சிலருக்கு எவ்வளவு புத்தகங்கள் நாளிதழ்கள், வார இதழ்கள் இருந்தாலும் உடனே அத்தனையையும் படித்து முடித்துவிட்டு, இன்னும் இன்னும் புத்தகங்கள் வேண்டும் என்று கேட்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றிய பதிவை இதில் காண்போம்.
என் உறவினப் பெண் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 12 மணிக்கு ஒரு போட்டியில் சேர்ந்து இருந்ததற்காக பைபிளில் இருந்து குறிப்புகளை எடுத்து படித்துக் கொண்டிருந்தாள் .அதை கண்ணுற்ற அவளின் தந்தை நள்ளிரவு 12 மணிக்கு ஏதோ பாட புத்தகங்களை படிக்கிறாய் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பைபிள் படிப்பது அவசியமா? எடுத்து வைத்துவிட்டு தூங்கு போ என்று திட்டினார்.
பிறகு அந்தப் பெண் படித்ததை நினைவு கூர்ந்து கொண்டே தூங்கிவிட்டாள். அதன் பிறகு போட்டியில் பரிசு வாங்கிக் கொண்டு வந்து காண்பித்த போது தான் அவளின் அப்பாவிற்கு மகள் போட்டிக்காக தேர்வு செய்திருக்கிறாள், நாம் தான் கடுமையாக திட்டி விட்டோம் என்று புரிய வந்தது. உடனே கடைக்குச் சென்று ஏராளமான புத்தகங்களை வாங்கி வந்து அவளுக்குப் பரிசாக அளித்தார் .பிறகு அவள் கல்லூரி படித்த பொழுது ஃபைன் ஆர்ட்ஸ் செக்ரெட்டரியாக தேர்ந்தெடுக்கப்பட்டாள். அந்த மேடைகளில் பேசுவதற்காக இந்த புத்தகங்களில் குறிப்பெடுத்தும் பேசுவதுமாக நல்ல திறமைசாலியாக மாறினாள். எப்பொழுதுமே அதிகமான புத்தகங்களை படித்துக் கொண்டே இருக்கும் அவள் திருமணத்தின்போது தந்தையிடம் ஒரு கோரிக்கை வைத்தாள்.
அப்பா எனக்கு திருமண பரிசாக இதுபோல் இன்னொரு கட்டு புத்தகத்தை வாங்கி கொடுங்கள் என்று கூறினாள். உடனே அவ்வளவு தானே வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், பகவத் கீதை ,இரட்சன்ய யாத்ரிகம், திருக்குர்ஆன், சமையற்களை இன்னும் பல்வேறு வரலாறு, கலை, இலக்கியம் என்று அவருக்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று தோன்றியதோ அவ்வளவையும் ஒரு கட்டாக தூக்கி வைத்தார். அவளுக்கு வந்த சந்தோஷத்தைப் பார்க்க வேண்டுமே. இது நடந்து கிட்டத்தட்ட 22 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று அவளின் மூன்று குழந்தைகளும் புத்தக பிரியர்களாக இருக்கிறார்கள்.
இதே போல் ஒரு சம்பவம். நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இஜாஸ் ஹக்கீம். இவர் பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி பயணப்படுபவர், கதை சொல்லி, சமூக செயல்பாட்டாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். அவர் அஜ்னா நசீம் என்ற பெண்ணை திருமணம் செய்தபோது எண்பது புத்தகங்களை பரிசாக கேட்டிருக்கிறார். அவர் கேட்டதற்கு இணங்க 100 புத்தகங்களை பரிசாக கொடுத்து திருமணம் செய்து கொண்டார் என்று படித்தோம். அறிவை விட பெரிய சக்தி எதுவும் கிடையாது . வித்தியாசமான வரதட்சணையை சமூகத்துக்கு பழக்கப்படுத்திய இந்த மணமக்களை எப்படி மறக்க முடியாதோ அதேபோல் என் உறவினப் பெண்ணையும் என்னால் மறக்க முடியாது.
இவர்கள் எப்படி வாசிப்பை நேசித்தர்களோ அப்படியே நாமும் இவர்களை நேசித்தபடியே வாசிப்பையும் நேசிப்போமாக! இன்னும் அதிகமானவர்களுக்கு புத்தகங்களை பரிசாக அளித்து தாய் வீட்டு சீதனத்தில், நிச்சயதார்த்தத்தில் பெண்ணுக்கு அப்பொழுதெல்லாம் பணம் கொடுப்பது போல் புத்தகத்தை இடம் பெற வைப்போமாக!