அவருக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லை. மனைவியுடன் சென்று டாக்டரைப் பார்த்தார். டாக்டர் முழுவதும் செக் செய்துவிட்டு கூறிய தகவல் இருவரையும் திடுக்கிடச் செய்தது. உங்கள் உடம்பிற்கு ஒன்றும் இல்லை. ஆனால்… என்று நிறுத்திய டாக்டரைப் பார்த்தனர், இருவரும் பயத்துடன்.
அவர் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர். ஒரே மகள். திருமணம் ஆகி தற்பொழுது வசிப்பது மைசூரில். இவர்கள் இருப்பது மும்பையில்.
டாக்டர் கூறினார், உங்கள் முதுகில் சிறிய பிரச்னை இருப்பதால் சில காலம் தாங்கள் அதிக நேரம் உட்கார்ந்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். படுத்துக்கொள்ளலாம், நிற்கலாம், நடக்கலாம். போகப் போக சரியாகும். கவலைப்பட வேண்டியது இல்லை என்று கூறி மருந்து, மாத்திரைகளுடன் எளிய உடற்பயிற்சி செய்யும் முறையையும் சொல்லி கொடுத்தார்.
6 மாதங்களுக்குப் பிறகு செக் அப்பிற்கு வரச் சொன்னார். டாக்டரிடம் சில சந்தேகங்கள் குறித்து கேட்டு அறிந்து நிவர்த்தி செய்துகொண்டார் அம்மனிதர்.
வீட்டிற்கு வந்த இருவரும் பேசி முடிவுக்கு வந்தனர். பல வருடங்களாக வேலை செய்துவந்த அவருக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. வேலைக்குச் சென்றால் உட்கார்ந்து வேலை செய்ய முடியாது. நின்று கொண்டு செய்யும் வேலைக்கு இவரால் போக முடியாது. என்ன செய்வது.
மனிதனுக்கு பிரச்னை என்று வரும் பொழுது அதிலிருந்து விடுபட அந்த பிரச்னைப் பற்றி நினைக்கவும், யோசிக்கவும் தோன்றுவது மனித இயல்பு. இரண்டு நாட்கள் யோசித்ததில் ஒரு யோசனை வந்தது. தனது நண்பருடன் பேசினார். நண்பரும் உதவி செய்தார்.
அம்மனிதர் இப்போது மின்சார ரயிலில் பல இடங்களுக்கு (மும்பையில்) நின்றுகொண்டே பயணம் செய்கிறார். பலரைச் சந்திக்கிறார். இவரது மென்மையாக பேசும் திறன்,பொறுமை, செய்யும் வேலையில் ஈடுபாடு, உதவும் தன்மை ஆகியவை இவருக்கு சப்போர்ட் செய்கின்றன.
ஆம். இப்பொழுது அவர் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியின் ஏஜெண்டாக பணி புரிகிறார்.
எல்லாப் பிரச்னைகளுக்கும் விடிவு உண்டு. பிரச்னையைக் கண்டு தளராமல், விடா முயற்சி (persistence), மன உறுதி (willpower) இரண்டையும் துணைக்கொண்டு, எந்த வகை சவாலையும் சமாளிக்கவும், கடந்து வரவும் முடியும் என்பதை அவருடன் உரையாடும்பொழுது தெரிந்துகொள்ள முடிகிறது!