நம்மை சுற்றி உள்ளவற்றை கவனிப்பதன் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். அது நம் வாழ்க்கையையும், வாழும் விதத்தையும் மாற்றிவிடும் என்று சொன்னால் நம்புவீர்களா?
சில சமயங்களில் குருடாக இருப்பதில் தவறில்லை. ஏனெனில் அப்போதுதான் அழகான முகத்தை விடுத்து அழகான இதயத்தைக் காண முடியும். அழகை விடுத்து குணத்தின் முக்கியத்துவத்தை உணருங்கள்.
சில சமயங்களில் செவிடாக இருப்பதில் தவறில்லை. அப்போதுதான் சிலர் பேசும் இனிமையான பொய்களை தவிர்க்க முடியும். இனிக்க இனிக்க சிலர் பேசும் பொய்களுக்கு செவி சாய்க்க தேவையில்லை.
சில சமயங்களில் ஊமையாக இருப்பதில் தவறில்லை. ஏனெனில் அப்போதுதான் தேவையில்லாத பேச்சுகளை தவிர்க்க முடியும். தேவையில்லாத இடத்திலோ, நமக்கு மரியாதை இல்லாத இடத்திலோ நாம் பேச வேண்டிய அவசியமில்லை.
சில நேரங்களில் கல் நெஞ்சக்காரராய் இருப்பதில் தவறில்லை. ஏனெனில் அப்போதுதான் உங்களின் உணர்வுகளோடு மற்றவர்கள் விளையாடினாலும் அது உங்களை பாதிக்காது. உங்கள் உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்துங்கள். உணர்வுகள் உங்களை கட்டுப்படுத்த விடாதீர்கள்.
கோபத்தில் வெடித்து சிதறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். எல்லோருடைய கருத்துக்கும் நாம் பதிலளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இக்னோர் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
மெழுகுவர்த்தியைப்போல இருக்க கற்றுக்கொள்ளுங்கள். மெழுகுவர்த்தி எப்படி இருண்டு இருக்கும் அறைக்கு வெளிச்சம் கொடுத்து பிரகாசமாக்குகிறதோ அதே போல அடுத்தவர்களின் வாழ்வில் பிரகாசத்தை பரப்புங்கள்.
மரத்தை போன்று உயரமாக வளர்ந்து நில்லுங்கள். அப்போதுதான் யாராலும் உங்கள் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது. மரத்தை போலவே வளர்ந்து வாழ்க்கையில் பல உயரங்களை தொடுங்கள்.ஆரஞ்சு ஜூஸில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
ஆற்றை போல தடைகளை உடைத்தெறிந்து விட்டு ஓட கற்றுக் கொள்ளுங்கள். அப்போதுதான் யாராலும் நீங்கள் உங்கள் இலக்கை அடைவதை தடுக்க முடியாது. உங்களுக்கு கட்டுப்பாடும் விதிக்க முடியாது.
பறவையைப்போல இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் யாராலும் உங்களுக்கு எல்லைகள் விதிக்க முடியாது. நீங்கள் உயர பறப்பதையும் தடுக்க முடியாது.
பூக்களை போல இருக்க கற்றுக்கொள்ளுங்கள். இனிமையான, வண்ணமயமான, மகிழ்ச்சியான, அழகான, தூய்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். பூக்களப் போல பிரகாசமாக சிரியுங்கள்.
எறும்புகளைப்போல இருக்க கற்றுக்கொள்ளுங்கள். பாதையில் எத்தனை கற்கள், முற்கள் மற்றும் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்க்கொண்டு வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருங்கள்.
ஈசெல் போல இருக்க கற்றுக்கொள்ளுங்கள். தன்னிடம் இருப்பது ஒரு நாள் தான் என்று தெரிந்தாலும் மகிழ்ச்சியாக வாழ பழகிக்கொள்வது போல, நம்மிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியடைய கற்றுக்கொள்ள வேண்டும்.
கண்ணாடியை போல இருக்க கற்றுக்கொள்ளுங்கள். கண்ணாடி முன்பு எது தெரிந்தாலும் அதையே பிரதிபலிப்பது போல மற்றவர்கள் உங்களுக்கு எதை தருகிறார்களோ அதையே அவர்களுக்கும் தருவதற்கு கற்றுக்கொள்ளுங்கள்.
இப்படி நம்மை சுற்றி உள்ள பறவை, செடி, கொடி, உயிரற்ற பொருட்கள் என்று எல்லாவற்றிலிருந்தும் வாழ்க்கை பாடத்தை கற்க முடியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... கவனிக்க வேண்டும்.