

இக்கிகய் (Ikigai): நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய ரகசியம். நவீன உலகின் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் அமைதியும், வாழ்வின் அர்த்தமும் தேடும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டியாகத் திகழும் புத்தகம்தான் இக்கிகய் (Ikigai). ஹெக்டர் கார்சியா மற்றும் பிரான்செஸ்க் மிராஷெஸ் ஆகியோரால் எழுதப்பட்ட இந்நூல், ஜப்பானியர்களின் நீண்ட ஆயுள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்வின் பின்னணியில் உள்ள தத்துவத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
‘இக்கிகய்’ என்பது “வாழ்வதற்கான காரணம்” அல்லது “வாழ்க்கையின் நோக்கம்” என்பதைக் குறிக்கும் ஒரு ஜப்பானிய தத்துவமாகும்.
ஒரு மனிதன் தன் ‘இக்கிகய்’யைக் கண்டறிய பின்வரும் நான்கு கேள்விகளின் சந்திப்புப் புள்ளியை அடையாளம் காண வேண்டும்:
விருப்பம்: நீங்கள் எதை விரும்பிச் செய்கிறீர்கள்?
திறமை: நீங்கள் எதில் சிறந்தவராக இருக்கிறீர்கள்?
தேவை: இந்த உலகத்திற்கு உங்களிடமிருந்து என்ன தேவைப்படுகிறது?
வருமானம்: நீங்கள் செய்யும் எந்த வேலைக்கு வருமானம் அல்லது ஊதியம் கிடைக்கும்?
இந்த நான்கு கேள்விகளும் சந்திக்கும் மையப்புள்ளியே உங்கள் வாழ்க்கையின் ‘இக்கிகய்’ ஆகும்.
வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதற்கு இக்கிகய் புத்தகம் வழங்கும் 10 முதன்மையான இக்கிகய் தத்துவம்:
1. எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்; ஓய்வு பெறாதீர்கள்:
“பயனுள்ள வேலைகளைச் செய்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். நீங்கள் விரும்பும் வேலையைச் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கு தொடர்ந்து அர்த்தம் சேர்க்க முடியும்.”
2. அவசரப்படாதீர்கள்; நிதானத்தைக் கடைபிடியுங்கள்:
“அவசரமும் பதற்றமும் வாழ்க்கையின் தரத்தைக் குறைக்கின்றன. பழைய பழமொழி கூறுவது போல, ‘மெதுவாகச் செல்பவன் வெகுதூரம் செல்வான்’.”
3. வயிற்றை முழுமையாக நிரப்பாதீர்கள்(ஹாரா ஹாச்சி பு): “நீண்ட ஆயுளுடன் வாழ, பசி எடுக்கும் அளவில் 80% மட்டுமே உண்ண வேண்டும்; மீதி 20% வயிறை காலியாக விடுங்கள்.”
4. நல்ல நண்பர்களுடன் இணைந்திருங்கள்: “நண்பர்களே மன அழுத்தத்தைக் போக்கும் சிறந்த மருந்து. அவர்களுடன் கலந்துரையாடுவதும், சிரித்து மகிழ்வதும் வாழ்க்கைக்குப் புத்துணர்ச்சி தருகிறது.”
5. தினமும் உடற்பயிற்சி செய்து உடலைப் பேணுங்கள்: “உடற்பயிற்சி என்பது கடினமான ஓட்டப் பயிற்சி மட்டுமல்ல; தினமும் செய்யும் எளிய நடைப்பயிற்சியும், உடலை அசைத்துச் செய்யும் வேலைகளுமே உடலை ஆரோக்கியமாக வைக்கும்.”
6. அடிக்கடி புன்னகையுங்கள்: “புன்னகை மனிதர்களை ஒன்று சேர்க்கிறது மற்றும் மனதை அமைதிப் படுத்துகிறது. நிகழ்காலத்தில் இருப்பதை ஏற்றுக்கொண்டு சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.”
7. இயற்கையோடு ஒன்றி வாழுங்கள்: “மனிதர்கள் இயற்கையின் ஒரு பகுதி. தினமும் சிறிது நேரமாவது திறந்தவெளியில் உலாவுவதும், இயற்கையோடு நேரத்தைச் செலவிடுவதும் மனதிற்குள் இருக்கும் ஆற்றலை மீட்டுத் தரும்.”
8. நன்றி உணர்வோடு இருங்கள்: “உங்கள் முன்னோர்கள், இயற்கை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தினமும் நன்றி கூறுங்கள். அது உங்கள் வாழ்நாளை மகிழ்ச்சியால் நிரப்பும்.”
9. நிகழ்காலத்தில் வாழுங்கள்: “கடந்த காலத்தைக் குறித்து வருந்துவதையோ, எதிர்காலத்தைக் குறித்து அஞ்சுவதையோ நிறுத்துங்கள். இன்று, இந்த நொடி மட்டுமே உங்களிடம் உள்ளது.”
10. உங்கள் இக்கிகய்யைப் பின்பற்றுங்கள்: “ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஆர்வம் அல்லது நோக்கம் ஒளிந்துள்ளது. அதைக் கண்டறிந்து, அதை நோக்கிப் பயணிப்பதே வாழ்க்கையின் உண்மையான ரகசியம்.”
இந்த 10 பொன்மொழிகளும் அன்றாட வாழ்க்கையில் மிக எளிதாகப் பின்பற்றக்கூடியவை. இவற்றை நமது பழக்கவழக்கங்களாக மாற்றும்போது வாழ்க்கை மேலும் சுவாரஸ்யமாகவும் அமைதியாகவும் மாறத் தொடங்கும்.
உங்கள் ‘இக்கிகய்’ ஒரே நாளில் வெளிப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும், அது வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதும் இல்லை; உங்கள் அனுபவங்களுக்கு ஏற்ப மாறக்கூடும். ஆர்வத்துடன் தேடுதலில் ஈடுபடுவதே இதன் முதல் படியாகும்.
இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம் அன்றாட மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, தெளிவான வாழ்க்கைப் பாதையையும் நீடித்த மன அமைதியையும் உங்களால் பெற முடியும்.