வாழ்க்கையில் நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சூழ்நிலையில் NO என்று சொல்ல வேண்டி இருக்கும். நண்பர்கள், குடும்பத்தினர், சக ஊழியர்கள் அல்லது முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் கோரிக்கைகளுக்கு இல்லை என்று சொல்வது சங்கடமாக இருக்கலாம். பிறருக்கு இல்லை என்று சொல்லும்போது நாம் மற்றவர்களை ஏமாற்றுகிறோம் என்று தோன்றலாம்.
ஆனால், உண்மையில் ‘இல்லை’ என்று சொல்லுவது ஒரு முக்கியமான திறன். நமது நேரம், ஆற்றல் மற்றும் வரம்புகளை நிர்வகிக்க ‘இல்லை’ என்று சொல்வது அவசியம். ‘இல்லை’ என்று சொல்வது நமது சுயமரியாதையை பாதுகாக்க உதவும். இந்த பதிவில் பிறர் மனம் புண்படாமல் ‘NO’ சொல்வதற்கான சில வழிமுறைகளைப் பார்ப்போம்.
உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் தைரியமாக ‘இல்லை’ என்று சொல்ல தயங்காதீர்கள். வெளிப்படையாக இருங்கள். இப்போது ஆம் என்று சொல்லிவிட்டு பின்னர் மறுப்பது மோசமானது.
நீங்கள் இல்லை என்று சொல்வதற்கான காரணத்தை விளக்குங்கள். அது மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ள உதவும்.
இல்லை என்று சொல்லும்போது மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களை மோசமாக விமர்சிக்கவோ, அவமதிக்கவோ வேண்டாம். குறிப்பாக, கடந்த கால நிகழ்வுகளை எடுத்துக்காட்டி மோசமாக நடந்து கொள்ளாதீர்கள்.
நீங்கள் இல்லை என்று சொன்ன பிறகு உங்கள் முடிவில் உறுதியாக இருங்கள். ஒருபோதும் அந்த முடிவை மாற்றாதீர்கள்.
நீங்கள் ஒரு விஷயத்தை மறுக்கும்போது, “அதை செய்வதற்கு எனக்கு நேரம் இல்லை” என்று சொல்லுங்கள். “எனக்கு அதை செய்ய விருப்பமில்லை” என்று சொல்ல வேண்டாம். “இப்போது என்னால் செய்ய முடியவில்லை என்றாலும் பின்னர் உங்களுக்கு உதவ முயல்கிறேன்” என்று நேர்முறையாக சொல்லுங்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நகைச்சுவை உணர்வுடன் இல்லை என்று சொல்லலாம்.
இப்படி சில நுணுக்கங்களைப் பயன்படுத்தி நீங்கள் முற்றிலும் அமைதியான முறையில் சில விஷயங்களுக்கு NO சொல்லி நிராகரிக்க முடியும். இல்லை என சொல்வதால் பிறர் உங்களை தவறாக நினைப்பார்கள் என்ற குற்ற உணர்வு வேண்டாம். இது உங்களது ஆற்றலை சேமித்து, உங்களுக்கான விஷயங்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட உதவும்.
எனவே எல்லா விஷயங்களுக்கும் சரி என தலையாட்டி பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல், முடியாது என்று கூறி உங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது.