பொறுமை என்பது நமக்கு துன்பம் ஏற்படும் பொழுதும் உணர்ச்சி வசப்படாமல், கோபப்படாமல் இருக்கும் மனநிலைதான். மற்றவர்கள் நம்மை இகழும் போதும், பிரச்சனைகள் தொடரும் போதும், சில அசாதாரணமான சூழ்நிலைகளிலும் அமைதி காக்கும் குணம்தான் பொறுமை.
இந்த குணம் மட்டும் இருந்துவிட்டால் வாழ்வில் பல்வேறு நிலைகளை அடையலாம். பொறுமை என்பது ஒரு திறமை. இதனை மற்ற திறமைகளைப் போலவே பயிற்சி மூலம் எளிதில் கற்றுக்கொள்ளலாம்.
வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. எப்பொழுதும் நல்லதே நடக்கும் என்று எதிர்பார்த்து நடைபெறாமல் போகும்பொழுது மனம் உடையாமல் பொறுமையாக இருந்து மகிழ்ச்சியான தருணங்கள் வரும்பொழுது அவற்றை அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு பொறுமை மிகவும் அவசியம்.
சில நேரங்களில் இனி நம்மால் வாழவே முடியாது என்ற அளவிற்கு சோர்வும், மனவருத்தமும், உணர்ச்சி வசப்படுதலும் ஏற்படும். அப்பொழுது இந்த நிலை மாறும் என்று பொறுமை காப்பது மீண்டும் மீண்டும் உயிர்த்தெழ உதவும். வாழ்வில் பொறுமையை கடைப்பிடிப்பதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ளலாம். நல்ல விஷயங்களை கண்டுபிடிக்கலாம். நமக்கு தோன்றும்படி எதையும் மாற்றி அமைக்கலாம். இவை நம்மை வெற்றிக்கான வழியை நோக்கி அழைத்துச் செல்லும்.
"காரியம் பெருசா வீரியம் பெரிசா" என்பார்கள். காரியம் நடக்கும் வரை பொறுமையாக காத்திருப்பது நம் மன உறுதியை காட்டும்.
பொறுமையாக இருப்பது என்பது நம்மை எதிர்மறை சிந்தனையிலிருந்து விடுபடவும், மனதை உள்நோக்கி கவனம் செலுத்துவதற்கும் போதுமான வாய்ப்பை வழங்குவதன் மூலம் சுய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. வாழ்வில் வெற்றி பெற பொறுமையும், மன உறுதியும் மிகவும் அவசியம். எந்த விஷயத்திலும் அவசர முடிவுகளை தவிர்த்து பொறுமையுடன் அணுக வெற்றி நிச்சயம். பொறுமை நம் திறமைகளை சாதனையாக வடிவமைக்கும்.
இலக்குகளை அடைய:
நீண்டகால இலக்குகளை அடைவதற்கு பொறுமை அவசியம். இடைவிடாத முயற்சியும், பொறுமையும் வாழ்வில் வெற்றி பெற உதவும்.
பின்னடைவு:
சவால்கள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொள்ள, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் கடினமான நேரங்களை சமாளிக்க பொறுமையும் மன உறுதியும் அவசியம் தேவை.
முடிவெடுத்தல்:
சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்காமல் அவசர முடிவுகளை எடுப்பது மோசமான விளைவுகளுக்கு வழி வகுக்கும். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் அதைப்பற்றி சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குவது சரியான முடிவு எடுக்க உதவும்.
மன அழுத்தம் மற்றும் மன பதற்றம்:
மன அழுத்தத்தை நிர்வகிப்பதில் பொறுமை முக்கிய பங்கு வகிக்கிறது. இது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் பெருமளவில் குறைக்க உதவும்.
உறவுகளை கட்டியெழுப்புதல்:
ஆரோக்கியமான உறவுகளை கட்டி எழுப்பி பராமரிக்க பொறுமை அவசியம். தவறான புரிதல்கள், மோதல்கள் ஆகியவை வலுவான உறவை அறுத்து விட அனுமதிக்கும். அம்மாதிரி சமயங்களில் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து உறவுகளை கட்டி அணைப்பது உறவுகளில் வலு சேர்க்கும்.
வாழ்வில் சில சமயம் எதுவும் திட்டமிட்டபடி நடக்காமல் போகலாம். அம்மாதிரி சமயங்களில் பொறுமையை வளர்ப்பது வாழ்வின் பல்வேறு பகுதிகளில் வெற்றிபெற உதவும்.
பொறுத்தார் பூமி ஆள்வார்"
"பொறுமை கடலினும் பெரிது"
"பொறுமை பொன் போன்றது" மண்ணின் பொறுமையும், கல்லினுடைய உறுதியும் நம் மனதில் வந்து விட வாழ்வில் உயர நமக்கு எந்த மந்திரமும் தேவைப்படாது.
பொறுமை காப்போமா?