

நிறைகள், குறைகள் இரண்டும் ஒவ்வொரு நபரிடமும் குடியிருக்கும் அம்சங்கள் ஆகும். சிலருக்கு நிறைகள் சற்று அதிகமாகவும், குறைகள் சற்று குறைவாகவும் இருக்கும்.
இதற்கு எதிராகவும் சிலரிடம் இருக்கும் வாய்ப்புக்களும் உண்டு.
ஆனால், பொதுவான ஒன்று. நிறைகளோ அல்லது குறைகளோ எப்பொழுதும் ஒரே மாதிரி நிரந்தரமாக (permanent) இருக்கவும் முடியாது. சூழ்நிலை, வாழ்க்கை பயணத்தின் ஏற்ற, தாழ்வுகளுக்கு ஏற்ப மாறுபடும்.
நிறைகளை அதிகரித்துக் கொள்ளவும், குறைகளை குறைத்துக் கொள்ளவும் முடியும்.
அது ஒவ்வொரு குறிப்பிட்ட நபரின் கைகளில், எண்ணங்களில், செயல்பாடுகளில், இடைவிடா தொடர் முயற்சிகளில், கடின உழைப்பு, இலக்கை அடைய வேண்டும் என்ற கூர்ந்து கவனிக்கும் தன்மை அல்லது மையப்படுத்தல் போன்ற செயல்பாடுகள் கை கொடுத்து உதவும். அவற்றை புரிந்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப உபயோகித்தல் வேண்டும்.
இவற்றுடன் மிக முக்கியமானது 'என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை'.
எல்லா தருணங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் ஒரு எடுத்துக்காட்டு உள்ளோட்டமாகச் செயல்பட வேண்டும்.
அடி நீரோட்டம் (serve as an under current) அல்லது உள்ளுணர்ச்சி போன்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.
இத்தகையை மறைமுகமானஓட்டம் / தாக்கம் நாளடைவில் குறிப்பிட்ட தனி நபருக்கு தன்னால் கட்டாயம் முடியும் என்ற அழுத்தமான நம்பிக்கையை உண்டு செய்து ஆழ்மனதில் குடியேறி செய்ய வேண்டிய பணியில் தடங்கல் இல்லாமல் சிந்தனைகள் சிதறாமல் செவ்வனே செயல்பட வழிவகுக்கும்.
இந்த மேடை உறுதியானதும், தனி நபர் அவருடைய நிறைகள், குறைகள் குறித்து விவரங்கள் பற்றி குறிப்பு எடுத்து லிஸ்ட் தயார் செய்து கொண்டு மேலும் செயல்பட வேண்டும்.
அந்த நபர் பிறரின் உதவியை நாடுவது உசிதம். நபரின் நிறை, குறைகள் பற்றிய லிஸ்ட் தயாரிக்க குடும்ப உறுப்பினர்கள் அல்லது நபரின் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் உதவியை நாடுவது உதவும்.
அப்படிப்பட்டவர்களின் கருத்துக்கள் பெரும்பாலும், வலுப்படுத்திக் கொள்ளவும், திருத்தி கொண்டு மேம்படுத்திக் கொள்ளவும் உறுதுணையாக இருக்கும்.
இத்தகைய பயிற்சி நாளடைவில் பழக்கம் ஆகி பலன்களை கொடுக்க துவங்கும்.
இப்படியாக தன்னம்பிக்கை அதன் பணியை செய்யும் பொழுது விரைவில் முன்னேறி மேலும் உயரத்திற்கு செல்ல (success) வழி காட்டும்.
முயற்சி, பயிற்சி இரண்டும் நிறைகளை மேலும் சிறப்பாக்கிக் கொள்ளவும், குறைகளை சரி செய்துகொள்ளவும், களை எடுக்கவும் கட்டாயம் வழி வகுக்கும்.