மனிதன் தனது அறிவு மற்றும் உணர்ச்சியின் மூலம்தான் செயல்படுகிறான் என்றாலும் அவனைச் சுற்றி இருப்பவர்கள் கூறும் வார்த்தைகள் பல சமயங்களில் அவன் மனதை அசைத்துவிடுகின்றன. தன்னம்பிக்கை மிகுந்த மனிதர்களை கூட பிறருடைய அவநம்பிக்கை வார்த்தைகள் அசைத்துவிடும். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. எதிராளியை பேச விடுங்கள்:
நீங்கள் புதிதாக ஒரு தொழில் தொடங்கவோ அல்லது புதியதாக ஏதாவது ஒரு செயலை செய்யவோ நினைத்திருக்கிறீர்கள். சிலர் தேடி வந்து அறிவுரையும் ஆலோசனையும் சொல்வார்கள். உங்கள் எதிராளி பேசும் போது பொறுமையாக கவனமாக கேளுங்கள். அவர்கள் சொல்ல வருவதை முழுமையாக சொல்லட்டும். இடையில் எந்த குறுக்கீடும் வேண்டாம்.
2. அசைப் போட்டுப் பார்த்தல்
அவர் பேசி முடித்ததும் உடனே அவருக்கு எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக இருங்கள். அவர் கூறிய வார்த்தைகளை ஆலோசனைகளை மனதிற்குள் ஓட விட்டு அசை போட்டுப் பாருங்கள். அதில் ஏதாவது நன்மை இருக்கிறதா என்று தேடுங்கள். அவர் சொன்ன 10 பாயிண்டுகளில் ஒன்றிரண்டு நல்லதாக இருந்தால் அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மீதியைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
3. பகுத்தறிதல்
உண்மையான அக்கறையோடு ஆலோசனை சொல்கிறார்களா என்பதை அவர்கள் பேச்சின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் அவர்களது கண் அசைவு, பேசும் தொனி உடல் மொழி இவையெல்லாம் நமக்கு அவர்களது உள்ளக் கிடக்கை உணர்த்தி விடும். ''இவரெல்லாம் புதுசா தொழில் ஆரம்பித்து என்னத்த சாதித்து விடப் போகிறார்? என்கிற எண்ணத்தோடு கண்களில் கேலி கிண்டல் வலிய வழிய பேசுபவரை நன்றாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். சிலர் விபரீதமான ஐடியாக்களை அள்ளி வீசுவார்கள். அவை நடைமுறைக்கு ஒத்துவராமல் இருக்கும். ஆலோசனை சொல்பவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று பகுத்தறிவது மிகவும் முக்கியம்.
4. புன்னகை புரியுங்கள்;
சிலர் முகத்துக்கு நேராகவே நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பற்றி அவநம்பிக்கையுடன் பேசக் கூடும். அப்போது அவர்களுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் ஒரு புன்னகையை மட்டும் பதிலாக கொடுங்கள். ஒன்றும் புரியாமல் குழம்பிப் போவார் எதிராளி. ஏனென்றால் அவர் எதிர்பார்த்தது நீங்கள் மனம் விட்டு புலம்ப வேண்டும் அல்லது அஞ்ச வேண்டும் என்பது தான். தன்னுடைய அவநம்பிக்கை பேச்சு உங்களை அசைக்கவில்லை என்பது அவரது முயற்சிக்கு கிடைத்த தோல்வி. தன்னுடைய எண்ணம் ஈடேறவில்லை என்று தெரிந்தால் அவர் அத்துடன் தனது முயற்சியை கைவிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுவார்.
5. வெற்றி வந்து சேரும்;
பொதுவாக இந்த உலகம் சாதித்தவனைத்தான் கொண்டாடும். சாதிக்க முயற்சி செய்பவனை தைரியமும் தன்னம்பிக்கையும் தந்து ஊக்கப்படுத்தும் மனிதர்கள் மிகக் குறைவு. எனவே வெற்றி பெற நினைப்பவர்கள் தன் மீது அதீத நம்பிக்கையை வைத்து செயலில் இறங்க வேண்டும். பிறர் பேசும் பொறாமை கலந்த விமர்சனங்களை புறந்தள்ள வேண்டும். அதே சமயம் அதில் உள்ள உண்மைத்தன்மையை ஆராய்ந்து தன்னுடைய செயல்பாடுகளில் ஏதேனும் குறை இருந்தால் அதை திருத்திக் கொண்டு தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றி தன்னால் உங்களை வந்து சேரும். உங்கள் தன்னம்பிக்கையைத் தகர்க்க நினைத்தவர்கள் எல்லாம் வாயைடைத்துப் போய்விடுவார்கள்.