எண்ணப் பாய்ச்சலில் அண்டவெளியில் பாய்ந்து பழகுங்கள் வெற்றி நிச்சயம்!

motivation article
motivation articleImage credit - pixabay.com
Published on

னிதர்கள் எந்த விஷயத்தையும் புதிய கோணத்தில்  பார்த்தால் சிந்தித்தால் முன்னுக்கு வரலாம். திரும்பத் திரும்ப பழைய பாணியில் சிந்தித்தலை தவிர்க்க வேண்டும்.

ஷாம்பூ என்பது ஒரு காலக்கட்டத்தில் பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருளாக இருந்தது. காரணம் அதன் விலை. இதை 1ருபாய் ப்ளாஸ்டிக் பையில் அடைத்து விற்க நினைத்தாரே அவர் மகா புத்திசாலி. புதிய மார்க்கெட் சந்தையை தனக்கு உண்டு பண்ணிக் கொண்டார். வாட்ச் ஆரம்பக் காலங்களில் மத்திய மற்றும் ஏழை வர்க்கத்துக்கு எட்டாத விஷயமாக இருந்தது. இது நகைக் கடைகளில் விற்கப்பட்டது. டைமெக்ஸ் நிறுவனம் ‌முதலில் விலை குறைந்த வாட்சுகளை அறிமுகப்படுத்தியதும்  நகைக் கடைகள் அதை விற்க மறுத்தன. டைமெக்ஸ் நிறுவனம் சோர்ந்து போகவில்லை. மருந்துக் கடைகளில் மத்திய தர மக்கள் அதிகம் வரும் இந்த இடத்தில் விற்பனை தொடங்கி பெரும் சந்தையும் பெற்றது. ஐஸ் க்ரீமில் கோன் ஐஸ்க்ரீம் பெரும் விற்பனையாகிறது. ஏன்?. உருகும் நிலையில் உள்ள  ஐஸ்க்ரீமை வைத்துச் சாப்பிட பிஸ்கட் கோனைச்சுற்றி வைத்ததால் அதற்கு டிமாண்ட் அதிகம் ஆனது. எவ்வளவு அருமையான எண்ணப் பாய்ச்சல் அது. தொழில் முன்னேற்றத்திற்கும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் இத்தகைய எண்ணப் பாய்ச்சல் அவசியம்.

ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு  காலையில் எழும் பழக்கம்  பற்றிச் சொன்னார். காலையில் முதலில் எழும் பறவைக்கு நிறைய புழுக்கள் கிடைக்கும் தாமதமாக எழும் பறவைக்கு எதுவும் மிஞ்சாது என்றார்.  உடனே ஒரு மாணவன் ஸார் அப்படியானால் முதலிலேயே எழும் புழுக்கள் கண்டிப்பாக செத்துப் போகுமே. நாம் பறவையாக இருந்தால் முதலில் எழவேண்டும். ஆனால் புழுவாக இருந்தால் தாமதமாக எழவேண்டும். சரியா  என்றான். ஆசிரியர் புழு போல் சுருண்டு விட்டார். எண்ணப் பாய்ச்சல் உங்களை ஜிவ்வென்று மேலே தூக்கும். இதை புரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
எதையும் ஒத்திப் போடுதல் சரியா..?
motivation article

உலகப் போரின்போது ஒரு குற்றவாளியை நீண்ட காலம் சிறை வைத்திருந்தார்கள். பிறகு ஒரு சமயம் அவனை விடுதலை செய்து வெளியே அழைத்தபோது அவன் மறுத்து விட்டான். காரணம் கேட்க நீங்கள் கதவுகளை திறக்கவில்லையே என்றான். உடனே ஜெயில் அதிகாரி  ஆரம்பத்தில்தான்  உன் கதவுகளை பூட்டியிருந்தோம் சில காலமாக கதவைப் பூட்டவில்லை. மனத்தளவில் நீ அடிமைப்பட்டு  சிறைபட்டிருக்கிறாய் என்றார்.

மகா பாரதத்தில் ஓர் இடம். அடிமையான பிறகு சபைக்கு இழுத்து வரப்பட்டு பாஞ்சாலி துகில் உரியப்பட்டாள். கண்ணன் சேலை கொடுத்துக் காத்தான். பிறகு பாஞ்சாலி துரியோதனனைக் கொன்று அவன் ரத்தம் பூசி என் குழல் முடிப்பேன் என சபதம் எடுத்தாள். நடுங்கிப்போன திருதராஷ்டிரன் அவளை சமாதானப்படுத்தி வரம் கேள் தருகிறேன் என்றான். பாண்டவர்கள் ஐந்து பேர்களும் அடிமை அல்ல என்று விடுவிக்கவேண்டும் என்றாள். தந்தேன் என்ற திருதராஷ்டிரன் , நீ  விடுதலை பெற கேட்கவில்லையே என்று கேட்க   பாஞ்சாலி "நான்தான் அடிமை அல்லவே. என்னை அடிமையாக்கினால்  தானே விடுதலை என்ற பேச்சே பிறக்கும்" என்றாள். தருமன் தன்னை அடிமை என்று வைத்து சூதாடினாலும் தான் அடிமை அல்ல என்றே அவள் உணர்கிறாள். அவளுக்கு இருந்த அறிவு  இன்று பல பாரத பாஞ்சாலிகளுக்கு இல்லையே. இல்லாத சிறைக்குள் எத்தனை அடிமைகள்!

எப்போதும் சுதந்திரமாகச் சிந்தியுங்கள். எண்ணப் பாய்ச்சலில் அண்டவெளியில் பாய்ந்து பழகுங்கள். நான் அடிமையல்ல என்று உணருங்கள் வெற்றி  நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com