

நம்மை யாருமே புரிந்துகொள்ளவில்லை என்ற ஆதங்கம் நிறைய பேருக்கு உண்டு. அதனால் நம்மை புரிந்துகொள்ள யாரும் இல்லாத பொழுது நாம் ஏன் மற்றவர்களை புரிந்துகொள்ள வேண்டும் என்று விரக்தியில் எண்ணுவார்கள். நாம் ஒருவரை புரிந்து கொள்ள முயற்சிப்பது அவர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்ளத் தான். அதேபோல் எதிரில் இருப்பவர்களுக்கும் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள்.
நம்மை மற்றவர்கள் அவர்களின் வழியில் புரிந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அந்த புரிதல் நாம் எதிர்பார்த்ததுபோல் இல்லையென்றால் மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவோம். புரிதல் இன்றி மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது என்பது இயலாத காரியம். நாம் எப்படி மற்றவர்களை புரிந்து கொள்கிறோமோ அது போல்தான் மற்றவர்களும் நம்மைப் புரிந்து கொள்வார்கள்.
அனைவரும் நம்மை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நம்முடைய கருத்துக்களை உரக்க முன் வைக்க முனைந்தால் அதில் சுயநலம் மட்டுமே வெளிப்படும். நம்முடைய கருத்துக்கள், வாதங்கள், செய்யும் செயல்கள் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவர்கள் மனதில் ஒரு பாதிப்பை உண்டு பண்ணுதலே போதுமானது. அனைவரும் நம்மை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எண்ணக்கூடாது.
அன்பு, பாசம், காதல், விசுவாசம் என்று பல வழிகளில் பேசினாலும் அடிப்படையில் மனித உறவுகள் அனைத்துமே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையையும், ஆதங்கத்தையும் கொண்டுள்ளதை மறுப்பதற்கில்லை. நம்மை யாருமே புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவதைவிட நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொண்டு நம்மிடம் உள்ள குறைகளை நீக்கிக் கொள்ள முயற்சிப்பது சிறந்த பலனைத் தரும். அத்துடன் நம்மை ஏன் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்பதையும் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நம் குணங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் கூட நம்மை விரும்பியவர்கள் சற்று தள்ளி இருப்பார்கள். நம்மை ஒருவர் புரிந்து கொள்வதற்கு ஒரு காரணம் இருப்பது போல் நம்மை புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கும் ஏதேனும் காரணம் இருக்கலாம் அல்லவா? எனவே நம்மை யாருமே புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் தேவையற்றது.
நம்மை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு ஒருமுறை நம்மை புரிய வைக்க முயற்சி செய்யலாம். ஆனால் புரிந்து கொள்ள மறுப்பவர்களை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. எனவே நம்மை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பதை நிறுத்துவதுதான் நம் மனதுக்கு நிம்மதி தரும்.
மற்றொரு கோணத்தில் இதை அணுகினால் இன்னும் நன்கு புரிந்து கொள்ளலாம். மற்றவர்களை புரிந்து கொள்வதும் புரிந்து கொள்ளாததும் எப்படி நம் விருப்பமோ அதே போல்தான் மற்றவர்களின் விருப்பமும்.
அதிக எதிர்பார்ப்புகள் இன்றி வாழப்பழகுவதுதான் வாழ்வில் நிம்மதியை கொடுக்கும். நமக்கு பிடித்தவர்களை முழுமையாக ரசிக்க கற்றுக் கொள்வோம். அவர்களை அவர்களின் குறை நிறைகளுடன் ஏற்றுக் கொள்வோம். அத்துடன் நம்மைப் பற்றிய புரிதல் நமக்கு முதலில் இருக்கவேண்டும். மற்றவர்களை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கும் பொழுது நம்மிடம் உள்ள பிளஸ் மைனஸ் எண்ணங்களை நாம் திருத்திக் கொள்ளவோ மாற்றிக் கொள்ளவோ முடியும்.