யாரும் எதிர்பார்க்கவில்லை அந்தக் கம்பெனியின் சேர்மன் அவரை, உற்பத்தி டைரக்டருடன் (Director Production) அயல் நாட்டிற்கு அனுப்புவார், குறிப்பிட்ட செகண்ட் ஹேண்ட் மெஷினைப் பரிசோதித்து (inspect) வாங்க என்று. அது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி. எல்லா முக்கிய முடிவுகளும் சேர்மன்தான் எடுப்பார்.
ப்ரொடக்க்ஷன் டைரக்டர் நன்கு படித்தவர். ஆனால், அத்தனை அனுபவம் இல்லாதவர். பைனான்ஸ் டைரக்டர் நன்கு படித்தவர், அனுபவம் மிக்கவர். HR டைரக்டர் திறமைசாலி. மார்க்கெட்டிங், சேல்ஸ் டைரக்டர் துடிப்பு மிக்கவர். வேறு பல கம்பெனிகளில் வேலை செய்த அனுபவம் மிக்கவர்.
ஒரு நாள் சேர்மன் இந்த நான்கு டைரக்டர்களுடன் கலந்து ஆலோசித்தார். செகண்ட் ஹேண்ட் மிஷின் வாங்க முடிவு எடுத்தார். இரண்டு நபர்கள் சென்று வர முடிவு ஆயிற்று. அதில் ஒருவர் ப்ரொடக்க்ஷன் டைரக்டர். மற்றவர் பற்றி சேர்மன் மறுநாள் முடிவெடுத்துத் தெரிவிப்பதாகக் கூற, மற்ற மூன்று டைரக்டர்களுக்கு எதிர்பார்ப்பு கூடியது.
ஏமாற்றமும், அதிர்ச்சியும் பதிலாக கிடைத்தன. சேர்மன் தேர்வு செய்தவர் கம்பெனி ஆரம்பித்த நாளிலிருந்து ப்ரொடக்க்ஷன் டிபார்ட்மெண்ட்டில் வேலை செய்யும் இப்பொழுதைய ஃபோர்மன். எல்லோருக்கும் ஷாக். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த ஃபோர்மன் வளர்ந்தது கிராமப் பகுதியில். படிப்பு மிகமிகக் குறைவு. இந்தி, மராத்தி மட்டும் பேசுவார். ஆங்கில அறிவு இல்லை.
பிடிக்காமல்தான் ப்ரொடக்க்ஷன் டைரக்டர், அந்த ஃபோர்மனுடன் விமானத்தில் பறந்தார், அயல் நாட்டிற்கு. ஃபோர்மனுக்கோ அதுதான் முதல் விமானப் பயணம், அதுவும் வெளிநாட்டிற்கு.
அங்கு சென்றதும் மெஷினைப் பார்வையிட்டனர். அவர்கள் கூறியதற்கு எல்லாம் அந்த டைரக்டர் தலை ஆட்டிக்கொண்டு இருந்தார். சிறிது நேரம் சும்மா இருந்த அந்த ஃபோர்மன், அவர்களிடம் பர்மிஷன் பெற்று (டைரக்டர் உதவியுடன்) அந்த மெஷினைக் கூர்ந்து கவனித்து, சோதித்தார். அந்த மெஷின் சம்பந்தப்பட்ட, பல கேள்விகள் அவர்கள் முன்வைத்து அவர்களையும், ப்ரொடக்க்ஷன் டைரக்டரையும் திகைக்க வைத்தார்.
பக்கத்தில் வேலை செய்யாமல் இருந்த மெஷினை, இந்த ஃபோர்மன் தன் திறமை மூலம் சரி செய்து நல்ல பெயரைப் பெற்றார். அவர்கள் வழங்க வந்த பணத்தை மறுத்துவிட்டார். அது மட்டும் அல்லாமல் அந்தக் கம்பெனி சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி இவர்கள் வாங்க சென்ற மெஷினின் விலையில் ரூ 7 லட்சம் குறைத்து பேரம் பேசி, அதன் காரணம் கூறி, வெற்றி பெற்றார். இவருடைய திறமையைக் கண்டு வியந்த அந்தக் கம்பெனி, அங்கு இவருக்கு வேலைக்கான வாய்ப்பை அளித்தனர்.
வசதிகளுடன் மற்றும் அதிக ஊதியத்துடன். அதை மறுத்து, எங்கள் சேர்மன் என்னை நம்பி அனுப்பிய பணிக்கு வந்துள்ளேன், அதற்கு மாறாக செய்ய இயலாது என்று பணிவாக கூறி மறுத்துவிட்டார். வெற்றிகரமாக திரும்பிய இருவருக்கும் பாராட்டுதல்கள் மற்றும் உரிய அங்கீகாரங்கள் (due recognition) அளிக்கப்பட்டன.
இந்த உண்மை நிகழ்வு கற்பிக்கும் விஷயங்களிலிருந்து வாழ்க்கைப் பாடங்கள் பலவற்றை புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?