ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பல விதமான நிலைகளை கடக்க வேண்டும். தெளிவான இலக்கை உருவாக்கி உழைக்க வேண்டும். வெற்றி பெற தடையாக இருக்கும் விஷயங்கள் தயக்கம், பயம், தள்ளிப்போடுதல், அவசரமான முடிவெடுத்தல், தோல்வியில் துவளுதல், சட்டென்று நிதானம் இழந்து கோபப்படுதல் போன்றவை. இந்த எதிர்மறை குணங்களை மாற்றி அமைக்க ஐந்து நொடிகள் விதியை பயன்படுத்தி வெற்றி காணலாம்.
5 வினாடி விதியை எப்படி பயன்படுத்துவது?
ஒரு காரியத்தை செய்யத் தொடங்கும் முன் தயக்கமும் பயமும் ஏற்பட்டால் ஐந்து முதல் ஒன்று வரை பின்னோக்கி எண்ண வேண்டும். அப்போது உங்கள் உடலை தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கவுண்ட் டவுன் முறை பயம் அல்லது தயக்கத்தை போக்கி மனதிற்கும் மூளைக்கும் உற்சாகத்தை தருகிறது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகிறது. இதை சத்தமாகவோ அல்லது மனதிற்குள்ளாகவோ சொல்ல வேண்டும். ஆனால் உறுதியான குரலில் சொல்வது அவசியம். ஒன்று என்று சொல்லி முடிக்கும் போது அது உங்களை செயல்பட தூண்டும். தினமும் இதை செய்து வந்தால் அது ஒரு பழக்கமாகவே மாறிவிடும்.
தினமும் அதிகாலையில் எழுந்து பணியை தொடங்க வேண்டும் அல்லது உடற்பயிற்சி செய்யலாம் என்று நினைத்து விட்டு தூங்கச் செல்வோர் பலர். ஆனால் அதிகாலையில் கண்விழித்ததும் மீண்டும் தூங்கலாம் என்றுதான் தோன்றும். அந்த எண்ணத்தை விரட்டி அடிக்க ஐந்திலிருந்து ஒன்று வரை கவுண்டவுன் தொடங்க வேண்டும். ஒன்று என்று சொல்லி முடித்ததும் மூளை உடனடியாக படுக்கையில் இருந்து எழுந்து வொர்க் அவுட் செய் என்று கட்டளை இடுவது போல இருக்கும்.
சட்டென்று கோபம் வந்தால் உடனே எதிரில் இருப்பவர் மீது வார்த்தைகளை துப்பாமல் 5 லிருந்து ஒன்று வரை பின்னோக்கி எண்ணவும். இது கோபத்தை மாற்றி நிதானத்தை தரும். இந்த முறை வாழ்க்கையில் பல இழப்புகளை தடுத்து நல்ல விஷயங்களை கொண்டு வரும்.
ஒரு பெரிய மனிதரிடம் சென்று உதவி கேட்க எண்ணி இருக்கும் போது, அவர் இந்த உதவியை செய்வாரா மாட்டாரா என்கிற தயக்கம் எழும் அப்போது இந்த கவுண்ட் டவுன் முறையை பயன்படுத்தும்போது உடனடியாக உள்ளத்தில் ஒரு தெளிவு கிடைக்கும், அவரிடம் பேசும் தைரியம் உண்டாகும்.
இதுபோலவே வேலைகளை செய்யாமல் தள்ளிப் போடும் குணம், பாதியிலேயே விட்டு விடுவது, சோம்பேறித்தனம் போன்ற எதிர்மறை குணங்களை சமாளிக்க இந்த ஐந்து வினாடி விதியை பயன்படுத்தி வெற்றி காணலாம்.
இந்த விதியை பயன்படுத்தும் போது நீங்கள் செய்யும் செயலை ஆதரிக்கும் வகையில் சூழலை மாற்றியமைப்பது முக்கியம். அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தால் படுக்கைக்கு அருகிலேயே உடற்பயிற்சி ஆடைகளை வைக்க வேண்டும். காலையில் எழுந்து புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைத்தால், முந்தைய நாள் இரவே அதற்கான புத்தகத்தை எடுத்து படுக்கைக்கு அருகில் தயாராக வைக்கவும்.
இந்த 5 வினாடி விதியை பயன்படுத்தினால் சிறப்பாக செயலாற்றி வெற்றி அடைவது உறுதி.