நம் தேடல்களும், கேள்விகளும் சரியான பாதையில் பயணிக்கும் போது தான் நல்ல இலக்குகளை அடைய முடிகிறது. நம் வாழ்வும் முழுமை அடைகிறது.
எந்த இலக்கும் இல்லாமல் பயணம் செய்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.
அவன் சென்ற வழியில் ஒரு இடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது.
எந்தப் பக்கம் செல்வது என்று அவனுக்கு குழப்பம். அங்கு நின்றிருந்த முதியவரிடம், "இந்த பாதைகள் இரண்டும் எங்கே போகின்றன?" என்று கேட்டான்.
உடனே, முதியவர் "நீ எங்கே போக வேண்டும்?" என்று கேட்டார்.
"எனக்கு தெரியவில்லை," என்றான் இளைஞன்.
"அப்படியானால் எந்தப் பாதையில் வேண்டுமானாலும் போ. ஒரு வித்தியாசமும் இல்லை," என்றார் முதியவர்.
இலக்கு இல்லாதவர்கள் எங்கே போவார்கள்?
ஒரு இலக்கை கொண்டு, அதை நோக்கி சென்றால் தான் முழுமையாக அடையலாம்.
ஒரு கால்பந்து மைதானத்தில் இரண்டு அணிகளில் தலா பதினோரு வீரர்கள் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
அங்கே கோல் போஸ்ட் (Goal Post) இல்லாமல் போனால் அவர்கள் எப்படி விளையாட முடியும்?
வெற்றி தோல்வியை எப்படி அளவிட முடியும்?
ஆர்வம் மட்டுமே இருந்து இலக்கு இல்லாமல் போனால், ஒருவரின் வாழ்வு முழுமை அடையாது. ஆர்வத்தை சரியான திசையில் செலுத்துவதற்கு ஓர் இலக்கு தேவை.
எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தாண்டி அப்போதுதான் சாதிக்க முடியும்.
ஆற்றில் தண்ணீர் வருகிறது குறுக்கே பல ஏரிகள் / குளங்கள், நீர்நிலைகள் இருக்கின்றன.
ஆற்று நீர் இந்த பள்ளங்களை நிரப்பும் வரையில் தாண்டி போகாது. நிரம்பிவிட்டபின் அது மீண்டும் வேகம் எடுத்து முன்னேறி செல்லும்.
மேடு, மலை எனக் குறுக்கிட்டாலும், அதை சுற்றிக்கொண்டு சென்று கடலில் சங்கமம் ஆகும். ஒரு நதி, கடலை நோக்கிய தேடலில் தன் இலக்கை எப்படியும் அடைந்து விடுகிறது.
குடும்பம், வேலை, தொழில் வியாபாரம் என எதிலும் நன்கு திட்டமிடுங்கள்.
எந்த தருணத்திலும் இந்த செயலை நாம் ஏன் செய்கிறோம்? என்று கேள்வி மனதில் எழுப்பிக்கொள்ளுங்கள்.
அந்த செயலின் மூலம் இப்படிப்பட்ட ஒரு இலக்கை நாம் அடையப்போகிறோம் என்ற திருப்தியான பதில் கிடைக்கும் போது, அந்தச் செயலைத் தொடருங்கள். இதை இந்த நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என எல்லாவற்றுக்கும் ஒரு காலக்கெடு நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
நேர நிர்வாகமே இலக்கை அடைவதற்கு வழி செய்யும்.
சித்திரை சூரியனின் பிரகாசமான ஒளிவெள்ளம் உங்கள் பாதையில் ஒரு புது வெளிச்சம் பாய்ச்சட்டும். ஒவ்வொரு நாளிலும் கிடைக்கும் அனுபவங்களையும் மகிழ்ச்சிகளையும் சேகரித்து வையுங்கள்.
நீங்கள் தேடிச் செல்லும் இலக்கினை அடைவதற்கு அவை உங்களுக்கு உதவி புரியட்டும்.
இந்த நாளில் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற நல்லமுறையில் தொடர்ந்து நல்ல இலக்கினை தேர்ந்தெடுத்தால் வெற்றி அடையலாம்.