இக்கட்டான சூழ்நிலையில் சிந்தித்து சிந்தித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் - வசந்த் அன் கோ வசந்தகுமார் - வெற்றி நிச்சயம் என்ற நூலில்.
இக்கட்டான சூழ்நிலை வரும்போது, அதனைக் கண்டு சோர்ந்து விடாமல், அதனைப் படிப்படியாக அணுகி வெற்றி காணமுடியும்.
ஒரு கதையைப் பார்ப்போம்...
ஒரு செல்வந்தர் பெரிய பண நெருக்கடியில் இருந்தார். அவர் ஒரு ஞானியை சந்திக்க மாலை நேரத்தில் வந்தார். அந்த ஞானி, பணநெருக்கடியிலிருந்து செல்வந்தர் வெளி வருவதற்கு சில ஆலோசனைகள் சொன்னார்.
அந்தச் செல்வந்தர் உடனே, 'இவை மிகவும் எளிமையாக உள்ளன. இவை எனது பெரிய பண நெருக்கடியை சமாளிக்க உதவுமா ?' என்று கேட்டார்.
'இப்போது, இருட்டி விட்டது. எப்படி ஊருக்குப் போய் சேருவீர்கள்?' என்றார் ஞானி.
'காரில் ஹெட்லைட் போட்டு, ஓட்டிச் சென்று விடுவேன்' என்றார் செல்வந்தர்
'ஊர் இங்கிருந்து பல கிலோமீட்டர்கள் ஆயிற்றே. ஆனால், ஹெட்லைட் 150 முதல் 200 அடி வரைக்கும் தானே காட்ட முடியும்?' என்றார் ஞானி
'ஓட்ட ஓட்ட, அடுத்த 150 அடி முதல் 200 அடி தெரியுமென்பதால், பல கிலோமீட்டர்கள் என்னால் ஓட்டிச் செல்ல முடியும்.' என்றார் செல்வந்தர்.
'அதனைப் போலவே, இந்த சிறிய யோசனைகளை முதலில் தொடங்குங்கள். இதனைச் செய்யும்போது, அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். அப்போது, புதிய யோசனைகளைச் செய்து, படிப்படியாக பண நெருக்கடியிலிருந்து வெளிவருவீர்கள்' என்றார் ஞானி.
செல்வந்தரும் ஞானிக்கு நன்றி கூறிவிட்டு, தனது வீட்டிற்கு திரும்ப எத்தனித்தார்.
எனவே, எந்த ஒரு பிரச்சனையையும் படிப்படியாக சிந்தித்து, அதனைப் பிரித்து, அதற்குத் தீர்வு காண முடியும்.
உதாரணமாக, ஒரு பெரிய பிரச்சனையை, சிறிய சிறிய பிரச்சனைகளாக மாற்றிச் செயலாக்குவதன் மூலம், நம்மால் எளிதில் கையாள முடியும். உதாரணமாக, ஒரு பெரிய கடன் நெருக்கடி என்றால், கடன்களைப் பட்டியலிட்டு, குறைந்த கடனை முதலில் அடைத்து, மற்றக் கடன்களுக்குத் தவணை மட்டும் செலுத்தலாம். குறைந்த கடனை அடைத்து முடித்த பின்னர், அடுத்த குறைந்த கடனை அடைக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு கடன்களாக அடைக்க, முழுவதுமாக கடன் பிரச்சனையிலிருந்து மீள முடியும்.
பிரச்சனைகளைக் கண்டுத் துவண்டு விடாமல், துணிவோடு நேர்கொள்ள வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் சிந்தித்துச் சிந்தித்துச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.