன்று அது காணாமல் போகும் நிலையில் உள்ளது என்பதை எடுத்துச் சொல்வோம்.

இன்றே ஒரு மாற்றம் செய்வோம்.

வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை

அன்புடன் அமர வைத்து,

புன்னகையுடன் பேசி. நலம் விசாரித்து உறவுகளை மேம்படுத்துவோம்.

அது அவருக்கு மட்டுமல்ல —

நமக்கே ஒரு ஊக்கமாக மாறும். நம் எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு பலமாகவும், பாலமாகவும் இருக்கும்.

‘விருந்தோம்பல்’ என்பது பழக்கம் அல்ல.

அது ஒரு மனிதனை மனிதனாக்கும் அறம்.

‘வாசிப்பு’ – வாழ்க்கையை உயர்த்தும் மந்திரம்

இன்று நம்முள் பலருக்கும் படிக்கும் ஆர்வம் இருப்பினும், புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற உண்மையான உந்துதல் குறைந்து வருகிறது.

“தேவைப்படும் போது கைப்பேசியில் படித்தால் போதும்” என்ற மனநிலைக்கு நாம் பழகிவிட்டோம்.

கல்வி என்பது பள்ளி, கல்லூரி புத்தகங்களுக்குள் மட்டுமே அடங்கிய ஒன்றல்ல. பல்வேறு புத்தகங்களும், நாளிதழ்களில் வரும் செய்திகள் கூட ஒரு விதமான வாழ்க்கைக் கல்வியே.

ஒருவர் எவ்வளவு நேரம் வாசிப்பில் தன் மனதை செலுத்துகிறாரோ, அந்த அளவிற்கு அவரின் மனச்சிந்தனை விரிவடைகிறது.

அதோடு, வாசிப்பு மனிதனின் மனதை அமைதியடையச் செய்து, தெளிவான சிந்தனையை உருவாக்குகிறது.

குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே வாசிப்பைப் பழக்கமாக்க வேண்டும்.

அதற்காக, அவர்களின் பிறந்த நாள் போன்ற சந்தோஷமான தருணங்களில், அவரவர் வயதுக்கு ஏற்ற கதைப் புத்தகங்களை பரிசாக அளிப்பது மிகவும் சிறந்த வழியாகும்.

மேலும், தினமும் காலை அல்லது மாலை வேளையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அன்றைய நாளிதழ் செய்திகளை வாசிக்கச் செய்ய வேண்டும்.

அதிலிருந்து சிறுவர் சம்பந்தமான சில வினாக்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு விடை காணச் செய்வதும் அவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும். இவ்வாறு தொடர்ந்து செய்யப்படும்போது, குழந்தைகளுக்குள் வாசிக்கும் பழக்கமும் ஆர்வமும் இயல்பாகவே வளரத் தொடங்கும்.

சிறு வயதிலேயே வாசிக்கும் பழக்கம் உள்ள மாணவர்கள், கல்வியில் மட்டுமல்லாது பிற கலைகளையும் ஆர்வத்துடன் கற்றுத் தெளிகிறார்கள். இதனால் அவர்களுக்குள் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் வலுப்பெறுகிறது.

எனவே பெற்றோர்களே,

குழந்தைகள் பள்ளி முடிந்து வந்தவுடன் டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ் என்று ஓய்வில்லாமல் அனுப்பும் போது, அவர்களுக்கு நாளிதழ்களும் புத்தகங்களும் வாசிக்க தனியான நேரம் ஒதுக்கிக் கொடுங்கள்.

இதையும் படியுங்கள்:
புத்தக வாசிப்பு பற்றிய 10 சுவாரஸ்யமான உண்மைகள்!
hospitality and reading habit

வாசிப்பை நேசிப்போம்…

வாழ்வில் வெற்றி பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com